Monday, May 13, 2013

சித்ராவும் கடவுளும் தனிமையும்



நன்றி: தினமலர் பெண்கள் மலர்.


கைகள் மேசையில் இருந்த கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும் சித்ராவின் கண்கள் கடிகாரத்துக்குச் சென்று மீண்டது. மணி 5.30 ஆச்சா.. அப்ப எல்லாத்தையும் எடுத்து வைக்க வேண்டியதுதான் மனசுக்குள் நினைத்துக்கொண்டே அந்த அலுவலகத்தின் கழிவறைக்குப் போனாள். அவளைப் போலவே இன்னும் பலர் நிற்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். மனசுக்குள், செய்ய வேண்டிய வேலைகள் ஒரு முறை வந்து போனது.

துணி துவைக்கணும்.. மூணு நாள் துணி, சேர்ந்து போயிருக்கு. போகும்போதே காய்கறி பால் எல்லாம் வாங்கிட்டுப் போகணும். காலையில் இஸ்திரி போடக் கொடுத்த துணியை வாங்கி வைக்கணும்.. தையல்காரர் ஜாக்கெட் தைச்சி முடிச்சிருந்தா அதிர்ஷ்டம்.. நாளைக்கு வெள்ளிக்கிழமை.. புதுப்புடவை கட்டிட்டுப் போகலாம் மனத்தின் அலைவரிசையில் எண்ணங்கள் ஒரு பக்கம் ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தெரிந்த முகங்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்து, முகம் கழுவிக்கொண்டு தன் இருக்கைக்கு வந்தாள். பையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையத்திற்குப் போனாள். திரும்பிப் திரும்பிப் பார்த்துத் தன் பேருந்துத் தோழி சுபாவைத் தேடிக்கொண்டிருக்கும்போதே, PP66 மூச்சுத் திணறலின் முனகல் சப்தத்தை வெளியிட்டபடி வந்து நின்றது.

இரு புறமும் பேருந்துகள் நிறையத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவுநேரம் இந்தக் கூட்டம் எங்கேதான் இருந்ததோ என்று புலம்புமளவுக்கு முட்டித்தள்ளிக்கொண்டு ஏறினர். சித்ராவுக்குச் சற்றே படபடப்பாக இருந்தது என்றாலும் எப்படியோ முண்டித்தள்ளி ஏறி, ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தாள். கடவுளின் ஆசீர்வாதம் அன்றைக்கு முழுமையாக இருந்தது என்று நினைத்தாள்; அது ஜன்னலோர இருக்கை. படபடப்பு குறைந்து, காதில் வாக்மேனைச் செருகினாள். சுதா ரகுநாதனின் குறையொன்றுமில்லை மனத்தை மெல்ல இயல்புக்குக் கொண்டு வருவதை உணர்ந்தபடியே குறையொன்றுமில்லைன்னு சொல்லியேதான் நம் குறைகளை மறக்கணும்போல என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

நடத்துநர் கிட்டே வந்து விட்டிருந்தார். பூந்தமல்லி என்று சொல்லிச் சில்லறை கொடுத்தாள். அவ்வப்போது பார்ப்பதால் ஏற்பட்ட பரிச்சயத்தில் அவள் சொல்லுமுன்னாலேயே சீட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டுச் சில்லறையைப் பையில் போட்டபடியே கூட்டத்தைப் பொருட்படுட்தாமல் முன்னால் நகர்ந்தார்.

காது பாட்டுக்குள் ஆழ்ந்துபோக, குளத்தில் எழும் வட்ட வட்ட அலைகளைப் போல மீண்டும் மனத்துள் வீட்டு வேலைகள் நினைவுக்கு வர, முதலாவது அடுத்தது என்று வரிசைப்படுத்தத் துவங்கினாள். நிறுத்தம் வருவதற்குச் சற்று முன்னரே எழுந்து மெல்ல மெல்ல நகர்ந்து படிக்கட்டுக்கருகே உள்ள கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு குலுங்கலுடன் நின்ற பேருந்திலிருந்து மலர் உதிர்வது போல இறங்கினாள். ரொம்பக் களைப்பாக இருந்தது. கைப்பையை எடுத்துத் திரும்பி மாட்டிக்கொண்டு, கையிலிருந்த பெரிய பையில் இருந்த அலுவலகக் கோப்புகள் சிலவற்றை ஓரமாக நகர்த்திவிட்டுக் கீழே காய்கறி வாங்க வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து மேலே வைத்தபடி நகர்ந்தாள்.
சித்ராவின் உடலில் இரும்புக்குண்டு வைத்துக் கட்டியதுபோல வலித்தது. பை கனத்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையை உடனே புறந்தள்ளியவளாய்க் களைத்துப்போன கால்களை மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். சூரியன் விழுந்துவிட்டது. பத்து நிமிட நடையில் வீடு என்றாலும் நடக்க நடக்க வீடு இன்னும் தள்ளித் தள்ளிச் செல்வதுபோலத் தோன்றியது. மூச்சு வாங்கியது. நாக்கு வறண்டது. உடலெங்கும் வியர்வைக் கசகசப்பு. காய்கறிக் கடையில் சுமைப்பையை இறக்கி வைத்து ஆசுவாசத்துடன் அடுத்தநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிக்கொண்டாள். அடுத்த ஐந்துநிமிட நடையில் ஆவின் பால்கடை. பெரியவருக்கு அவள் மேல் கொஞ்சம் கரிசனம். வாடிய முகத்துடன் வரும் அவளிடம் கனிவுடன் விசாரிப்பார். பால் வாங்கிக்கொண்டு மெதுவாக நடையைத் தொடர்ந்தாள். இதோ ஆரஞ்சு வீடு.. இன்னும் கொஞ்சதூரம்தான்.. நாடார் கடையும் வ்ந்துருச்சு.. தனக்குத்தானே ஆறுதல் சொல்லியவளாய்த் தான் குடியிருக்கும் நீல வண்ண வீட்டைக் கண்டதும் அப்பாடா, கொஞ்சசேரம் தரையில் அப்படியே படுத்துரணும் என்று நினைத்தபடி படியேறினாள். பையில் எப்போதும் சாவிகள் வைத்திருக்கும் ஜிப்பைத் திறந்து கை விட்டாள். அடிவயிறு சிலீரென்றது. சாவியைக் காணோம். எப்பவும் இங்கதானே வைப்போம்.. பரபரப்பாய்த் தேடத் தொடங்கினாள். பூட்டியிருந்த வீடு அவளுடைய களைப்பை இன்னும் அதிகப்படுத்தியது. பை முழுக்கத் தேடியும் இல்லை என்று உறுதிப்படுத்தியபிறகு என்ன செய்வது என்ற கேள்விஎழுந்தது.

இரண்டு மூன்று தெரு தள்ளி அகிலா மிஸ் வீடு இருந்தது. தெரிந்தவர்தான். அவர் வீட்டுக்குப் போவோமா? அவ்வளவுதூரம் நடக்கக்கூடத் தெம்பே இல்லையே. யாரிடம் எரிச்சல் கொள்வதெனத் தெரியாமல் தன்னையே திட்டிக் கொண்டாள். பையில் வைத்த சாவி எப்படிக் காணாமல் போகும்? தன்னையே சபித்துக்கொண்டு காலையிலிருந்து நடந்ததை மனத்துக்குள் அசை போட்டாள். எப்போதும் சித்ராதான் வீட்டைப் பூட்டிவிட்டு இறங்குவாள். சித்ரா, பிரகாஷ் இருவருமே ஆளுக்கொரு சாவி வைத்திருந்தனர். சித்ராதான் முதலில் வருவாள். அதற்கே 6.30, 7 ஆகி விடும். மின்சாரம் இருக்கும்போதே அரைக்க வேண்டியதை எல்லாம் முடித்து விடுவாள். வீடு பெர்க்கி, சாமி விளக்கேற்றி, துணி துவைக்க வேண்டியிருந்தால் இயந்திரத்தில் போட்டு எடுத்து அக்கடா என்று உட்காரும்போது மின்சாரம் போய்விடும். அப்போதுதான் பிரகாஷ் வந்து சேருவான்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் அவனும் ஒருவன். காலை இருவருமே அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகத்துக்கு விரையும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவளை நிறுத்தத்தில் இறக்கிவிட்டுப் பாதி வழி தன் வண்டியில்போத் தெரிந்தவர் ஒருவரின் கடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து பிடித்துத் ட்ஹன் அலுவலகத்துக்கு விரைவான். காலை அவசரத்தில் பிரகாஷ் அவள் கையிலிருந்த சாவியைப் பிடுங்கிப் பூட்டியது சித்ராவுக்கு நினைவுக்கு வந்தது. அச்சச்சோ.. அவன் சாவியைத் திருப்பித் தரவே இல்லையோ.. வீட்டு வாசலில் நின்று தன் தலையில் அடித்துக் கொண்டாள். அமைதி என்று பதற்றமடையும் மனத்துக்கும் துவளும் தன் கால்களுக்கும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள்.

நேற்று இரவே உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்துக்கு இருவரும் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. தனக்குத் தானே ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லியபடி தன் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பிரகாஷுக்குத் தொலைபேசினாள். பிரகாஷும் இரவுச் சண்டையை நினைவுகூர்ந்தவனாய், எரிச்சலுடன், சாவியை ஞாபகமா வாங்கி இருக்கலாம்ல என்று கேட்டபோது தன் அறிவுரைகளை எல்லாம் ஒரு கணத்தில் கைவிட்டவளாய், நீங்கதான் கொடுத்திருக்கலாம்ல என்று வெடித்து விட்டுப் பின் நாக்கைக் கடித்துக்கொண்டே, ஒண்ணும் பிரச்சனையில்லே. நீங்க வர்றவரைக்கும் நான் அகிலா மிஸ் வீட்ல இருக்கேன். நீங்க பதற்றப்பட்டு வேகமால்லாம் வண்டிய ஓட்டிக்கிட்டு ஓடி வர வேணாம். நிதானமா வாங்க என்று சொல்லிவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.
அகிலா மிஸ் வீட்டில் இருப்பார்களா என்று தெரியவில்லை. எதற்கும் பேசிவிட்டுப் போவோமென்று நினைத்து அகிலாவுக்குப் பேசிய சித்ராவுக்கு ஏமாற்றம்தான். யாரும் எடுக்காமல் ஒரு இனிமையான பாடலைப் பாடியபடி நின்றுபோனது. பாடலை ரசிக்கவும் மனமின்றி என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்றவளுக்குத் தான் வெகுநேரமாக வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பது உறைத்தது. பக்கத்து வீட்டில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும்போதே தெருவில் யாரோ இருவர் பேசிக்கொண்டுபோன குரல் கலைத்தது. அதில் கோயில் என்ற சொல்லைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஆமாம், யாரையுமே தொந்தரவும் செய்ய வேண்டாமே, பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கோயிலில் போய் உட்காரலாம். பிறகு கடவுள் விட்ட வழி என்று நினைத்தவளாய் இரண்டு சந்து தள்ளியிருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.

நல்லவேளை கருவறை பூட்டியிருந்தாலும் வெளிக்கதவு திறந்திருந்தபடியால் உள்ளே நுழைந்து அமர்ந்தாயிற்று. கொஞ்சநேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். யாருமற்ற அந்தக் கோயிலில் தானும் கடவுள்களுமாக உட்கார்ந்திருப்பது சற்றே வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது. பக்கத்தில்தான் இருந்தும் இதுவரையில் அந்தக் கோயிலுக்கே வந்ததில்லையென்பதும் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வந்தது. பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து கோயிலை ஒரு முறை சுற்றி வந்தாள். ரொம்பச் சின்னதாகவுமில்லாமல், பெரியதாகவுமில்லாமல் இருந்தது. ஒரு சிறிய கிணறும் ஒழுங்கில்லாமல் வளர்ந்திருக்கும் மலர்ச்செடிகளும் சிறிய பிரகாரமும் அதில் உள்ள தேவதைகளுமாக எல்லாமே மனத்துக்கு இதம் தந்தது. சுற்றிவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள். கைபேசியை எடுத்துத் தான் கோயிலிலிருப்பதையும் சண்டைபோடும் மனநிலையில் இல்லை என்பதையும் ஒரு குறுஞ்செய்தியாக அவனுக்குத் தட்டிவிட்டு, பாட்டியுடன் வரும் இரு குழந்தைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.


கொசுக்கள் நடமாட்டம் தாங்க முடியவில்லை. புடவையை எடுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொண்டாள். அப்போதும் வெளிப்பட்டிருக்கும் உடலின் மிகச் சில இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்போ என்ன செய்வீங்க என்று பாடிக் கொண்டிருந்தன கொசுக்கள். அதைத் தன் இரு கரங்களாலும் தட்டித்தட்டி வரவேற்றவளைத் தன் இனிய கீதத்தால் அவை மகிழ்வித்தன. பாட்டியும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்தாள். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கின. சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், அலுவலகத்துக் கோப்புகளை எடுத்து வைத்து விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தாள்.  ஒரு வழியாகக் குருக்களும் அவருடைய மகனும் குடம், நைவேத்தியம் சகிதமாக வந்து சேர்ந்தனர். இன்னும் ஒரு பெண், தன் சிறு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அவள் குருக்களுக்கு முன்னரே அறிமுகமானவள் போல.. அவளை வாழ்க வளமுடன் என்று வரவேற்றவராய்க் குழந்தைகளைக் கொஞ்சினார். வாய் வருபவர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருக்க, தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தார். பூட்டியிருந்த கதவைத் திறந்து உணவை உள்ளே வைத்தார். சிறுவன், குடத்தை எடுத்துப்போய்க் கிணற்றிலிருந்து நீரெடுத்து வந்து கொடுக்க, உள்ளே இறைவனுக்கு நீராபிஷேகம்.. பூ அலங்காரம்.. புரியாத மொழியில் பூசை.. கொண்டு வந்திருந்த ஒரே தட்டு உணவை மூலவருக்கும் பிரகாரத்தில் உள்ள தேவதைகளுக்கும் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாகத் தான் கொண்டு வந்திருந்த கூடையில் எடுத்து வைத்துக் கொண்டார். வேடிக்கையாக இருந்தது சித்ராவுக்கு. சிரிப்பும் வந்தது. கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து நின்று பூசையில் கலந்து கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒத்திகொண்டு நின்றாள். அந்தக் குழந்தைகள் கம்பியின்மீதேறி விளையாடிக் கொண்டிருந்தன. பெண் குழந்தையின் முட்டியில் கட்டுப் போடப்பட்டிருந்ததைக் குருக்கள் விசாரித்துக் கொண்டிருந்தார். சித்ராவும் அப்போதுதான் அதைக் கவனித்தாள். அந்த அம்மாவுக்குக் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. குழந்தைக்கு இன்றைக்குப் பிறந்தநாளென்றும் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாளென்றும் குருக்களிடம் குறைபட்டுக் கொண்டவளாய், குழந்தைகளின் பேரில் அருச்சனை செய்யச் சொன்னாள்.
மீண்டுமொருமுறை வாழ்க வளமுடன் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவராய் அருச்சனை செய்து குழந்தையின் நெற்றியில் குங்குமம் வைத்துத் தன் வாழ்த்துகளைச் சொன்னார். சித்ரா தூணோரம் அமர்ந்தவளாய்க் குருக்களையே கவனித்துக் கொண்டிருந்தாள். மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இடையில் வரும் ஒவ்வொருவரிடமும் வாழ்க வளமுடன் என்று சொல்லிக்கொண்டே தெரிந்தவர்களைப் பெயர் சொல்லி அழைத்தும் விசாரித்தும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மகன் தண்ணீர் எடுத்துக் கொடுத்து விட்டு ஓடி விட்டிருந்தான். கோயிலின் ஒரு ஓரத்திலிருந்த ஒற்றை அறைக்குள் சென்று ஏதோ செய்து கொண்டிருந்தார். மின்சாரம் வந்த ஒரு அரைமணி நேரம் பக்திப் பாடல்களை மைக் மூலமாகப் போட்டிருந்தது கூட அந்த நேரம் இதமாகவே இருந்தது. இப்போதெல்லாம் எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின்மூலமாகவே இயங்கும் மேளங்கள் இங்கும் இருந்ததைக் கவனித்தாள்.

கூட்டம் மெல்ல மெல்லக் குறைந்தது. இடையில் வந்த ஒரு அலைபேசி அழைப்பைத் தவிர்க்க முடியாமல், கோயிலில் நிற்கும் சங்கடத்துடனே பேசி வைத்தாள். குருக்கள் கிளம்பிடுவாரோ என்ற எண்ணம் எழுந்ததும் பகீரென்றது. கோயிலைப் பூட்டினால், இப்போது எங்கே போவது என்று பயந்தாள். படியில் அமர்ந்திருந்த குருக்களிடம் சென்று கோயில் நடை சாத்தும் நேரத்தை விசாரித்தாள். ஒன்பதாகி விடுமென்ற அவருடைய பதில் சில்லென்று அவளுடைய வயிற்றில் இறங்கியது. சாவி கணவரிடம் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொல்லி, அவர் வரும்வரையில் அவளுக்குப் போக்கிடமில்லையென்பதையும் உணர்த்திவிட்டு மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள். அலுவலகக் கோப்புகளைக் கையிலெடுத்து அமைதியாகத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். இடையில் ஓரிருவர் கோயிலுக்கு வந்து போயினர். பிரகாஷ் ஒரு முறை பேசினான். பேருந்து ஊர்ந்து கொண்டிருப்பதைச் சொல்லித் தவித்தான். பாவமாக இருந்தது. தான் ஒரு குறையுமில்லாமல் கோயிலுக்குள் உட்கார்ந்திருப்பதைச் சொல்லித் தாமதமானாலும் பரவாயில்லையென்றாள்.

அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் மற்றொருவருடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் சற்றே ஆச்சரியமாகப் புன்னகைத்தபடி விசாரித்தார். அவள், சற்றே சங்கோதத்துடன் மீண்டும் தன் சாவிக் கதையைச் சொல்லிவிட்டுக் கோப்புக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தெரிஞ்சவாளா என்று அவரிடம் என்னைப் பற்றி விசாரித்தார் குருக்கள். பிறகு அவர் கொண்டு வந்திருந்த ஜாதகம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எதையும் காதில் வாங்காதவளாய்த் தன் வேலையில் மூழ்கி அதையும் ஒரு வழியாய் முடித்தவளை மறுபடியும் அலைபேசி சிணுங்கி அழைத்தது. பிரகாஷ்தான். வந்துவிட்டிருப்பானென்று பரபரத்தவளை வண்டி பங்க்சர் என்ற அவனுடைய தவித்த சொற்கள் காலி செய்தது. மீண்டும் தன்னை நிதானித்துக்கொண்டவளாய், ஒன்றும் அவசரமில்லை. நான் இங்கேதான் இருக்கேன். பசியில்லை. குருக்கள் இருக்கார்.. சாமியெல்லாம் கூட துணைக்கு இருக்காங்க.. மின்விசிறி கூட இப்போ சுத்த ஆரம்பிச்சுடுச்சு என்று தான் இயல்பாய் இருப்பதை அவனுக்குத் தெரிவித்து, வேலையை முடித்துக் கொண்டு வரச் சொன்னாள். 
அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் ஏதோ ஒரு உறவினரின் மகன் திருமணம் தள்ளிப் போவதைப் பற்றிச் சொல்லிக் குருக்களிடம் கவலைப்பட்டார். பிரகாஷின் வண்டி ஓசை கேட்டது. சித்ரா அயர்ச்சியில்லாமல் மெதுவாக எழுந்து நின்றாள். வீட்டிலிருந்தால் கூட இவ்வளவு ஓய்வாக இருந்திருக்க மாட்டோமென்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பிரகாஷ் பயந்தவனாய், அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரித்துக் கை குலுக்கி, நலம் விசாரித்துவிட்டு, போகலாமா? என்றான். இருவருமாக கோயிலைச் சுற்றி வந்து வணங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கீழே விழுந்து வணங்கி விட்டு, சாஸ்திரத்துக்கு அமர்ந்து எழுந்தனர். பிரகாஷ் அவளுடைய கனத்த பையைத் தன் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்தான்.

குருக்கள் மீண்டும் அந்தப் படியில்போய் அமர்ந்து கொண்டார். கோயிலில் யாருமேயில்லை. குருக்களுடைய மகன் வந்து பிரகாரத்துக் கதவுகளைப் பூட்டத் தொடங்கினான். கருவறையில் இருந்த கடவுளைப் பார்த்தபடியே வெளியே வந்த சித்ரா மெல்ல வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஏனோ  கடவுளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். பிரகாஷ் அன்று பார்த்து வண்டி பங்க்சர் ஆன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். காதில் வாங்கியும் வாங்காமலும் கேட்டுக் கொண்டிருந்தவளைசமைக்க வேண்டாம்; நான் வாங்கிக்கிட்டு வந்துடுறேன் என்ற குரல் கை பிடித்து இழுத்தது.  ஒரே சமயத்தில் லேசாகவும் வருத்தமாகவும் இருக்கும் தன் மனத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.    

Thursday, December 13, 2012

கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்

நன்றி: பாவையர் மலர்

"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்" 

என்று பட்டுக்கோட்டையார் எழுதியிருப்பார். அத்துடன் பேசிக் கெடுத்தவர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசிக்கு மக்கள் சமூகமே அடிமைப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நாளைய சமூகத்தை உறுதியுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொள்ள இருக்கும் இளைய பட்டாளம் மாணவர்களும் அந்தச் சுழலுக்குள் சிக்கியிருப்பது பெரும் ஆபத்துக்கான அறிகுறியாய் இருக்கிறது. இன்றைய கல்விமுறையில் வழங்கப்படும் வினாத்தாட்கள் அறிவின் விரிவைப் பெருக்குவதாக இல்லை. சுய அறிவைப் புறந்தள்ளி, மனன அறிவையே ஊக்குவிக்கிறது. கற்பனைத் திறனைப் பெருக்கும் கேள்விகள், கட்டுரை, கடிதம் ஆகிய வினாக்களெல்லாம் ஆசிரியரின் பாரபட்சமான மதிப்பெண்ணைப் பெறும். அது ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கும் முறைமையை அளிக்காது என்ற எண்ணத்தில் மேற்சொன்னவற்றை எடுத்து விட்டது, மொழிவெளியெங்கும் பிரதிபலித்துக் கிடக்கிறது. சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளில் மாணவர்களின் முகங்களுக்குப் பதிலாகப் பிழைகளே பதிந்து கிடக்கின்றன. அதையும் அழகு என்று சொல்லி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கல்வித்துறை.

இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள். குறுஞ்செய்தி அனுப்பும் இவர்கள் குறுஞ்செய்தியை இன்னும் குறுமையாக்கி அனுப்புவது பெரும் கொடுமை. ஆங்கிலமானாலும் தமிழானாலும் மொழியைச் சுருக்கி, சொற்களைக் குறுக்கி, எழுத்துப் பிழையைச் சரியான ஒலி வடிவத்துடன் மட்டும் அடித்து அனுப்பும் வித்தையை எந்தத் துரோணரிடமிருந்து கற்றார்களோ என்று தெரியவில்லை. O.k என்பது k ஆகி விட்டது. Orl correct என்பதன் சுருங்கிய வடிவமே o.k அதனை இன்னும் சுருக்கி k ஆக்கி விட்டார்கள். And என்பது n ஆகி விட்டது. இப்படித் தமிழையும் இப்போது சுருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் அதே மனம், விடைத்தாளிலும் வேகமாய் எழுதும்போது இந்தச் சுருக்க மொழியையே பயன்படுத்துகிறது. மெல்ல மெல்ல இதுவே இன்றைக்குப் பயன்பாடாகிக் கொண்டிருக்கிறது. கூடாரத்துக்குள் நுழையும் ஒட்டகம் கூடாரத்தையே சாய்த்துச் செல்வது போல, ஏற்கெனவே சீரழிந்து கிடக்கும் மொழி வெளி இன்னும் கம்பிக்குள் சிக்கிய துணியாய்க் கிழிந்து கிடக்கிறது. 

மொழியின் உண்மைப் பயன்பாடு, அதன் உணர்வுத் தளம், கருவியாய் மட்டுமின்றி நம் உள்ளும் புறமும் மொழி நிகழ்த்தும் அரசியல் செயல்பாடுகள் என எதைப் பற்றிய அறிவுமின்றித் தங்களையே மெல்ல இவர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

"மெல்லத் தமிழினிச் சாகுமென்றந்தப்
பேதை உரைத்தான்"

என்று பாடிய பாரதி அழிந்து போன நம் மொழியை எண்ணி வருந்தியும் அழித்த தமிழர்களைச் சபித்தும் பாடல்கள் புனைந்திருப்பான்.

தன் மொழியை, அதன் செழுமையை, இலக்கிய வளத்தை, வரலாற்றை உணராத சமூகமாக நம் நாளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. உழைப்பு, விடா முயற்சி ஆகிய நல்ல பண்புகளை, அதனால் வெற்றி கொண்டவர்களை அது கவனிக்க மறுக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் இப்படி இருப்பதை வருத்தத்துடன் பேச வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லா இளைஞர்களையும் இப்படிக் குற்றம் சொல்லவில்லை. இன்னமும் நம்பிக்கை தரும் சில இளம் குருத்துகள் நம்மிடையே நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தொலைக்காட்சி, அலைபேசி, இதழ்கள் எனப் பல்வேறு அசுரப் படையெடுப்புகளால் இளைய சமுதாயம் புண்ணாகிக் கிடப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

மாணவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் திரையுலகைப் பின்பற்றி இருக்கிறது. ஒரு சூத்திரத்தை மனனம் செய்ய முடியாத மனம், பக்கம் பக்கமான வசனங்களை, இரட்டை அர்த்தப் பாடல்களை அநாயாசமாகப் பேசுகிறது; பாடுகிறது. சிறியன சிந்தியாமல் வளர்க்கப்படவேண்டிய நம் நாற்றுகளெல்லாம் சின்னப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு இல்லாத சமூகம் ஒன்றுக்கும் உதவாமல் மிக விரைவில் அழிந்து போகும். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நம் சமூகத்தின் தமிழறிஞர்களை, போராளிகளை, சமூக ஆர்வலர்களை, படைப்பாளர்களை விழைய வேண்டிய பிஞ்சுகள் நடிக, நடிகையரின் பாதங்களில் மண்டியிட்டுக் கிடக்கின்றன. 

உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவர்கள் துன்பத்திலிருக்கின்றனர். மாற்றம் பற்றிப் பேச வேண்டிய ஊடகங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றது. 
தமிழ்த்தாய் வாழ்த்தையும் நாட்டு வாழ்த்தையும் பாடக் கூச்சப்படும் அவர்கள் தரக் குறைவான பாடல்களைப் பாடியும் அதற்கு ஆடியும் பரிசில் பெற வரிசையில் நிற்கிறார்கள். 

வகுப்பறை ஒழுங்கு என்பது இன்றைக்குக் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. பாடல்களில் ஆங்கிலக்கலப்பும் அர்த்தமற்ற ஒலிக் கோவைகளும் நுழைந்து கோலோச்சுகிறது. நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் சிறுவர்களென அவர்கள் ஆபத்தையறியாமல் ஓடுகின்றனர். 

அரசு கவனம் செலுத்த வேண்டிய இவ்விஷயம் இன்னும் கையெடுக்கப்படாமலே இருக்கிறது. புறக்கட்டமைப்பில் செலுத்தும் கவனத்தை அகக் கட்டுமானத்திலும் செலுத்தும்போதுதான் மாணவர் உள்ளம் பண்பட்டதாய் மாறும். அதற்கு அரசு அதன் பாடத்திட்டத்தில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக 11, 12 வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரே பாடத்தைத் தொடர்ந்து எடுத்துச் சோர்ந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இது அவர்களுடைய பாடம் எடுக்கும் திறனை, கற்பனை ஆற்றலை வலுக் குன்றச் செய்யும்; செய்கிறது.

சமச்சீர்கல்வி என்று சொல்லப்பட்டாலும் அது சமச்சீராய் இல்லையென்பதை, இவ்விஷயத்தைத் தொடர்ந்து அவதானித்து வந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு பகுதி, அடிப்படைக் கருத்துகளுக்கு முதன்மைதந்தும் மற்றொரு பகுதி எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அதற்குத் தேவையானவற்றையும் கோர்த்து மாலையெனத் தொடுத்தால் அழகான மாலையாகும். அல்லாவிட்டால் அது குரங்குகைப் பூவாகும். நம்மிடமிருப்பது மாலையா குரங்கு கைப்பூவா என்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் பல திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் அப்படியான பாடத்திட்டம் நம்மிடையே இல்லை என்பதே உண்மை. மனப்பாடம் செய்தல், கவனித்தல், கவனித்தவற்றை மொழியாக்கி எழுத்தில் வடித்தல், இசையாக்குதல், நாடகமாக்குதல், தனி நடிப்பாக்குதல் என ஏராளமான திறமைகளை வெளிக் கொண்ரலாம். 

அடிப்படையான கவனிக்கும் திறன் மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கூர்ந்து கவனித்தலை, சிந்தித்தலை அழிக்கும் விதத்திலேயே இன்றைய கல்வி முறையும் அமைந்திருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்று அன்று. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஓவியம் வரைதல் போன்ற திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் படிக்கும் எழுதும் திறனை அழித்து விடுவதாகவே இன்றைய ஆசிரியர்கள் கருதுகின்றனர். இது மாணவர்களை வேலைவாங்கும் திட்டமாகவன்றி ஆசிரியருடைய சுமையை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. 

"அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்"

என்பது பாரதி வரிகள். ஊடகத்தின் வழியாக மொழி வளமையைச் செழிக்கச் செய்யாமல் அழிக்க நினைப்பது தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்வதற்குச் சமம். எனவே சரியான பாடத்திட்டத்தை, அரசின் குறுக்கீடுகளின்றி உருவாக்கும் அறிஞர்களின் உதவியுடன் தயாரித்து மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். மொழிப் பயன்பாட்டில் சற்றே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருந்து படைப்பாற்றலை வளர்க்கச் செய்தாலே மொழி வளம் பெறும். சிறந்த படைப்பாளர்களை உருவாக்கிச் சமுதாயத்திற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடையாக இவர்கள் இருப்பார்கள். 


Saturday, September 8, 2012

அலைபேசி அடிமைகள்

- தி.பரமேசுவரி


நன்றி: பாவையர் மலர்

அண்மையில் வந்த வழக்கு எண் 16/9 படத்தைப் பார்த்தபோது அது பல நினைவுகளைக் கிளர்த்தியது. அறிவியல் தொழில் நுட்பங்களை நல்லதாகவும் அல்லதாகவும் பயன்படுத்தும் மனித மனம் குறித்து வருத்தமும் கவலையும் ஏற்பட்டது. இன்றைக்குக் கையில் அலை பேசி இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். வறுமைக் கோட்டில் வாழ்பவர்க்கும் தம் வேலை நிமித்தம் பேசிகள் தேவையாயிருக்கின்றன. இவை குறிப்பாக மாணவரிடத்துச் செலுத்தும் தாக்கம் கவனிக்குமிடத்துப் பெரும் கவலை சூழ்கிறது. 

12 ஆம் வகுப்பு படிக்கும் திலீப், அஜீத் குமார், விஜய், தமிழரசன், சந்தோஷ் தினமும் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவார்கள். அதைப் பிற மாணவர்களிடம் காட்டிப் பெருமைப்படுவதன்மூலம் தங்களை உயர்த்திக்கொள்வதாக அவர்களுடைய எண்ணம். மதிய உணவு நேரத்தில், ஆசிரியர் இல்லாத பாட வேளை மற்றும் விளையாட்டு வகுப்பு நேரங்களில் குழுவாக அமர்ந்துகொண்டு அவர்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களைச் சுற்றி ஒரு பெரும்கூட்டமும் இருக்கும். ஆசிரியர் அருகில் செல்லும்போது அமைதியாய் இருக்கும் கூட்டம், இல்லாதபோது சத்தமாக இருக்கும். சின்னச் சின்னதாய் அவர்களுக்குள் சண்டைகள் தொடங்கியபோது விஷயம் ஆசிரியரின் கவனத்துக்கு வந்தது. தங்கள் அலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்ததோடு, பிற மாணவர்களுக்கும் பரிமாறியிருக்கிறார்கள். அது இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளி; சில மாணவிகள், மாணவர்கள் தங்களைப் படம் பிடிப்பதாகப் புகார் செய்ததும் நடந்தது.

மற்றுமொரு சம்பவம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளிக்கு அலைபேசியைக் கொண்டு வந்ததுடன் வகுப்பில் கணிதம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் ஆசிரியரைப் படம் எடுத்திருக்கிறார்கள். கரும்பலகையில் அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது படம் எடுத்ததை  அங்கே அமர்ந்திருந்த மாணவிகள் கூட ஆசிரியரிடம் தெரிவிக்கவில்லை. கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, தற்செயலாக அன்று உடற்கல்வி ஆசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும் சேர்ந்து மாணவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது கிடைத்த அலைபேசிகளைப் பார்த்தபோது அறிய நேர்ந்தது. அந்தப் பெண் ஆசிரியர் வேலையை விட்டே சென்று விட்டார்.

மேற்சொன்ன நிகழ்வுகளெல்லாம் நகரத்தில் உள்ள பெரிய பள்ளிகளில் நிகழ்ந்தவை அல்ல. கிராமத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் நடந்தவை. பகிர்ந்துகொள்ளத்தக்க இரண்டு நிகழ்வுகளை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். கவனிக்கப்படாமலும் சொல்லாமல் மறைக்கப்பட்டும் இன்றைக்கு ஏராளமாக நடக்கிறது. நகரத்திலிருந்தாலும் கிராமத்தில் நடந்தாலும் இது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும், குறைந்த வருமானத்தில் வாழும் குழந்தைகளையும் கூட அலைபேசிகள் அலைக்கழிக்கும் விதமே நம்மைக் கலங்கடிக்கச் செய்கிறது. கிராமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் சூழலில், தான் சம்பாதிக்கும் பணத்தைக் குடும்பத்துக்காகச் செலவழிப்பவன் கூட அதில் ஒரு சிறு பகுதியைத் தனக்காகச் செலவு செய்து கொள்வான். இத்தனை நாள் புதிய உடை வாங்குவதிலோ, நல்ல உணவு சாப்பிடுவதிலோ, அல்லது படிப்புத் தேவைக்காகவோ பயன்படுத்திய பணத்தை இப்போது சந்தைக்குப் புத்தம்புதிதாகப் பல நவீன வசதிகளுடன் வந்திருக்கும் அலைபேசிகளை வாங்குவதில் கவனம் செலுத்துகிறான்.

ஒருவன் அலைபேசி வைத்திருந்தால், மற்றவனும் அதனால் ஈர்க்கப்படுவதும் அது போல் வாங்க ஆசைப்படுவதும் அதற்காக எதைச் செய்யவும் தயாராவதும் அப்படியான செய்திகள் இதழ்களில் வரும்போது அதனை இயல்பாய் எடுத்துக் கொள்ளவும் இன்றைய சமூகம் பழகி விட்டது. முதலில் நடக்கும்போது அதிர்ச்சியாக இருப்பது பின்னர் இயல்பாகவும் ஓரிரண்டு நாட்களுக்குப் பேசுவதற்குக் கிடைத்ததாகவும் மாறி விட்டதைக் காலக்கொடுமையென்றுதான் சொல்ல வேண்டும். 

அலைபேசி ஒருவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பேசிகளை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அதனைப் பேசுவதற்காகப் பயன்படுத்துவதை விடவும் அதில் உள்ள விளையாட்டுகளை ஆடுவதிலும் குறுஞ்செய்தி அனுப்பவுமே மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். இதனால் கல்விச் செயல்பாடுகள் பாதிப்பதை உணர்ந்தே இன்றைக்குப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அலைபேசி தடை செய்யப்பட்டிருக்கிறது.

அலைபேசியால் போதைப்படுத்தப்படும் ஒரு மாணவன், அது இல்லாமல் இயங்க முடியாதவனாகி விடுகிறான். அலைபேசியை அமைதிப்படுத்தித் தன்னுடனேயே கொண்டு வருகிறான். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் கல்வி நேரங்களிலேயே  அதைப் பயன்படுத்துகிறான். சக மாணவர்களையும் அந்தப் போதைக்கு அடிமைப்படுத்துகிறான். அவர்கள் அறியாமலேயே அவர்கள் அடிமைகளாகிறார்கள். தங்கள் காலடிகளைத் தாங்களே எடுத்து வைக்கும் பக்குவமடையாத பதின்பருவ வயதில், தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே, தவறுகளைச் செய்து தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அலைபேசியால் சிறைப்படுத்தப்படுபவன், என்ன விலை கொடுத்தேனும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டதை வாங்க விரும்புகிறான்; மாற்றிக் கொண்டே இருக்கிறான். மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்ற சீனத் தயாரிப்புகளும் 5 ரூபாய்க்குக் கூட ரீசார்ஜ் செய்து அவனிடமிருக்கும் 5 ரூபாயையும் கொள்ளையடிக்கும் நிறுவனங்களும் இதற்கு உதவியாய் இருக்கின்றன. அதில் இருக்கும் சகல வசதிகளையும் அனுபவிக்கத் துடிக்கும் அவனை, அது மேலும் மேலும் தூண்டுகிறது; இறுதியில் இனி எப்போதும் எழுந்துகொள்ள முடியாத படுபாதாளத்தில் அவன் வீழ்ந்து போகிறான்.

தங்கள் கைகளில் இருக்கும் பேசிகளின் வழியே உலகத்தையே தன் முன் விரித்துக் கொள்ளும் இன்றைய மாணவர் சமூகம் அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறதா என்பதே இன்றைய மிக முக்கியமான கேள்வி. கணிப்பொறியைக் கூடப் பஞ்சாங்கம் பார்க்கவும் ஜோதிடம் கேட்கவும் பயன்படுத்தும் சமூகத்தின் வழியிலேயே இன்றைய மாணவத் தலைமுறையும் பயணிக்கிறது. யானையைக் காட்டிப் பிச்சை எடுக்கும் சமூகமென்று வருத்தத்துடனே எள்ளல் செய்வார் பிரபஞ்சன். நம் மாணவர்களும் சுற்றியிருக்கும் இயற்கையை, சமூக நிகழ்வுகளை, அழகியல் விஷயங்களை, குழந்தைகளைப் படம் எடுக்காது, தன் கவனத்தை வேறெங்கோ பதித்திருக்கும் சக மாணவிகளை, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பெண்களை வயது வித்தியாசமின்றி ஆபாசமான கோணங்களில் படம் எடுக்கிறார்கள். இணையத்தின் வழியே தரவிறக்கம் செய்து ரசிக்கிறார்கள். இதன் மூலம் உலக இன்பங்களையெல்லாம் அடைந்து விட்டதான மாயையில் மகிழ்வு கொள்கிறார்கள். உண்மையில் தன்னையும் அழித்துக்கொண்டு மாயும் ஆட்கொல்லியாகவே மாறுகிறார்கள்.

இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் மாணவன் அதனால் உடல்ரீதியாகத் தூண்டப்படும்போது அவனுக்குப் பலியாகிறவர்கள்? தன் தேவை நிறைவேறாத போது ஏற்படும் ஏமாற்றம், ஆத்திரம்? கல்வியின் மீதான அக்கறை? பாடங்களைக் கவனித்தல்? தொடர்ந்த கல்விச் செயல்பாடுகள்? உளரீதியான சிக்கல்கள்? எதிர்காலம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடம் பதிலிருக்கிறது?

அலைபேசியினால் கவனக்குறைவாகப் பேசியபடி நடந்து நடைபாதையிலிருந்த குழியில் விழுந்த சீன மாணவியொருத்தியை, அவ்வழியாக வந்த நபரொருவர் கவனித்துக் காப்பாற்றிய காட்சியொன்று யூ டியூபில் காணக்கிடைக்கிறது. பேசிக் கொண்டே நடந்தும் சாலையைக் கடந்தும் தண்டவாளத்தில் சிக்கியும் விபத்துகளால் மரணமுறுவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கவனச்சிதறல், தவறான தூண்டல், கல்வியிலிருந்து துண்டித்தல், ஒழுக்கக் கேடு போன்றவற்றிற்கு அலைபேசிகள் காரணமாக இருக்கின்றன. சக தோழிகளையும் தெய்வமாய் மதிக்கத்தக்க ஆசிரியர்களையும் அவர்களுடைய அனுமதியின்றிப் படம் எடுத்தல், ஆபாசமான, தேவையற்ற பேச்சுகள், குறுஞ்செய்திகள் என அலைபேசி மோகத்தால் சீரழிகிறது மாணவர் கூட்டம்.

கல்வி வளாகத்துள் அனைவரும் சமமென்று வலியுறுத்தவே சீருடை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அலைபேசி வடிவத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சாதாரண பேசி வைத்திருப்பவன், நேற்றைக்கு சந்தைக்கு வந்திறங்கிய நவீன பேசி வைத்திருப்பவன் என இரண்டு வகையாகத் தங்களைப் பிரித்துக்கொண்டு ஏற்றத்தாழ்வைத் தக்கவைத்திருக்கிறார்கள். சாலையைக் கடக்கும்போதும் கூட பேசிக் கொண்டே கடக்கிறார்கள்; அன்றாடப் பணிகளையே தவிர்த்துத் தங்களை அலைபேசிக்கு அடகு வைக்கிறார்கள். அறிவியலாளர்கள் இது உடலுக்கும் ஊறு விளைவிப்பதாகச் சொல்லியும் தள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள். இதயத்துக்கும் மூளைக்கும் ஒரு சேரத் துன்பத்தைத் தரும் இந்தக் கருவியை பயன்படுத்த முடியாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றி விட்ட நிலையில் அதை எப்படிக் கவனமாகக் கையாள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

ஏனெனில் இப்போது அரசு இலவச லேப் டாப்களை வழங்கத் தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்குத் தேவையா என்ற கேள்விக்குள் செல்லாமல் இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் பொறுப்பேற்றுக்கொண்டு சிலவற்றைச் செய்தாக வேண்டும். அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பேசிகளைத் தன் குழந்தைகளுக்குப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்; அதையும் அவ்வப்போது மென்மையான முறையில் கண்காணிக்க வேண்டும். சில இணையங்களில் நுழைய முடியாதபடி பூட்டி வைக்கும் வசதியையும் பயன்படுத்தலாம். சார்ந்த உரையாடல்களைக் குழந்தைகளிடம் தொடர்ந்து நிகழ்த்தி மனமாற்றம் ஏற்படுத்துவதே எப்போதைக்குமான பாதுகாவலாக இருக்கும். மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து அவசர அழைப்புகளுக்கான கருவியாக மட்டும் பயன்படுத்துவதே அவர்களுக்கு நன்மையைச் செய்யும். 

அந்தந்தப் பருவத்தில் பூப்பதே அழகு. அதை விடுத்து இளம் வயதிலேயே தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் நலனையும் கெடுத்து அடுத்தவர்க்கும் கேடு விளைக்கும் பார்த்தீனியங்களாய் மாறி விடாமல் பக்குவமாய் வாழ வேண்டும். ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையெனினும் சுமையாகக் கருதாமல், அலைபேசியின் தாக்கம் குறித்த கருத்துகளை மாணவர் மனத்தில் விதைத்தபடி இருப்பதும் மீறும்போது கண்டிப்பதும் தேவை. சாலிப் பயிர்களை உற்பத்தி செய்யும் விளைநிலத்தில் என்ன உழைத்து என்ன பயன்? இளங்குற்றவாளிகளை உருவாக்கும் களமாகப் பள்ளிகள் மாறிவிடக் கூடாது. எனவே அரசு இது சார்ந்த சட்டங்களை இயற்ற வேண்டும்; இருக்கும் சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும்.  

Tuesday, August 7, 2012

தடம் பதிக்கும் பெண்ணெழுத்து

- தி.பர​மேசுவரி

நன்றி : தாமரை மாத இதழ்

மனிதன் வாய்திறந்து பேசக் கற்ற காலத்துக்கு முன்னரே ஓவியமாக, கற்படிமமாகத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறான். பின்னர் வாய்மொழியாகப் பன்னெடுங்காலம் வளர்ந்த இலக்கியம் எழுத்துமொழி வந்து அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வேகமெடுத்தது. மொழிக்கு ஆண், பெண் பேதமுண்டா என்ற கேள்விக்கு அது யார் கையகப்பட்டு இருக்கிறது என்னும் பிறிதொரு கேள்வியின் மூலம் விடையளிக்கலாம். பால் அதிகாரம் மையப்பட்டு இருக்கக் கூடிய சமூகத்தில், அதனை வளர்த்தெடுக்கும், உறுதியாக நிறுத்திக்கொண்டிருக்கும் மதம், சாதி, அரசு ஆகியன எவரை முன்னெடுக்கிறது; ஆதரிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவர்களை மையப்படுத்தியே, இவர்களின் அதிகாரத்திலேயே இயங்கும் சமூகம், அதன் வெளிப்பாட்டு மொழியான ஆணை அலங்கரிப்பதாகவும் அவனால் இரண்டாம் பாலினமாக்கப்பட்டிருக்கின்ற பெண்ணை அவமதிப்பதாகவுமே இருக்கிறது. மொழி எப்படிப் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பது பல முறை சொல்லிச் சலித்த விஷயம். அந்த மொழி வெளியிலிருந்து புறப்படும் இலக்கியங்களும் ஆணாலேயே படைக்கப்படுவதும் ஆண் சார்போடே இயங்குவதும் அறிந்ததே. ஆனாலும் எழுத்திலக்கியத்தின் முன்னோடியாக இன்றைக்கு நம் கைக்குக் கிடைக்கின்ற சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நாள் வரையிலும் கூடத் தன்னை, தன் சுயத்தைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண் வெளிப்படுத்தியபடியே இருக்கிறாள். அப்படித்தான் சங்க இலக்கியத்திலிருந்து பெண் இலக்கிய வரலாறும் தொடங்குகிறது.

ஆண் / பெண் பற்றிய சமூக மதிப்பீடுகள் வெவ்வேறாக இருக்கின்றன. பெண் பிறந்த கணத்திலிருந்தே ஆணுக்கு ஏற்றபடியானவளாகவே உருவாக்கப்படுகின்றாள். வெவ்வேறான சூழலில், மனநிலையிலிருந்து வருகின்ற இலக்கியத்தை ஒன்றாகப் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. எனவேதான் கருப்பு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் என்ற வகைமைகள் உருவாகி சமூகத்தின் கவனிப்பைக் கோருமளவில் வளர்ந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடியவர்களாக 473 புலவர்கள் இருக்கின்றனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களைக் கணக்கிட்டால் 45 பேர் என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் ஒரு பட்டியலைத் தருகின்றார். இது மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவு. பத்துப்பாட்டில் ஒரே ஒரு பெண் புலவரின் கவிதை மட்டுமே உள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ஒரு பெண் புலவர் கூடக் கவிதை எழுதவில்லை. பக்தி இலக்கியத்தில் சைவத்திற்குப் புனிதவதியும் வைணவத்திற்கு ஆண்டாளுமாக 63 க்கு ஒன்று, 12க்கு ஒன்று என்ற கணக்கில்தான் இருக்கின்றனர். ஒரே ஒரு காப்பியம்கூடப் பெண்களால் எழுதப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இயங்கிய இன்றும் அறியப்படும் பெண்களைக் கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். தனிப் பாடல் திரட்டில் அறியப்படும் பெண் கவிஞர்களெனப் பதினைந்து பேரை முனைவர் தாயம்மாள் அறவாணன் சுட்டிக் காட்டுகின்றார்.

இதற்கு, பெண் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்ததும் கல்வி மறுக்கப்பட்டிருந்ததும் புற வெளி முற்றாக மறுதலிக்கப்பட்டிருந்ததுமே காரணிகளாகும். இன்றைக்கும் பெண்களில் ஒரு பகுதியனருக்கே கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இன்னமும் இத்தகைய வெளி கிடைக்காத, அதை அறியாத பெண்கள் செம்பாகம் உள்ளனர். இச்சூழலில் கல்வியும் புற வெளியும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற பெண்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினரே சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், நிகழ்த்து கலை ஆகியவற்றில் இயங்கி வருகின்றனர். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை போன்றவை தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டிருப்பதாகக் கூறினாலும் அச்சு இயந்திரத்திற்குப் பிறகுதான் அவற்றுக்கான பெருவெளி சாத்தியப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் கொடை என்றே இவற்றைச் சொல்லலாம். தொடக்கத்தில் வாய்மொழி இலக்கியத்தில் குறிப்பாக, கும்மி, நாற்றுப் பாடல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்கள் எழுத்தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் பொதிந்துள்ள பெண் வாழ்வு இன்னும் பேசப்படவே இல்லை; ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. நாட்டுப்புறப் பாடல்களில் பெண் நிலை ஆய்வு செய்யப்பட்டால் அக்காலத்தின் பெண் குரலை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வாக அது அமையும்.

பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் பாதி வரையிலும் கூட எழுதிய பெண்கள் ஆதிக்க வர்க்க்கத்திலிருந்தும் மேல் மற்றும் இடை நிலை ஆதிக்க சாதிகளிலிருந்துமே கிளம்பினர். அவர்களுடைய எழுத்து ஆண் எழுத்தைப் பிரதி எடுப்பதாகவே இருந்தது. இன்றைக்கும் கூடப் பல பெண் படைப்பாளர்கள் மேல்தட்டு மனோபாவத்துடன் இயங்குவது மேற்சொன்ன ஆதிக்க வர்க்கத்தின் சாதிகளின் இயக்கத்தைக் காட்டுவதாகவே உள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் தனித்தனியாக இயங்காமல், இருந்த சிலரே தான் திரும்பத்திரும்ப இயங்கி இருக்கின்றனர். காலகட்ட அடிப்படையில் பெண் படைப்பாளர்கள் பற்றிப் பார்க்கும்போது இன்றைக்கும் நமக்குக் கிடைப்பவர்களாக கு.ப. சேது அம்மாள் (கு.ப. ரா வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), வை.மு.கோதைநாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரசுவதி, விசாலாட்சி போன்றோர் தொடக்க நிலையில் இருக்கின்றனர். இவர்களுள் வை.மு.கோதைநாயகி அம்மாள் 1925 ஆகஸ்டு மாதத்தில் நின்று போயிருந்த ஜெகன்மோகினி என்ற இதழை வாங்கி வெளியிடத் தொடங்குகின்றார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண் சிக்கல், குழந்தைத் திருமணம் போன்ற அவலங்களைப் பேசியுள்ளார். பத்திரிகையாளராகவும் 115 நாவல்கள் எழுதிய நாவலாசிரியராகவும் குறிப்பிடத்தகுந்தவராக விளங்குகின்றார். இவருடைய நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எழுதியது பாரதியா, வ.வே.சு அய்யரா? புதுக்கவிதையின் தொடக்கம் பாரதியா, ந. பிச்சமூர்த்தியா? என்னும் விவாதமே முடிவடையாத நிலையில் சிறுகதை, நாவல், எழுதிய முதல் பெண் யார் என்ற கேள்வியே எழாமல் இருப்பது பெண் இலக்கியச் சூழலின் அவலத்தையே காட்டுகிறது.தாஸிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அல்லது 3 ஆம் வகுப்பு வரை படித்து, 12 வயதில் திருமணம் செய்யப்பட்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயாய், 16 வயதிலேயே கைம்பெண்ணாகி, எழுத்தே தன் வாழ்வெனக் கொண்டு, தன் இல்லத்தின் வாசலில் சித்தி ஜுனைதா பேகம், பன்னூலாசிரியை என்ற பெயர்ப் பலகையை வைத்திருந்த காதலா, கடமையா என்ற நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இருவரில் ஒருவர்தான் தமிழில் பெண்களில் முதல் நாவலை எழுதியவராக இருக்க வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இன்று வரையிலும் பேசப்படாதவராக, கவனிக்கப்படாதவராகவே இருப்பது நம் சாபக்கேடே. குறிப்பாக, அவர் சார்ந்திருந்த இயக்கத்தவராலும் முன்னெடுக்கப்படாத, இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் இருப்பது பதிவு செய்யப்பட வேண்டியது.

மூடுண்ட சமூகமாக இருக்கும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு 1930 களிலேயே கதை, நாவல், கட்டுரைகளை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் மிக குறிப்பிடப்பட வேண்டியவர். "இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப் பட்டிருப்பினும் முஸ்லீம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக்கடைந்திருக்கவும் மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதி விடுதலே அறிவை அளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?"என்று அவர் அன்று எழுப்பிய வினா இன்றைக்கும் விடை சொல்லப்படாமலே உலவி வருகிறது.

சித்தி ஜுனைதா பேகத்திற்குப் பிறகு அச்சமூகத்திலிருந்து எழுத வந்த பெண்ணாக நமக்குக் கிடைப்பவர் கவிஞர் சல்மா. இருவருக்குமான கால இடைவெளியை அறியும்போதுதான் அது எத்தனை இறுக்கமான சமூகமாக இருக்கிறதென்பதை உணர முடிகிறது. தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கீரனூர் ஜாகிர் ராஜா, நானறிந்த வரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன் வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு? என்று கேட்பது கவனிக்கத்தக்கது. ஈழத்தில் பஹீமா ஜஹான், அனார், சுல்பிகா ஆகியோர் இருந்தாலும் நம் நாட்டில் இன்னமும் பின்னடைந்த சூழலே மாறாமல் இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் தொடங்கி இன்றைக்கு எழுதத் தொடங்கியிருக்கும் ஆர்த்தி வரையிலும் ஒரு பட்டியல் எடுத்தாலும் கூட ஒரு நூற்றாண்டு வரலாற்றில் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவான விழுக்காட்டையே கொண்டுள்ளது வருந்தத்தக்கது. மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம், எழுபதுகளில் ஓரளவு உரைநடையில் இயங்கிய அளவுக்குக் கூட இன்றைக்குப் பெண்கள் இல்லை என்பது. நாவல், கட்டுரை, சிறுகதை ஆகிய தளங்களில் இன்றைக்கு எழுதும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் கவிதைப் பரப்பில் எழுதும் பெண்கள் அதிகரித்திருந்தாலும் அதற்கான காரணத்தை ஆராய வேண்டியதாகிறது.

கன்னிமரா நூலகத்தில் உள்ள புத்தகப் பட்டியலில் கவிதை வகைப்பாட்டை எடுத்தால் ஒரு பெரிய அதிர்ச்சி கிடைக்கும். ஒரு புத்தகம் போட்ட பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? பெரும்பாலானோர் திருமணத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகின்றனர். இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த, கவனிக்கப்பட்ட கவிஞர்களான ப. கல்பனா, அழகு நிலா, சே. பிருந்தா போன்றோர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்களெனினும் அவர்களின் இயக்கம் முன்னைப் போலில்லாமல் இருப்பது குடும்ப வெளியின் அடக்குமுறைக்குள் காணாமல் போய் விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தொண்ணூறுகளில் தலித் இலக்கியம் தீவிரமடைந்து கவனிக்கப்படும்போதுதான் பெண் எழுத்தும் தீவிரமடைகிறது. ஒடுக்கப்பட்டோரின் குரல் உரக்கக் கேட்ட காலமாக இதனைப் பதித்துக் கொள்ளலாம். பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார் ஜூலியா கிறிஸ்தவா. தமிழ்ப் படைப்புகளில் இத்துடன் சமூகக் கட்டமைப்பின் ஒடுக்குமுறை தரும் வலியும் வேதனையும் கசியும் குரல்களும் சேர்ந்தே பதிவாகி இருக்கின்றன. வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்று பெயரை வச்சி எழுதினேன் என்று அழகிய நாயகி அம்மாள் தன் நாவலுக்குப் பெயர் சூட்டியதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

உலக மயமாதல், தனியார் மயமாதல், தாராள மயமாதல் கொடுக்கும் அழுத்தம் பெண் மீது எத்தனை தீவிரமாகப் பதிந்திருக்கிறது என்பதனை இன்றைய பெண் கவிதைகளில் பரக்கக் காணலாம். ஊடகப் பெருக்கம், பெண் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை ஆகியவை இன்றைக்கு இலக்கியத்தில் பெண்களின் வருகையைச் சற்றே எளிமைப்படுத்தி இருக்கிறது. ஆனால் இன்றைக்கும் கதை, நாவல், கட்டுரை தளத்தில் இயங்கும் பெண்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எழுபதுகளில் எழுதிய அளவு கூட இல்லை என்பது பெண் எழுதுவதற்கான நேரமின்றி, குடும்பச் சுமையில் அழுந்திக் கிடப்பதைத்தான் காட்டுகிறது. வீடு, அலுவலகம் என்ற இரட்டைச் சுமையில் இயங்கும் பெண், தனக்கான நேரத்தைக் கண்டடைந்து, வாசித்தலையும் எழுத்தையும் சாத்தியப்படுத்துவது என்பதன் போதாமையே இதற்குக் காரணம். இதன் மற்றுமொரு விளைவே ஏராளமான பெண்கள் இன்றைக்குக் கவிதை எழுதுவதும். மற்ற இலக்கிய வகைமைகளுடன் ஒப்பிடும்போது கவிதை மனத்துள் அசை போட்டு, சொற் சிக்கனத்துடன், குறைந்த நேரத்தில் எழுதக் கூடியது. சீசாவுக்குள் அடைபட்ட காற்று, அணு அளவு இடம் கிடைப்பினும் வெடித்துக் கிளம்புவது போலவே இன்றைக்குக் கவிதைப் பெண்கள் கிளம்பியிருக்கின்றனர்.

குடும்பத்து ஆண்களால் மட்டும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண், அவளுடைய மொழி வெளியில் பரவலாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவுமாகவே இருக்கிறாள். அதன் விளைவே பெண் எழுத்துக்குக் கிளம்பும் எதிர்ப்புகள். தொண்ணூறுகளின் இறுதியில் கிளம்பிய உடலரசியல், உடல் மொழி ஆகியவை இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன்மூலம் கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்த ராணி, சல்மா, மாலதி மைத்ரி போன்றோர் கவனிக்கப்பட்டனர். பெண்களின் உடலை வணிகமாக்கி, துய்ப்புப் பொருளாய்ப் பார்க்கும் ஆண் பார்வை கடந்து, அந்த உடலையே ஆயுதமாக்கியது இவர்களுடைய மொழி. காலம் காலமாகப் புனிதமாக்கப்பட்டும் உற்பத்திப் பொருளாகவும் அவளுக்கே உரிமையற்றும் இருந்த பெண் உடலை இவர்கள் மறுவாசிப்புக்குட்படுத்தினர். இதன் மென்மையான போக்கு இரா. மீனாட்சி காலத்திலேயே தொடங்கி விட்டதெனினும் இவர்கள் காலத்திலேயே உக்கிரம் பெற்றது.

குட்டி​ரேவதி
பெண்ணின் காதல், அன்பு, உடல் விழைவு, வலி, வேதனை என எல்லாமும் பதிவு செய்யப்பட்டது. ஆணாதிக்கப் பார்வையில் வெளிப்பட்ட காமக் குரலிலிருந்து மடைமாற்றப்பட்டது இவர்தம் மொழி.

முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள்/பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை/அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே/எப்போதும் பாடுகின்றன 
விம்மலை/காதலை/போதையை
.... ....

ஒரு நிறைவேறாத காதலில்/துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்/தேங்கித் தளும்புகின்றன

என்று குட்டி ரேவதி நிறைவேறாத காதலின் வலியைத் தேங்கித் ததும்பும் கண்ணீர்த் துளிகளென நிற்கும் முலைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார். தனக்கான விடுதலையை முன்னெடுத்தல்,  தன்னுடலைக் கொண்டாடுதல், சமூகம் பெண்ணுக்கு விதித்துள்ள வரையறைகளை விசாரணைக்கு உட்படுத்துதல் என்ற அரசியலைக் கொண்டே இவர்தம் உடல்மொழி இயங்குகின்றது.

உடல் மொழி என்ற சொல்லையே மறுத்து, அதை மற்றுமொரு பெண் சுயமழிக்கும் ஆண் மேலாதிக்க அரசியல் என்று திலகபாமா உள்ளிட்ட சில பெண் கவிஞர்கள் மறுக்கின்றனர். இக்கருத்தினைப் பல ஆண் படைப்பாளர்கள் ஆதரிக்கின்றனர். முலைகள் என்ற தலைப்புக்காக குட்டி ரேவதி ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தார். ஆனால் குட்டி ரேவதியின் மேற்சொன்ன கவிதையோ, அல்லது சல்மாவின்,

ஒவ்வொரு முறையும்/அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்/ படுக்கையறையின் தவறுகள் எல்லாம் என்னுடையதென
 உன்னிடமிருந்து/ கலங்கலானதே எனினும் 
சிறிது அன்பைப் பெற/வெளியுலகிலிருந்து சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடைச் சாதனங்களையும் பெற/இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி
முடியுமானால்/உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும் விரிகிறது என் யோனி

இந்தக் கவிதையோ அதிகாரச் சமூகம் தங்களுக்கான புணர்ச்சி இன்பத்துக்கென்றே வைத்திருந்த பெண் உடல் உறுப்புகளை வழமையான அவர்தம் வகையிலன்றி, தம் துயரத்தைச் சொல்ல, அதிகாரத்துக்குச் சமரசம் செய்துகொண்டு அதன் வழி சிறிது அதிகாரம் செலுத்தும் சுய இரக்கத்தையுமே கவிதையாக்கி இருக்கின்றன.

தமிழ்நதி
அத்தருணத்தில் பெரும் பாய்ச்சலாகக் கிடைத்த ஊடகக் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க இன்றைக்கு இதே சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு புற்றீசலெனக் கவிஞர்களும் கவிதைகளும் கிளம்புகிறதென்றாலும் காலம் கடந்து நின்று கேள்வி கேட்கின்றன இக்கவிதைகள்.

ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெரு முடக்கில் நீட்டிக் கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளி நடந்தேன்
ஓடும் பேருந்தில்/திடுக்கிட்டு விழி தாழ்த்தி 
அவமானம் உயிர் பிடுங்க/கால் நடுவில் துருத்தியது
.... 

பிறிதொரு நாள்/வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி 
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிப் போனது 
பின் கழுத்தை நெருங்கிச் சுடுமூச்செறியும் போதில் 
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த 
உன் கண்களை நினைத்தபடி 
குறி தவறாது சுடுகிறேன் 
இதழ்க் கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் 
என் சின்னஞ்சிறுமியே

என்னும் தமிழ் நதியின் கவிதையில் குறி நேர்ப் பொருளன்றி மறைமுகமான அர்த்தங்களுடன் மற்றுமொரு தளத்துக்கு, பெண்களின் சிக்கலை, கோபத்தை வெளிப்படுத்துமிடத்திற்குக் கவிதையை நகர்த்துகிறது.

சொற்களுக்கு வலிமை சேர்ப்பது அதன் பாடு பொருளே. இது பயன்படுத்தத்தக்கது, இதைப் பயன்படுத்தக் கூடாது என்னும் ஆதிக்கவாதிகளின் குரல்கள் ஏன் பெண் கவிஞர்களை நோக்கி மட்டும் எழுகிறது? மேலாதிக்கத்தின் சுட்டு விரல்கள் ஏன் இவர்களை நோக்கி நீள்கிறது?

சங்க இலக்கியம் தொடங்கி இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியம் வரையிலும் பெண்ணை, அவள் உடலை வெற்று வருணனைகளாய்ச் சொல்லிச் செல்லும் கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுடைய கவிதைகள் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் வெளி வந்த இந்தக் கவிதைகளையும் கவனிப்போம்.

தொண்டையடைத்த பறவையின்/விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது
உன் விரியோனியின் சமிக்ஞை (யூமா. வாசுகி)

காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம்
மாறி மாறி மன்னிப்புக் கோரினேன்
பல்தடங்கள் சிரிக்கின்றன (ஜெ. பிரான்சிஸ் கிருபா)

இந்தக் கவிதைகள் ஏன் இலக்கிய பீடாதிபதிகளால், சமூக ஆதிக்கங்களால் கேள்வி கேட்கப்படுவதில்லை? மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்ற கவிதைகளில் பெண்களுடைய கவிதைகள் பாலியல் கவிதையாக இல்லாமல் சமூக வக்கிரத்தை, அதிகாரத்தை, வன்புணர்வைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதையும் அது எழுதப்பட்ட காலத்தில் பெற்ற எதிர்ப்புகளையும் சற்றே நினைத்துக் கொண்ட பின் ஆண் கவிஞர்களுடைய கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவு தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் பெயரில் எழுதும் ஆண் படைப்பாளர்கள் மிகுந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாலினப் பாகுபாடு முன்னிறுத்தப்படும் தமிழ்ச் சமூகத்தில் பெண் அடையாளத்தைக் கைப்பற்றிக் கவனப்படும் எளிமையான தந்திரத்துடனேயே பெரும்பாலானோர் இயங்குகின்றனர். மிகக் குறைவாக இருந்த இந்தப் போக்கு, பெண்கள் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் மிகுதிப்பட்டு, இன்றைக்கு வரையிலும் கட்டுப்படுத்தப்பட முடியாத வகையிலேயே உள்ளது. படைப்பாளர்களே முன்னின்று தொகுத்த பெயல் மணக்கும் பொழுது, பறத்தல் அதன் சுதந்திரம் ஆகிய பெண் படைப்பாளர்களின் தொகுப்பில் கூட பெண் பெயரால் எழுதும் ஆண் படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. காலப் போக்கில் பெண்ணெழுத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஆணாதிக்கப் பார்வையாகவே இதனைப் பார்க்க வேண்டும். பெண் மொழி வெளியில் ஆண் படைப்பாளர்களின் நீதியற்ற இத்தகைய வன்முறை நுழைவு கண்டிக்கப்படவும் வேண்டும். உலக அளவில் கருப்பர்களின் பெயரால், எழுத்தால் வெள்ளையர்கள் எழுதத் தொடங்கியபோது அதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பி, முடிவு கட்டினர். தமிழில் இன்னமும் முடிவு கட்ட முடியாத துயரமாகவே ஆண்களின் ஊடுருவல் இருந்து கொண்டு இருக்கிறது.

பாலியல் வேட்கை என்பதும் காதல் வெளிப்பாடு என்பதும் ஆணுக்கானது மட்டுமல்ல. அது பெண்பிறவிக்குமானதே. ஆனால் நடப்பில் வெளி வந்திருக்கும் கவிதைகளில் நகுலனுக்கு ஒரு சுசீலாவைப் போலவோ, கலாப்ரியாவுக்கு ஒரு சசி போலவோ ஏன் ஒரு பெண்ணுக்கு அமையவில்லை அல்லது வெளிப்படுத்தவில்லை? இத்தகைய வெளிப்படுத்த முடியாத வகையில்தான் தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. பெண்களின் பாலியல் வேட்கையைச் சொன்ன கவிதைகளைக் காட்டிலும் தனதாயிராத தன்னுடலை, அதன் வாதையை, வன்புணர்வை, தன் விருப்பமின்றியே தான் ஆளப்படுவதை, தன்னடிமைத்தனத்தைப் பேசும் கவிதைகளே அனேகமாக இருக்கையில் ஒரு சில கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவதும் பெண்ணின் வலி பேசும் கவிதைகள் வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் இருப்பதுமே இலக்கியத்தின் அரசியலாக இருக்கிறது.

உதிரத்தின் சுவையோடிருந்தது/அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள் பிடுங்கப்படாமலிருந்தன
பயணக் களைப்பையும்/ரணங்களின் நோவையும்
பசிக்கும் வயிற்றையும்/உன் கண்ணசைவு
புறக்கணித்தது/கொன்ற கோழியிறகுகளைப் பிய்த்து எறிவது போல்
எப்படிக் களைந்தாய் என் ஆடைகளை/நாம் தழுவத் தழுவ
அவை நழுவி விட விரும்பினேன்/தானாகவே இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலில் ஆறுதல் தேட
தேகமோ இளகி விடுகிறது/வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு

உமா மகேசுவரியின் இந்தக் கவிதை அத்தகைய உடல் ஆக்கிரமிப்பைப் பெருத்த வேதனையுடன் பேசும் கவிதை. இப்படியொரு கவிதையை ஒரு ஆணால் எழுத முடியுமா? கவிதை மொழியில் ஆண்/பெண் பேதம் இல்லை என்று பேசுவோர் பதில் சொல்லட்டும்.

சிவகாமி
இதையே சிவகாமியும்,

எனதாயிராத என்னுடலை
விக்கிரமாதித்தனெனச் சுமப்பதில்/பேதலிக்கிறேன்
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன

என்று பேசுகின்றார்.

தன்னுடலைப் பேசுதல், உடல்மொழி ஆயுதம் என்ற சுழலுக்குள்ளேயே இன்றைய பெண் கவிஞர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக எழும் குற்றச்சாட்டும் தேவையற்றதே. மைய ஓட்டத்திலிருந்து உள்ளொடுங்கிய தனித்த கூறுகளை, விளிம்பு நிலைத் துயரத்தைப் பேசும் கவிஞர்கள் அத்துடன் நின்று விடாமல்,

இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லி விடுவேன்/பறச்சி என்று

என்ற இன்னொரு கவிதை இவர்களுக்குப் பதில் சொல்கிறது. பெண்Xஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இத்தகைய முரண்களைக் காப்பாற்றி நிற்கும் மதமும் சாதியும் தோலுரிக்கப்பட வேண்டியவை என்ற இடத்தில் நின்று எழுந்ததே தலித் பெண்ணியக் கவிதைகள். சக மனிதர்களை ஒடுக்கி, கயர்லாஞ்சியிலும் உத்தபுரத்திலும் திண்ணியத்திலும் நடக்கும் மனித இழிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது சுகிர்தராணியின் இக்கவிதை. பெண்களின் சிக்கலும் தலித்களின் பிரச்சனையும் ஒடுக்கப்படுவதாகவே இருக்கிறது. தீட்டாகவும் சேரியாகவும் அவை கருத்தாக்கம் பெற்று ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்னும் குரலை மிகச் சரியாக இக்கவிதை பதிவு செய்கிறது.

சுகிர்தராணி
தேனும் தினைமாவும் கிழங்குச் சீவல்களும்/டப்பாக்களில் அடைக்கப்பட்டு
நாளங்காடிகளில் விற்பனையாகின்றன
சறுக்குமர மலை விளிம்புகளில்/நாங்கள் பாடிய குறவஞ்சிப் பாடல்கள்
கல் குவாரிக் குட்டைகளில் மிதக்கின்றன
கையில் குறி சொல்லும் கோலுடன்/கடற்கரை நகருக்கு/
நகர்ந்து விட்டனர் குறத்திகள்
புழுத்த அரிசிச் சோற்றைத் தின்றபடி/வேடிக்கை பார்க்கிறோம் 
யாரோ யாருக்கோ கையளிக்கும்/எங்கள் வாழ்நிலங்களை

என்னும் சுகிர்தராணியின் இக்கவிதை சிறப்பு மண்டலம் என்ற பெயரால் அரசு தன் மக்களுக்குச் செய்யும் துரோகத்தை, அந்நிய ஆதிக்கத்துக்கு விலை போகும் அவலத்தைப் பதிவு செய்கிறது. பெண்ணரசியல் என்பது தனித்த பெண்ணின் வலி மட்டுமல்ல; அது எல்லாச் சிக்கல்களையும் உள்ளடக்கிய நுண்ணரசியல் என்ற தத்துவார்த்த அடிப்படையில் இன்றைய அதிகார அரசியலின் முகத்தை வெளிப்படுத்துகிறது.

சங்கராபரணி என்ற ஆற்றைப் பெண்ணுக்கான படிமமாக்கி, அது சவுக்குக் காடாய், கரட்டுப் புல்லாய், தேங்கிய குட்டையாய் மாற்றப்பட்டிருப்பதை, தன் சதையை வெட்டி எடுத்துச் செல்லும் லாரியில் மணலைப் போலவே இருக்கிறாள் என்று பெண்ணைப் பற்றியும் கொள்ளையடிக்கப்படும் ஆற்றைப் பற்றியும் ஆதங்கப்படுகிறார் மாலதி மைத்ரி.

பெண்ணின் தனி மனித உளவியல் சிக்கலை, உழைப்புச் சுரண்டலை,

உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை

என்னும் இளம்பிறையின் எளிமையான சொற்கள் காத்திரமாய் நின்று குரலெழுப்புகிறது. கிராமமாயினும் நகரமாயினும் வர்க்க பேதமின்றிப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதே இளம்பிறை சொல்லும் செய்தி.

இன்றைக்குப் பல பெண்கள் எழுதுகிறார்களெனினும் அவர்களின் கவிதை மொழியில் வெளிப்படும் அரசியல், அவர்தம் வெளிப்பாட்டுத் தன்மை, பாடுபொருள் என்ற அளவில் கவனப்படும் கவிஞர்கள் வெகு குறைவே. அரசியல் இயக்கங்கள் சார்ந்து அடையாளப்படும் பெண் கவிஞர்களின் செயற்பாடுகளைப் பேசப் புகுந்தால் எள் முனையளவாய் இருக்கும் துயரத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் சுருங்கிப் போயிருக்கும் அவர்க்கான நேரத்தைப் பிய்த்துத் தங்களை வெளிப்படுத்துதல் என்பது அவர்களுக்கு அரிதாகவே வாய்க்கிறது.

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க்கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்குக் கொண்டது

- விஸ்வாலா சிம்போர்ஸ்கா.  

Thursday, July 5, 2012

மனம் தொடாத உறவுகளில் பசியாறும் பரத்தையர்

நன்றி : தமுஎகச பண்பாட்டு மலர் 2012

சங்கஇலக்கிய அகமரபில் காணப்படும் பெண்மாந்தர்களில் குடும்ப அமைப்பு சாராத பெண்ணாக அமைபவள் பரத்தை. இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்த சங்க இலக்கியத்திலிருந்து இற்றைநாள் வரையிலான கவிதைகளில் பரத்தை புனையப்படுமாற்றைக் கவனித்தலே இக்கட்டுரையின் நோக்கம்.

தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆண்மையச்சமூகம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை எனலாம். சங்க இலக்கியம் காட்டும் இற்பரத்தை,  காதற்பரத்தை, சேரிப்பரத்தை போன்றோர் அத்தகையோரே. பெண் ஒடுக்குமுறையின் ஒருபகுதி என்று இதைக் குறிப்பிடும் அதேவேளையில் இதற்குள்ளும் தனக்கான ஒரு வெளியைப் பரத்தை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதற்கும் சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் மருத நிலமே தனிச் சொத்தும் அது சார்ந்த ஆண்மையச் சமூகமும் அவர்களுக்காக் பரத்தையர்களையும் உருவாக்கிய களமாக அமைகிறது. குறிஞ்சி, முல்லைக் காலத்தில் மலையிலும் காட்டிலும் திரிந்த மனிதனுக்குள் ஆண், பெண் ஆகிய பால் பேதம் பெரிதாய் இருந்திருக்கவோ அது சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கோ வழியில்லை. எனவே மருத நிலம் சார்ந்த பாடல்களிலேயே பரத்தையர் சார்ந்த பாடல்களையும் மிகுதியாகப் பார்க்க முடிகிறது.

சங்கம் காட்டும் இச்சித்திரமும் மேட்டிமைப் பெண்களுக்கானதேயொழிய சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பெண்களின் நிலை பெரும்பான்மையும் பதியப்படவில்லை என்ற வர்க்க பேதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேட்டிமைப் பெண்ணான தலைவிக்குரிய பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று வரையறுக்கும் தொல்காப்பியர், 

சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் (தொல். பொ. கள. 20) 

என்றும்

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை (தொல். பொ. கள. 28) 

என்றும்

சொல்லி ஆணாதிக்க விழுமியங்களால் பெண்ணுக்கான மொழியைத் தடை செய்கிறார். மொழி காலங்காலமாக ஆணாதிக்கவயப்பட்டதாக உள்ளதையும் பெண்மொழி இன்றும் சாத்தியப்படாத நிலையையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்தவகையான அதிகாரமும் முதலில் எதிராளியின் சிந்தனையை, செயலை அழிக்கத் தொடங்கும். அவ்வகையில் பெண் ஒடுக்குமுறை தொடங்கும்போதே அவளுடையபேச்சு, குரல், மொழி ஆகியவற்றை அழிப்பதற்கான செயல்பாடுகள் நடந்தேறியுள்ளன.
அகஇலக்கிய மரபில் பேசப்படும் பெண்களான நற்றாய், செவிலி, தோழி, தலைவி ஆகியோருள் ஓரளவாவது பேசுபவள் தோழி மட்டுமே. அவளும் பல்விதமான கட்டுப்பாடுகளுக்கிடையிலேயே பேசுகிறாள். 

இவர்களிடமெல்லாம் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. நாணம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளுள் முதன்மையானது. எனவேதான் உயிரைவிட நாணத்தை வலியுறுத்திய பாடல்கள் இயற்றப்பட்டன. ஆனால் பரத்தை இதனைத் துச்சமாக மதித்துப் பேசுகிறாள்.

சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு
ஆவதாக இனிநாண் உண்டோ (அகம் 276)

நாணத்தை உயிர்நிலையாய் நினைக்கும் தலைவிக்கு எதிர்நிலையில் வைக்கப்படும் பரத்தையின் வாழ்வில் நாணம் அர்த்தமற்றதாய் மாற்றம் பெறுகிறது.

பெண்ணுடல் எப்போதும் தணிக்கை செய்யப்படுவது; கண்காணிக்கப்படுவது. அது எண்ணற்ற ஆணாதிக்க விழுமியங்களால் கட்டுண்டுள்ளது. குடும்பப் பெண் தன் கணவனுக்காகவே தன்னை ஒப்பனை செய்து கொள்ளக் கடமைப்பட்டவள். கணவனைப் பிரிந்து இருக்கும்போதோ, இல்லாதபோதோ அல்லது மிகையாகவோ தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் பெண்ணை வேசி என்றும் நாடகக்காரி என்றும் ஏசும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.
தன்னை அழகுபடுத்திக் கொண்டு நறுமணம் கமழத் தெருவில் உலாவும் பரத்தையை மதுரைக் காஞ்சி காட்டுகிறது. 

நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ (ம.காஞ்சி 562 - 564)

சுதந்திரமில்லாத பெண்ணுடல் பரத்தையுடையதாயிருக்கும்போது புதிய விதிகளும் தளைகளும் பிறக்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டதே இதுவும் என்பதை உணராத பரத்தை, சுதந்திரமென்று கருதிக் கொண்டு, மலர்களால் தன்னை அலங்கரித்தவளாய் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியபடி தெருவில் நடப்பதை இப்பாடல் வரிகள் வெளிக்காட்டுகின்றன.

எவையெல்லாம் குடும்பப்பெண்ணுக்கு மறுக்கப்பட்டதோ அவையெல்லாம் பரத்தைக்கான விதிகளாக்கப்பட்டன. அலங்கரித்தல், உரக்கப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், பாடுதலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பிறரைக் கவர்தலே அவளுக்கான பணியாக்கப்பட்டது. ஆண்மையச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பரத்தையரைச் சுதந்திரம் பெற்றவர், ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர் என்று பார்ப்பது ஏற்புடையதல்ல. ஆனாலும் தனக்கான குறுகிய வெளியின் இடையில் பரத்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் சினக்கிறாள், வெளிக்காட்டுகிறாள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பரத்தை தன்னை ஏமாற்றிய தலைவனிடம்,

தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய்ப் பிறனாயினையே
இனியான் விடுக்குவென் அல்லேன் (அகம் 396)

என்று சூளுரைக்கிறாள். பரத்தையும் தலைவனுக்கு ஓரோர் வகையில் கட்டுப்பட்டவளாயினும் தலைவனை விமர்சிக்கிறாள்; இனியான் விடுக்குவென் அல்லேன் என்று சினத்தைக் காட்டிச் சபதம் செய்கிறாள். இது தலைவிக்கு முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் குடும்ப நிறுவனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பரத்தைப் பெண், தலைவனை நோக்கிக் குரலுயர்த்திப் பேசுகிறாள். தலைவனைக் கேள்வி கேட்பவளாக இருக்கின்றாள். மட்டுமல்லாமல் தலைவியிடம் வாதிடும்போது, தலைவனே உடனுறை பகை என்று உண்மையுரைப்பவளாகவும் இருக்கின்றாள்.

யாந்தம் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே (அகம் 186)

தலைவன் மீதான சினத்தையும் பரத்தை மீது ஏற்றி, அவளிடம் தன் பகையைக் காட்டும் தலைவியிடம், நான் உன்னுடைய பகை அல்ல. உனக்கும் எனக்கும் இடையில் நின்று நம் இருவரையும் ஒடுக்கும் தலைவனே உனக்கு உடனுறை பகை என்று பேசுகிறாள். இந்த இடத்தில் பரத்தையின் பேச்சு அதிகாரத்திற்கெதிரான கலகச் செயற்பாடாக மாற்றம் பெறுகிறது. அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தைக் கேள்வி கேட்பவளாக, எள்ளல் செய்பவளாக, விமர்சிப்பவளாக சங்க இலக்கியத்தில் பரத்தையே இருக்கிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

சங்க இலக்கியத்திற்குப் பின் காப்பிய காலத்திலும் கூட மாதவி, மணிமேகலை, பரவையார் எனச் சில கதை மாந்தரைத் தாண்டினாலும் நீதியிலக்கியக் காலம் தொட்டுப் பரத்தையர் என்ற பிரிவினர் மிகவும் இழிவுபடுத்திப் பார்க்கப்பட்டனர். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் வள்ளுவத்தில் மாய மகளிர் (918), பொருட் பெண்டிர் (913), அன்பின் விழையார் (911), இருமனப் பெண்டிர் (920), வரைவின் மகளிர் (919) என்றெல்லாம் வசை பாடப்பட்டனர். ஆணின் பாலியல் பசிக்கு இரையாகும் பரத்தை, ஆணாதிக்கச் சமூகத்தால் சுரண்டப்பட்டு, ஒதுக்கப்பட்டே வாழ்வு நடத்துகின்றாள். விளிம்புநிலையில் வாழும் பரத்தையைச் சுரண்டும் ஆண் சமூகமே மீண்டும் அவள் மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறது. அன்பில்லாதவர்களென்றும் இரு மனம் கொண்டவர்களென்றும் வள்ளுவர் பேசும் பரத்தையிடம் வரும் ஆண் மட்டும் அன்புள்ளம் கொண்டவனா? வள்ளுவர் பரத்தையர் மீது சுமத்தும் பண்புகளை அவரிடம் வரும் ஆணுக்கும் கற்பிக்க முடியும்தானே? ஆண்மையச் சிந்தனையுடன் இக்கருத்தைப் பேசும் வள்ளுவர் மேற்சொன்ன செய்திகளை மறந்து அல்லது கவனிக்க மறுத்து நடுநிலை தவறிப் பேசுகிறார்.

முருகனின் பெருமை பேசும் திருப்புகழில் முருகனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவோர் பரத்தையர் எனில் அது மிகையான கூற்று அன்று. அந்நூலை எழுதிய அருணகிரிநாதர் தாசிகளால் செல்வமிழந்து, நோயுற்ற நிலையில் தாசிகளாலேயே புறக்கணிக்கப்படுபவராக அவருடைய வரலாறு பேசப்படுகிறது. அவருடைய பாடல்கள் சந்தத்துக்குப் பெயர் பெற்றவை. ஆனால் பெரும்பான்மைப் பாடல்கள் தாசிகளைப் பழிப்பதும் வசை பாடுவதும் நிரம்பியதாகவே உள்ளது.

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் ( திருப்புகழ் 27)

பரத்தையர் வாழ்நிலை உணர்ந்தே பரத்தையரிடம் சென்று பொருளிழந்த அருணகிரிநாதர் தன் வரம்பு மீறித் தன்னை எதிர்கொண்டு நிற்கும் கணிகையரைப் புரியாமல் வெறுப்பை உமிழ்கிறார். அருணகிரிநாதர் மட்டுமின்றி சித்தர் பாடல்களிலும் இத்தகைய போக்கை நாம் காண முடியும். 

சித்தர் பாடல்களில் பரத்தையர் மட்டுமன்றிப் பொதுவாகவே பெண்களை இகழும் தன்மையைக் காணலாம். தம் துன்பத்துக்கே மாயப் பிசாசாக வந்த பெண்களே காரணம் என்று இவர்கள் கற்பிக்கும் தன்மை, தன் தவறு மறுத்து, தன் தவறையும் சேர்த்துப் பிறர் மேல் ஏற்றிக் கூறும் போக்கையே காட்டுகிறது. பெண்ணுடல் நுகர்விற்கானது; பாலியல் துய்ப்பிற்கானது என்று நம்பும் ஆண்மையச் சமூகத்தில் இயங்கும் இத்தகு பெரியோர்களும் கூடத் தன் புலனுணர்வை கட்டுப்படுத்த இயலாதவர்களாய்த் தன் புலம்பலைப் பெண்களின் மீதான வெறுப்பாய் மாற்றிக் கவி புனைகின்றனர். சுவர் வந்து தன்னை இடித்துவிட்டது என்று சொல்லும் சிறு குழந்தை போலத் தன் மனத்தை அடக்க முடியாதவர்களாய் அலைபாய்ந்து, அல்லாடி விட்டு, தாசிகளின் மீது பாய்ந்து வசை பாடுவதே இவர்களின் ஆணாதிக்க அறம்.

பொருளாதாரச் சுதந்திரமின்றி முடக்கப்பட்ட பெண்ணினத்தில் ஆதி காலம் தொட்டே பொருட் பெண்டிராய் வலம் வந்த இப்பெண்களின் உலகம் உண்மையில் துக்கத்தாலும் துரத்தாலும் நிரம்பியது. புறக்கணிப்பின் கண்ணீர்க் காவியங்கள் ஏராளம், ஏராளம். இளம் வயதில் தன் உடலையே மூலதனமாக்கிப் பிழைக்கும் இப்பெண்டிர் வயது முதிரும் பருவத்தில் படும் பாடுகளை எவரும் சிந்திப்பதில்லை. வெவ்வேறு விதங்களில் இவர்தம் உடலை வருணித்தும், ஏசியும் பாடிய சங்கப் புலவர் காலம் தொட்டு இக்காலம் வரையில் இவர் பாடுகளைப் பாடிய பாடல்களைக் கை விட்டு எண்ணி விட முடியும். 

தாய்மை என்ற புனைவின் வழியே பெண் முழுமை பெறுகிறாளென்று பெண்மையை ஏத்தும் தமிழ்ச் சமூகம், அவ்வுரிமையைப் பரத்தையருக்கு வழங்குவதில்லை. தாய்மையின் வழியே ஆணின் தனிச் சொத்துக்குரிய வாரிசைப் பெற்றுத் தருவது தந்தையாதிக்கத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்பதாலேயே பெண்ணின் தாய்மை புனிதமாக்கப்பட்டுப் போற்றப்படுகின்றது. ஆனால் பரத்தையரின் தாய்மையினால் ஆண்மையச் சமூகத்துக்குப் பயன் இல்லை என்பதாலேயே அது சமூகத்தின் எள்ளலுக்கும் கேலிக்கும் ஆளாக்கப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் பேசப்படும் சித்திராபதி தவிர்த்து பரத்தையரின் முதுமைப்பருவம் பற்றிய பதிவுகளேதும் தமிழ் இலக்கியத்தில் இல்லை. தூதுகளில் பேசப்படும் முதுகிழவிகள் தாய்மை வரம் வேண்டி இறைவனைப் பூசிப்பதையும் கருவுறுதலையும் கேலி பேசுவதாகவே அமைகிறது. ஆனால் இப்பெண்களின் முதுமைப் பருவத்தை அனுதாபத்துடன் அணுகும் ஒரு பிரதியும் தமிழ் இலக்கியத்தில் இல்லையென்று துணிந்து கூறலாம்.

பொய்/வஞ்சகம்/இச்சகம் பேசுவோர், அன்பற்றவர், நோய் பரப்புவோர், பொருட் பற்றுடையோர், மது வகைகளை அருந்துவோர், நிலையற்ற மனமுடையோர், தம்மையே விலை பேசிக் கொள்வோரென்றெல்லாம் பாடல்களில் இவர்கள் இகழப்படுகின்றனர். பொது மகளிர், தாசி, வேசி, விலை மகள், தேவரடியார், தேவடியாள், அவிசாரி, விபச்சாரி, கணிகையர், காமக்கிழத்தி என்றெல்லாம் பல்வேறு பெயர்களால் அழைத்து மலினப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணைர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும். எது எப்படி இருப்பினும் தேவடியாள் என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை என்று ஜி. நாகராஜன் இவர்கள் பால் அனுதாபத்துடன் பேசுகிறார்(சதங்கை, ஏப்ரல் 84). இவர்களுடைய இளமையே சமூகத்துக்குப் பிரதானமாக இருக்கிறது. அதில் அவருடைய துயரங்களும், இளமையை இழந்த பின் அவர் படும் இன்னல்களும் எவராலும் பொருட்படுத்தப்படுவதே இல்லையென்பது வருந்தத்தக்க உண்மை.

கற்பை அணியாகப் பேசும் இந்த மண்ணில்தான் அதை விலை பேசும் அவலமும் நடக்கிறது. குடும்பப் பெண் X பரத்தை என்னும் எதிர் அரசியல் காலங்காலமாய் முன்னெடுக்கப்பட்டுப் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக, சங்க இலக்கியக் காலம் தொட்டே கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுவே ஆணாதிக்க நுண்ணரசியல். ஒன்றை உயர்த்துவதற்காகவே ஒன்றைத் தாழ்த்துவதும் இதில் அடங்கும். அப்படித்தான் கற்புக் கோட்பாடு உயர்த்தப்பட்டு, பரத்தையர் இழிவானவர்களாகக் காட்டப்பட்டனர். பெண்ணைப் புனிதமென்று பேசும் இந்தச் சமூகம்தான் பண்டமாக்கிச் சந்தையில் தோல் வியாபாரமும் செய்து வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் இதன் வடிவங்கள் மாறினாலும் பெண் பண்டப் பொருள், போகப் பொருள் என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நவீனப் புதுக்கவிதைகளில் பரத்தையர் பற்றிப் பேசும் மிக முக்கியமான நூலாக சரவண் கார்த்திகேயன் எழுதிய பரத்தையர் கூற்று தொகுப்பைச் சொல்லலாம். 

சுதந்திரமென்பது
புணர்தலல்ல
புணர மறுத்தல்
என்றும்
கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித் தாலி கட்டிய 
வீட்டுப் பிராணியல்ல
நான் காட்டுராணி

என்று பெருமிதம் பேசும் சரவண கார்த்திகேயனின் கவிதைகளிலே இவர்களுடைய துயரமும் பதியப் பெற்றிருப்பதே இத்தொகுப்பை முக்கியமானதாக்குகிறது. இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாகச் சொல்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன. ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அதன் பெயர்தான் விபச்சாரம் என்று விக்டர் ஹியூகோ பரத்தைமையின் பெயராலும் பெண் அடிமைப்படுத்தப்படுவதைப் பேசுகிறார். தொடர்ந்த காலங்களில் மையத்தை மட்டுமே புனிதப்படுத்தி, விளிம்புகளின் துயரத்தைப் பேசாதே தவிர்த்த ஒரு படித்தான பார்வையில் இருந்து விலகி நிற்கும் இக்கவிஞர், பெருமிதத்தைச் சொல்லும் நிலையிலேயே துயரத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கத்தின் அருமை கேள்
கறைபடாத இரவொன்றில்
கம்பளி போர்த்தித் துயிலும்
நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப்
பெருங்கனவாய்த் தரிசிக்கும்
ஓர் தேவடியாளிடம் 

என்று உறக்கமற்ற இரவுகளைப் பேசும் கவிஞர்,

விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனம் தொட்டதில்லை

என்று அவளுடைய குற்றச்சாட்டை, மனம் தொடாத உறவுகளில் பசியாறும் அவளது துயரத்தைச் சொற்களில் மொழிபெயர்க்கிறார். வருணிப்பதாயினும் இகழ்வதாயினும் பெருமிதம் பேசுவதாயினும்  ஆண் குரலாகத்தானே இருக்கிறது, ஒற்றை குரலேனும் பெண் குரல் கிடைக்காதா என்று தேடுகையில் கிடைத்தாள் பரத்தையருள் ராணி. லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு அது.

என் படுக்கையறைக்கு வந்தான் அவன்/அம்மணம்/அவனுக்குக் காட்சி/எனக்குச் செயல்/எனக்குக் காட்சி/அவனுக்குச் செயல்/தவளை வாசனை/நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை/கசியும் ரகசியங்களின்வெளுப்பு/பொந்து/நனவிலி/நரகத்தின் வாசல்/வெளியேறினான்/ஆனால் மீண்டும் வந்தான்/பருத்த மின்னலொன்று/ தாக்குண்டவனாய்/அதன் ஒளிக்குக் கட்டுண்டவனாய்/கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்/நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்/என் உடல் நினைவகம் அல்ல/மொழியுமல்ல/பேசுவேன்/புரிந்து கொள்ள மாட்டேன்/அர்த்தம் அதிகாரம் என்றேன்/பார்க்க முடியாததை நோக்கித் திரட்டப்பட்ட/மழுங்கிய முனையின் விறைப்பு/அவன் பார்வையை மங்கலாக்கியது என்று எழுதிச் செல்லும் இக்கவிதையின் இறுதியில்,

அவன் வாய் முணுமுணுத்தன           பரத்தை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தையருள் ராணி 

என்று பரத்தையர் பற்றிப் பேசுவதாய்ப் புனைந்து முடிக்கிறார் லீனா. ஆனால் கவிதையில் எங்கும் பரத்தையருக்கான வெளி பேசப்படாததுடன் லீனாவின் குரலே பதிவாகியிருப்பதைக் கவிதை வாசிப்போர் உணர முடியும். இங்கே சொல்லப்படும் பரத்தை என்ற வசைச் சொல் கூட, மேலே கவிஞரின் குரலாகப் பதியப்பட்ட செய்திகளால் அழுத்தமின்றி, எந்த விதமான உணர்வையும் கிளர்த்தாமலே நம்மைக் கடந்து செல்கிறது. லீனாவின் இந்தப் பதிவு கடந்து பிற பெண் கவிஞர்கள் எவரும் பரத்தையர் பற்றிக் கவிதைகளை எழுதியதாக நானறிந்த வரையில் இல்லை என்பதை இக்கட்டுரையில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

தொடர்ந்த இத்தனை நூற்றாண்டுப் பதிவுகளில் பரத்தையென்பவள் சுதந்திரமானவள், துடிப்புடன் பேசுபவள் போன்ற விடுதலைச் சிந்தனையுடனான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பதியப்பட்டிருப்பினும் அதை முழுமையாக ஒதுக்க முடியாதெனினும் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையிலேயே கொள்ள வேண்டியதாயிருக்கிறது. 

பெண்களின் மீது மட்டுமே திணிக்கப்பட்ட ஒழுக்கம் பெரும் வன்முறைத்தன்மை கொண்டதாகவும் ஒடுக்குமுறையின் அடையாளம் பெற்றதுமாகவே இருப்பதை வரலாற்றின் பக்கங்களில் பரக்கக் காண முடியும். இந்த ஒழுக்க வரையறைக்குள் வராத பரத்தைக்கும் கூடச் சில விதிகளை அமைத்து, சமூகத்தில் இத்தகைய கட்டுமானத்தை உருவாக்கிய ஆண்மையமே அவர்களை இழிவானவர்களாகவும் கட்டமைத்து, அப்பெயர்களையே சமூகத்தின் வசைச்சொல்லாகவும் மாற்றிக் கேலி பேசியது. தன்னை அடக்க இயலாமையின் ஆற்றாமைகளை இந்தப் பெண்களின் மீது ஏற்றி ஏசியதும் பேசியதும் ஒரு பக்கப் பார்வையாய் விமர்சிப்பதுமே தமிழ் இலக்கியப் பக்கங்களில் மிகுதியாக இருக்கிறது.  இன்றைய நவீன யுகத்தில் விளிம்பு நிலை மக்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இற்றைக் காலத்திலும் மிகச் சிறிய குரலாகவே இவர்களைப் பற்றிய பதிவுகள் இருப்பது பரத்தையர் சார்ந்த சமூகக் கண்ணோட்டம் இன்றும் மாறாமல் இருப்பதன் அடிப்படையிலேயே என்று கொள்ளலாம்.

தி. பரமேசுவரி

Monday, July 2, 2012

கொலைக்களமாகும் கல்விக்கூடங்கள்


தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளை அரசு அறிவித்து விட்டது. தங்கள் ஒரு வருட உழைப்பின் பலனை எதிர்பார்த்து மாணவர்கள் நகங்கடித்தபடி காத்திருக்கின்றனர். மூன்று மணி நேரத்திற்குள் திறமையைச் சோதித்து உணர்த்திவிடும் தேர்வுக்குழிக்குள் தம் மக்கள் இறங்கிப் பத்திரமாய் வெளியேறுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் பெற்றோரும் ஆசிரியரும். இலவச இணைப்பாய்ப் பயப் பந்தொன்று சுற்றிக் கொண்டிருக்கிறது நம் அனைவர் வயிற்றிலும். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னும் பின்னுமாகத் தொடரும் தற்கொலைகளே நம்மைப் பேதலிக்கச் செய்கின்றன.

தேர்வு சரியாக எழுதவில்லை, பெற்றோர் திட்டியதால், ஆசிரியர் புண்படுத்தியதால், மதிப்பெண் குறைந்ததால் எனக் கல்வி சார்ந்து நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகி இருப்பது மிகவும் ஆபத்தானது. தேர்வு அரங்கிலேயே தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் ஒரு மாணவி. தற்கொலை என்பதே தவறான, எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கிடைத்தற்கரிய மானுடப் பிறவியை எத்தகைய காரணத்துக்காகவும் நாமாகவே முடித்துக் கொள்வது சரியன்று. உடலைச் செம்மைப்படுத்துவது வீடு; உள்ளத்தைச் செம்மைப்படுத்துவது பள்ளி. ஒழுங்குபடுத்தும் பள்ளியே உயிரை எடுக்கும் இடுகாடாய் மாறுமோ? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமென்பது சான்றோர் வாக்கு.

தேசியக் குற்றப் பதிவு ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு 7, 379 மாணவர்கள் தற்கொலை செய்ததாகவும் 40,000 மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிய வந்துள்ளது. யூனிசெஃப் அமைப்பின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கை ஆசிரியர் திட்டுவதால் படிப்பைப் பாதியில் கை விடுவதாக 74% மாணவர்கள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறது. சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடம் இல்லை என்பதே இந்தப் புள்ளிவிவரம் தரும் கசப்பான உண்மை.

இன்றைய நம் கல்விமுறையும் அதன் பின்னொட்டான பாடத்திட்டமும் மாணவரின் உள்ள நலனைக் கருத்தில் கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பண்புகளைப் போதிக்கக் கூடிய மொழிப்பாடங்கள் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீதி போதனைக் கல்விக்கான பாட வேளை மறுக்கப்பட்டும் ஒப்புக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டிய பள்ளியே மன அழுத்தத்தை அதிகரிக்கும் இடமாக மாறிவிட்டது. அதற்கு, மேலும் எண்ணை வார்ப்பவர்களாகப் பெற்றோரும் சமூகமும்   பள்ளி நிர்வாகமும் இருக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. அரசின் தவறான கல்விக் கொள்கைகளும் மேற்கண்ட போக்குகளும் நம் கல்வியின் ஆன்மாவை அழித்து விட்டன.

தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவை மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளித் தனிமைப்படுத்தியிருக்கிறது. பொதுத்தன்மையிலிருந்து விலகி, சமூகப் பண்பிற்கு முதன்மை கொடுக்காமல் தனக்கே அந்நியப்பட்டு ஆடம்பர வாழ்க்கைக்குப் பலியாகி இறுதியில் துயரத்தில் மூழ்குகின்றனர். இன்றைய பெற்றோர், ஓரிரு பிள்ளைகளுக்கு மேல் வேண்டாமென்று மறுதலிக்கும் அணுக்குடும்பத்தினராக இருக்கின்றனர் (Nuclear family). ஒற்றைக் குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்துவதுடன் தங்கள் ஆசைகளையும் திணித்து அவர்களின் சுயத்தை அழிக்கின்றனர். தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே தங்கள் செல்வத்தைச் சிதைத்துக் கொள்கின்றனர். வீட்டில் ஒரு சின்ன ஏமாற்றத்தையும் தாங்காத மனநிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள், வெளியிலும் அதே சூழலை எதிர்பார்க்கின்றனர். வளரிளம் பருவத்தின் மனத்தேவைகளை உணராமல், பொருட்களை வாங்கிக் குவித்துத் திருப்திப்படுத்துவதிலேயே கவனமாக இருந்து, இழந்தபின் வருந்துவதில் என்ன பயனிருக்க முடியும்? மதிப்பெண் எடுப்பது மட்டுமே மதிப்பு என்ற மனோபாவத்துடன் மாணவரின் மற்ற திறமைகள் கவனிக்கப்படாமல் இருப்பதும் பெற்றோர் தங்கள் விருப்பங்களை அவர் மேல் திணிப்பதும் கூட மாணவர் தற்கொலைக்குக் காரணிகளாக அமைகின்றன.

ஊடகங்கள் மாணவர்களுக்குத் தேவையற்ற செய்திகளை மையப்படுத்துவதும் எதிர்மறையான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதும் திரைப்படங்கள் விதவிதமான வழிமுறைகளைக் கற்பிப்பதும் கண்டிக்கத்தக்கது. சுற்றியிருக்கும் சமூகமும் உறவினரும் பெற்றோரும் சந்தைக் கலாச்சாரத்திற்குப் பலியாகி, மாணவரின் கல்விசார் நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் பிற மாணவருடன் ஒப்பிட்டுப் பேசுதலும் தீராத மன உளைச்சலைத் தருகிறது. அன்றாடம் செய்தித்தாளைத் திறந்தால் தற்கொலை பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் சமூகம் தற்கொலைகளைக் கொண்டாடும் சமூகமாக மாற்றம் பெற்றிருக்கிறது. நம் சங்ககாலத்தின் வடக்கிருத்தல் நோன்பிலிருந்து தொடங்கிப் பேச முடியும். வாழ்வு குறித்த புரிதலின்மையும் பெற்றோரின் பேராசையுமே மாணவர்களை இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்குத் தூண்டுகிறது.

தனியார்மயமாக்கலுக்குப் பலியான பெற்றோரின் தவறான ஆசையே தன் நிதி மெற்றிகுலேஷன் பள்ளிகள் பெருக வழிவகுத்திருக்கிறது. ஒரு காலத்தில் மாணவர்கள் முயற்சித்துக் காப்பியடித்த நிலை மாறி, பள்ளிகளே அதனை ஊக்குவிக்கும் கீழ்மைக்குத் தரம் தாழ்ந்திருக்கின்றன. கல்வி என்பது மேன்மைகளைக் கற்பது என்பது போய் உயர்ந்த வேலை, கை நிறையச் சம்பளம், ஆடம்பர வாழ்க்கைக்கான அஸ்திவாரமென்று சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இயந்திர மயமாக்கப்பட்ட மாணவர்கள் காலை 5.30 மணி முதல் இரவு உறங்கச் செல்லும் 10.30 மணி வரை படித்துக் கொண்டே இருக்கும், கொல்லும் கல்வியாக நம் கல்வி முறை விஷமாக்கப்பட்டிருக்கிறது. வியாபாரமயமாக்கப்பட்ட கல்வி ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக, சந்தை முயற்சியில் 100% தேர்ச்சி (இலாபம்) என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எதைச் செய்தாவது தேர்ச்சி பெறுதல் என்ற நேர்மையற்ற செயல் இன்று பள்ளிகளாலேயே புகட்டப்படுகிறது.

ஆபிரகாம் லிங்கன் தன் மகன் படிக்கும் வகுப்பாசிரியருக்கு எழுதிய கடிதம் மிகப் புகழ் பெற்றது. அதில் "அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று எழுதியிருப்பார். ஆனால் இன்றைய நம் பள்ளிகளின் நிலை இதற்குத் தலைகீழாக இருப்பதாலேதான் நம் மாணவரின் வாழ்வும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

வேதனை, கோபம், தன்னல வெறி, சலிப்பு, வெறுப்பு தன்முனைப்பு, பேராசை, பொறுமையின்மை, பொறாமை, மனத்திடமின்மை, விடாமுயற்சியின்மை, மடமை, இலக்கின்மை, உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கையின்மை, அந்நியமாதல், தனிமை எனத் தற்கொலைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததே; அதில் சோதனைகளும் இழிவும் துன்பமும் கடந்தே தீர வேண்டியது என்பதை உணர்ந்தவர்கள் தற்கொலையைத் தீர்வாக்கிக் கொள்ள மாட்டார்கள். ஒரு ஜென் கதை நினைவிற்கு வருகிறது. இன்பத்தை மட்டுமே கைக்கொண்ட வாழ்வு சித்திக்குமா? என்று ஒரு சீடத்துறவி ஜென் குருவிடம் கேட்க, அவர் ஒரு குச்சியை எடுத்து ஒடிக்கிறார். ஒடித்த குச்சியை மறு முறையும் ஒடிக்கிறார். இப்படி அதனை ஒடிக்க முடியாதபடியான சிறு துண்டாக்கியபின் கீழே போட்டு விட்டுச் செல்கிறார். குச்சியின் இரு பக்கமும் போல வாழ்வில் இன்பமும் துன்பமும் இரு பக்கங்கள்; ஒன்றை ஒன்று நீங்காது என்பதைச் சொல்லும் கதை இது. துன்பத்தைத் தாங்க இயலாத உணர்ச்சி வயப்பட்ட நிலை, சிக்கல்களை எதிர்கொள்ளாத தப்பித்தல் மனோபாவம், அறிவிழந்த நிலை, அறியாமையின் விளைவு எனத் தற்கொலை பல சூழல்களில் நேர்கிறது. கல்வியோடு நல்ல பண்புகளையும் புகட்ட வேண்டிய கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறியதன் சீர்கெட்ட விளைவினை நம் இளைய தலைமுறை அனுபவிக்கிறது.

தொடக்கக் கல்விக்கான நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வு, அரசு வேலைகளுக்கான தேர்வு, தனியார் வேலைக்கும் நேர்முகத் தேர்வு என்று ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய நாளிலிருந்து போட்டிகளைச் சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறான். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் போட்டி உலகத்தில் வாழ்ந்து கொண்டு, தோல்வியைக் கண்டு துவளும் மனம் பெற்றிருந்தால் எப்படி மன அமைதி கிட்டும்? சின்ன விஷயங்களுக்கும் மனம் சிதையும் குழந்தைகள் தம் கனவுகளைக் கானல் நீராகவே காணும். பின் கண்ணீர்க் குமுறலாகவே அது முடியும். உடலில் இருக்கும் ஊனத்தை விடவும் மிக மோசமானது மன ஊனம். நம் மாணவச் செல்வங்கள் இத்தகைய ஊனத்துக்குள் விழுந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படாத, கவனியாத பள்ளிகளும் அரசும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பவை. "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை" என்பார் கிளெமென்ட் ஸ்டோன். இதையே நம் கவிஞர் ஈரோடு தமிழன்பன்,

"பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?"

என்று அழகுத் தமிழில் கவிதையாக்கியிருப்பார். ஆயிரம் முறை தோற்றபிறகே தாமஸ் ஆல்வா எடிசன் விளக்கைக் கண்டுபிடித்தார். பள்ளி நுழைவுத் தேர்வில் தோல்வி கண்டவர் தான் ஐன்ஸ்டீன். அறிவியலாகப் பேசப்படும் இவர்தம் வாழ்வும் வகுப்பறையில் பேசப்பட்டால், அது மாணவருக்கு மன வலிமையைக் கொடுக்கும் மாமருந்தாக இருக்கும். மாணவர் முகத்தையே பார்க்காமல் மனனம் செய்த பாடத்தை அப்படியே சொல்லிச் செல்லும் ஆசிரியரிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? தோல்விக்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. கோழைத்தனமே நாணுதற்குரியது என்பதை ஆசிரியரே சமயம் கிடைக்கும்போதெல்லாம் தம் பாட போதனைக்கிடையில் வலியுறுத்த முடியும். வாழப் பிறந்தவர் வீழலாமா? தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதே நம் சான்றோர் நமக்குக் கற்பிக்கும் முதுமொழி. வலிகளைக் கடந்து, வேதனைகளைச் சுமந்தாலும் சாதனையாக மாற்ற விடா முயற்சி வேண்டும். துவண்டு விடாமல் தோல்விகளைக் கடக்க வேண்டும். அந்தத் தோல்வி தந்த அனுபத்தையே பாடமாக்கி, அடுத்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும். இதுவே வாழ்க்கையின் பால பாடம். தன் பின்னடைவுக்கான காரணங்களை இனங்கண்டு, அடுத்த கட்ட நகர்வுக்கு வழி அமைத்துக் கொள்பவரே புத்திசாலி. ஏட்டுக் கல்வி கறிக்குதவாது என்று செம்மையான மனத்துக்கு உதவாத பயனற்ற கல்வியையே நம் முன்னோர் சாடியிருக்கின்றனர்.

ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். "பலரும் தங்களது சூழல் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ தங்களுக்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள்" என்பார் பெர்னாட்ஷா. இப்படியான நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கப் பள்ளிகள் உதவ வேண்டும். மன நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். 10, 12 மதிப்பெண் அட்டைகளிலும் கூடப் பாடத்திற்குக் கொடுக்கும் முதன்மையை இசைக்கும் ஓவியத்துக்கும் விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.

தனித் திறன் வளர்த்தல், கதை சொல்லல், பாட்டு, நீதி போதனை, விளையாட்டு, பிற கலைகள் மாணவர் மன அழுத்தத்தைப் போக்கி, அறிவைக் கூர்மைப்படுத்துபவை. இதை உணராத சில போலிக் கல்வியாளர்கள், பாட வேளைகளில் இவற்றைச் சேர்ப்பதில்லை. பாடத்திட்டத்திலும் இவை இடம் பெறுவதில்லை. இவற்றுக்கு முதன்மை கொடுப்பதுடன், தகுந்த ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். பள்ளி நூலகங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதுடன் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பயிற்சியையும் மாணவருக்கு வழங்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள் மேற்கல்விக்காக நகரத்துக்கு வரும்போது பழகும் வரையிலான இடைவெளியில் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆங்கிலம் பயமுறுத்தும் மொழியாக மாறி விடுகிறது. இதை நல்ல ஆர்வமுள்ள, திறமையான ஆசிரியர்களே மாற்ற முடியும். தொடக்க நிலையிலிருந்தே தரமான ஆசிரியர்களைக் கொண்டு மொழிப் பாடங்கள் கற்பிக்கப் படும்போதே இத்தகைய (தற்)கொலைகள் மறையும். கல்லூரிக் கல்விக் காலத்தில் வாரம் ஒரு முறை, ஒரு பாட வேளை உளவியல் நிபுணரைக் கொண்டு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தச் செய்யலாம். வெவ்வேறு சூழலிலிருந்து வந்த மாணவர்கள் தங்கள் மனப் புழுக்கத்தை மாற்றிக் கொள்ளவும் வலிமை பெறவும் இது உதவும்.

ஒவ்வொரு முறையும் இத்தகைய அவலத்தைச் சந்திக்கும்போதெல்லாம் கூடிப் பிதற்றிக் கலையாமல் உறுதியாகச் செய்ய வேண்டியவற்றை ஆராய்ந்து, 'தோல்வி என்பது பயமுறுத்துவது போல் வந்தாலும் அது கால் வருடிச் செல்லும் அலை போன்றதே. மீண்டும் மீண்டும் வந்தாலும் திகைக்காமல் செயல்பட்டால் மீளலாம் என்பதை இளம் மாணவர்களின் மனத்தில் விதைக்கும் வழிகளைச் செயல்படுத்துவதொன்றே இதற்குத் தீர்வாக முடியும்.  
_