Wednesday, October 27, 2010

உதவி கேட்கிறேன்....ஓட்டுப் போடுங்கள்..!


நன்றி: எஸ். சதீஷ், அக்.25

சக பதிவரான திரு. எஸ். சதீஷ் அவர்களின் தளத்தை இரண்டு நாளுக்கு  முன் படித்தேன்....அதில் முக்கியமான ஒருவரை பற்றி எழுதி இருந்தார்....அவர் பெயர் திரு. நாராயணன் கிருஷ்ணன்.  நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

யார் இந்த கிருஷ்ணன்...?!!

சமையல்கலைப் படிப்பு படித்துத் தங்கப் பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த  சமயம்......தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக  மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தைத் தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதைத்” தூள்தூளாக்கிவிடுகிறது!

நம்மவர்கள்  ஹோட்டல் சென்றாலும் அதிக பணம்  கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது  சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!!  கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!!  இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு  நாம ஏன் உணவளிக்கக் கூடாது....? கண்டிப்பாய்ச் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்... 

இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21.  

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொள்ளி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   

வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!

சி.என்.என். தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

இந்த வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பெற இணையவாசிகளான நாம் உதவி செய்யலாமே......இந்த உதவியைத் தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.....

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சென்று அவருக்கு வோட் பண்ணுங்கள்....


பின் குறிப்பு
 
நண்பர்களே இப்பதிவு நம் சக வலைப்பதிவு சகோதரர் திரு. எஸ். சதீஷ் 
அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் பதிவிடுகிறேன் அவருக்கு என் நன்றி...

இந்த மனிதநேயமிக்க மனிதருக்கு நம் செய்யும் பேருதவி ஒரு ஓட்டு போடுவதுதான்..

1 comment:

  1. ஏற்க்கனவே போட்டாச்சு ... பகிர்விற்கு நன்றி

    ReplyDelete