Tuesday, June 22, 2010

மனச்சிறகு

நன்றி: தாமரை ஜூன் 2010

அடைபட்டிருக்கும் உடலில் இருந்து

வெடித்துக் கிளம்புகிறது மனம்

முளைக்கும் சிறகை மறைத்துக் கொண்டு

மென்பாதங்களுடன் வெளியேறும்

கனத்த மழையின் முதல் துளியை

முகத்தில் ஏந்தி மென்னகை புரியும்

அருவியின் விசையில் சிலிர்த்து நனைந்து

தெறிக்கும் திவலைகள் சேகரிக்கும்

அடங்கிக் கிடக்கும் காற்றை

உசுப்பி விரட்டும்

சிவந்த நெருப்பின் மிச்சம் எடுத்துக்

கொண்டையில் செருகி அழகு பார்க்கும்

நிலம் பிளக்கத் தூசு கிளப்பிக்

கண்ணாமூச்சு ஆட்டம் ஆடும்

சீழ்க்கையடிக்கும் வானம் நோக்கிச்

சிறகடித்துச் சிகரம் எட்டும்

இரவின் எச்சம் மெலிதாய்க் கழிய

தளர் நடையுடனே

உடலுள் முடங்கும்.

No comments:

Post a Comment