Thursday, January 7, 2010

எழுந்து விழுந்த பிணம்

அண்ணன் தட்டையும்
விளக்கினா என்ன…
விளக்குமாறால் சாத்தினாள் அம்மா
‘மாடியில் என்ன உலாவல் உனக்கு’
உருட்டி மிரட்டி அடித்தார் அப்பா
‘உனக்கென்ன பேச்சு என் நண்பனிடம்’
நங்கென்று கொட்டினான் அண்ணன்
பிறந்த வீடு மறந்து
புகுந்த வீடு போனாலும்
மாறாது கிடைத்தன அடிகள் மட்டும்
ஐயிரண்டு திங்கள்
வயிற்றில் சுமந்தவனும்
அடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டான்
செத்த பிறகு சுடுகாடு சென்றால்
அடக்கிய ஆசைகள் கிளர்ந்ததில்
விறைத்து எழுந்தது
பட்டென்று ஓர் அடி
வெட்டியான் போட
அடங்கி வெந்தது பிணம்.

No comments:

Post a Comment