Thursday, September 29, 2011

கழிப்பறை காணாத கல்விக் கூடங்கள்

(நன்றி: வேர்கள் அமைப்பு, மதுரை)

"உலகிலேயே கஷ்டமான விஷயம் எது?" என்று அரசவையில் ஒரு நாள் கேட்டார் மாமன்னர் அக்பர். அதற்கு, பீர்பல் சொன்ன பதில் அவருக்குப் பெருங்கோபத்தைத் தந்தது. மறுநாளுக்குள் தன் பதிலை நிரூபிக்காவிடில் பீர்பலுக்குத் தலை போகும் என்ற நிலை. மறுநாள் காலை, அக்பரை அவரது பள்ளியறையிலிருந்து அரண்மனைத் தோட்டத்துக்குச் செல்லும் வாயிற்கதவை அடைத்து விட்டார் பீர்பல். அரை மணி நேரம் கழித்துத் திறந்து விட, அதற்குள் தவித்துவிட்ட அக்பர் கதவை அடைத்தவரும் திறந்தவரும் யாரென்றும் பாராமல் மிக வேகமாக ஓடினார் தோட்டத்தை நோக்கி. சற்று நேரம் கழித்து கோபத்தோடு வந்த அக்பரிடம், வருத்தம் தெரிவித்த பீர்பல், தான் நேற்றுச் சொன்ன பதிலை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார். அக்பரும்  உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்பதை உணர்ந்து கொண்டார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தியே ஆக வேண்டிய மிகச் சிலவற்றில் கழிவறையும் ஒன்று. நம் உடலின் சுழற்சியில் இன்றியமையாப் பங்கு வகிப்பதும் உடல்நலம் காப்பதிலும் கூட உடல்கழிவுகளை அகற்றுதல் அவசியமானதொன்று. ஓர் அரசு தன் குடிமகனு/ளுக்குச் செய்து தர வேண்டிய அடிப்படை உரிமையுமாகும். ஆனால் இந்தியாவில் இருக்கும் கழிவறைகள், அது பராமரிக்கப்படும் முறை பற்றியும் அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நாம் விவாதிக்கத் தொடங்கினால் மார்க்ஸ், எங்கெல்ஸிடமெல்லாம் நாம் போக வேண்டியிருக்கும்.

'ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது' என்பது ஒரு பழமொழி. குழந்தைகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு டயாபர் எனும் சிறிய தலையணை போன்ற கோவணத்தைக் கட்டி விடுகிறார்கள். நோயுற்ற முதியோருக்கும் அதே நிலைதான். கொடுமை என்ன வெனில் கட்டப்படுகின்ற துணியைப் பல மணி நேரம் எடுத்துப் பாராமலே இருப்பதால் அதுவே நோய்களின் கூடாரமாகவும் ஆகி விடுகிறது. முன்னர் இருந்த மெல்லிய துணிகளெல்லாம் இன்று நாகரிகமற்றதாக மாறி விட்ட நிலையில் இந்தக் குட்டித் தலையணை டயாபர்களே பெரும்பான்மையாக நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஓடிக்கொண்டே தான் குடும்ப உறுப்பினர்களிடம் கூடப் பேச முடியுமென்ற நிலையில் இருக்கும் இந்த நவீன யுகத்தில் இவைகளைத் தோய்க்க வேண்டியதில்லை, கழற்றிக் கடாசி விடலாமென்ற ஒற்றை வசதியில் இந்த நோய்க் கூண்டு மிகப் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தலையணைகளே தெருக்குப்பையில் மிகுதியாக இருப்பதும் கவலைக்குரிய விஷயம்.
 
நம் நாட்டில் உள்ள பள்ளி, விடுதி, பொது மருத்துவமனை, உணவகம், பொதுக் கழிப்பிடம், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், அரசு அலுவலகம் என மக்கள் பயன்படுத்தும் இடங்கள் பலவற்றிலும் சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்குமளவில்தான் கழிவறைகள் பராமரிக்கப்படுகின்றன; பயன்படுத்தவும் படுகின்றன. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் கொடுக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே கழிவறை பயன்படுத்துவதும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும்தான். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளே பெறும் இப்பயிற்சியை, பொதுப் பள்ளிகளில் பயிலும் நல்ல மனத் திறனுடைய மாணவர்களும் கூடக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் பள்ளிக் கழிப்பிடங்களும் ஏனைய பொதுக் கழிப்பிடங்களும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. ஆரம்பப் பள்ளியில் பயில வேண்டியதை வாழ்நாள் முழுதுமே பயிலாமல் இருக்கின்ற காரணத்தாலேதான் நம் நாட்டின் தெருவோரங்களே கழிப்பிடங்களாக மாறிச் சுற்றுச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 
 
நாட்டின் முதுகெலும்பு என்று வருணிக்கப்படும் கிராமங்களில் இன்னமும் கழிப்பிடம் இல்லாத வீடுகளே மிகுதி. குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்திலோ எனில் ஒரு இடத்தில் கூட இலவச கழிப்பறை இல்லை.  அதன் விளைவாக நகரத்தெருக்களில் ஓடும் நாற்ற ஆறுகளையும், மூத்திரச் சந்துகளையும், மூலைகளில் தேங்கி நிற்கும் மலக் குட்டைகளையும் மூக்கைப் பொத்திக் கொண்டே காணலாம். அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் மாநிலத்தில்தான் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயும் மலம் கழிக்க ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நகரை அழகுபடுத்துவதை விட முக்கியமனது அடிப்படைச் சுகாதாரம். ஆனால் உண்மை என்னவெனில் பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்ற்கு ஏற்ற்பக் கழிப்பிடங்கள் கட்டத் திட்டமிடப்படவில்லை என்பதே.

இந்தச் சூழலில் வருங்காலத் தூண்களான குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் இன்னும் கொடுமையைச் சந்திக்கிறார்கள். நம் பள்ளிகளில் இன்றைக்குப் பாடம் கற்ற்பிப்பதோடு மேற்சொன்ன விஷயத்தை அடக்கவும் கற்றுத்தருகிறார்கள். காரணம், தமிழ்நாட்டில் 41% அரசு பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது; 74% அரசு பள்ளிகளில் நீர் வசதி இல்லை; தூய்மை இல்லாத ஆரோக்கியக் கேடான நிலையில் கழிவறைகள் உள்ளன என்பதே மிகக் கசப்பான உண்மை. பல அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன. இன்னும் பல பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதி இருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெட்ட வெளியில் இயற்கை உபாதை கழிப்பதைக் காணும் பெற்றோர் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அதிலும் குறிப்பாக, பதின்பருவ வயதில் இருக்கும் மாணவிகளின் நிலை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்று.
 
'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது என்று கூறுகிறார். அவர் கூறியுள்ளது நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்தியாகும். பள்ளிகளில் கழிவறைகள் இன்மை அல்லது முறையாகப் பராமரிக்கப்படாமை என்பது ஒரு சிக்கலாக நில்லாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் இயற்கை உபாதையை அடக்கிப் பழகும் பெண்கள், பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாவதுடன் உளவியல் நிலையிலும் பாதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளிகளைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கூடுதலாக இன்னும் பல சிக்கல்களை, அவமானங்களை, ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள். இதன் காரணமாகப் பல பெண்கள் தங்கள் கல்வியை விட்டு இடையில் விலகுவதும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும்?
 
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், மாதவிலக்குக் காலங்களில் மாணவிகள் படும் துயரம் சொல்ல மாளாது. நீர் வசதி இல்லாத கழிப்பிடங்களில் மாணவிகள், தங்களை எப்படித் தூய்மை செய்து கொள்ள முடியும்? தூய்மையற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு, கருப்பை பாதிக்கப்படுவதுடன் வெள்ளைப்படுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை கீழிறங்கிவிடுகிறது, சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கழிக்க வேண்டுமென்னும் உந்துதல் தோன்றிய பின்னும் அதனை அடக்கிக் கொள்ளுதல் என்பதே அவர்களுக்கு இழைக்கப்படும் அராஜகமாகவும் பெரும் மனித உரிமை மீறலாகவும் பார்க்கப்பட வேண்டியது. தொலைதூர நோக்கில் பார்க்கும்போது, ஒரு தூய்மையற்ற கழிப்பிடம் பெண்ணின் உடல்நலம், உளநலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், வருங்காலத்தலைமுறையையும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே வகுப்பறைகள் வன்முறைக் கூடங்களாக இருக்கும் நிலையில் பள்ளிக் கழிப்பிடங்கள் அதன் சித்திரவதைக் கூடங்களாகவே இருக்கின்றன.
 
தமிழகத்தில் 2008 கணக்கீட்டின்படி மொத்தம் ஐம்பத்து மூன்றாயிரம் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 13,808 பள்ளிகளில் கழிப்பறை வசதியே கிடையாது. 17,000 பள்ளிகளில் பெண்களுக்கென தனி கழிப்பிட வசதி கிடையாது. ஆக சரிபாதி பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. மீதமிருக்கும் பள்ளிகளில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இல்லை என்றாலும் அது எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது நாமறிந்ததே. இன்றைக்கு இது மேலும் கூடியிருக்கும். ஆனால் பள்ளிகள் மட்டும் தான் கூடுகிறது; தரம் உயர்த்தப்படுகிறதேயன்றி அதற்ற்கேற்றாற்போன்ற வசதிகள் செய்து தரப்படுவதில்லை. 1660 பள்ளிகளில் குடிநீர் வசதி கிடையாது மற்றும் சற்றேறக்குறைய 13,000 பள்ளிகளுக்கு மின்சார வசதி கிடையாது என்பன கூடுதல் தகவல்கள்.
 
ஊனமுற்றோருக்கென சிறப்புக் கழிப்பறைகள் தமிழ்நாட்டின் பொது இடங்களில் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம் எனும் நிலையில் ஊனமுற்ற மாணவர்கள் பள்ளியில் படும் பாட்டைச் சற்றே நினைத்து பார்க்க வேண்டும். தமிழக அரசின் ஊனமுற்றோர் நலவாரியமே மூன்றாவது மாடியில்தான் செயல்படுகிறது என்பதே அரசின் அக்கறையைக் காட்டி நிற்கும். போதுமான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இருப்பதும் அதன் பராமரிப்பு முறையாக இருப்பதும் நிச்சயம் மக்களுக்கு பொறுப்புணர்வைத் தரும். அதன் மூலம் மக்கள் இதுபோன்ற இடங்களை வீணாக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தை மாற்றலாம்.
 
புதுவை அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது குறித்து புதிய வேள்வி நல்வாழ்வு சங்க தலைவர் ரஞ்சித்குமார், "அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பிடம் ஒன்று மட்டுமே உள்ளது. மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் கூடுதல் கழிவறைகள் கட்டித்தர வேண்டும்" என்று கூறுகிறார்.
 
பெரும்பாலும் காலில் செருப்பில்லாத கிராமத்துக் குழந்தைகள் இந்தச் சூழலில் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு மாணவனைக் கேட்கையில், "எங்கள் கால்களை ஈரப்படுத்திக் கொண்டு, இயற்கை அழைப்பினை செயற்கையாக எவ்வளவு வேகமாகப் பண்ண முடியுமோ அப்படி முடித்துக் கொண்டு வெளியே வந்து மணலில் காலைப் புரட்டி எடுப்போம். கையினை டிராயரில் உள்ளே தடவிக் கொள்வோம்" என்று கூறுவதைக் கேட்கையில் மனத்தில் வேதனை மண்டுகிறது. ஆனால் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பிடங்களைத் தூய்மையாக வைக்கும் முயற்சியின் மற்றொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். கழிப்பிடத் தூய்மை என்பது பள்ளி நிர்வாகம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. பொதுவாக, கிராமங்களில் இன்றைக்கும் பெரும்பான்மை வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், பள்ளியில் இருக்கும் கழிப்பிடங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் அறிவினைப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
என் பள்ளியில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தூய்மையான, நீர் வசதியோடு கூடிய கழிப்பிடங்களை ஏற்ற்படுத்திய பிறகும் கூட அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத காரணத்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. வசதியைச் சரிவரப் பயன்படுத்தாமை, உபயோகித்த நாப்கின்களை அங்கேயே சுத்தப்படுத்தாமல் வீசுதல், சுற்றிச் சிதறடித்தல், அதனால் அடைப்பு ஏற்படுதல் போன்றவை இன்னும் தலைவலியை உண்டாக்கின. வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளிக்கும் இது மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியதுடன் இதுவும் ஒரு வகை மனித உரிமை மீறலாகவே எனக்குத் தோன்றியது. நம் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நம்மைப் போன்ற இன்னொரு மனிதனை அடைப்புகளை நீக்கச் சொல்வதும் சரியான செயலாக எனக்குப் படவில்லை. என்றாலும் மேலும் இரண்டு முறை சுத்தப்படுத்தியும் அலட்சியப் போக்கே தொடர்ந்தது. கண்காணிக்க மாணவியர் குழு ஒன்றை ஏற்படுத்தினோம். அதுவும் கூடத் தோல்வியிலேயே முடிந்தது. மீண்டும் மீண்டும் மாணவியரைக் கூட்டிப் பேசிப் பார்த்தும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்த போதும் கூட மிகக் குறைந்த பலனே கிடைத்தது. இறுதியில் தூய்மை செய்ய வந்த தொழிலாளி நண்பர் கோபித்துக் கொண்டு நின்றவுடன் வேறு எவரும் கிடைக்காத நிலையில் பள்ளிக் கழிவறை மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று முன்பிருந்த நிலையை விடவும் இன்னும் மோசமானது.
 
ஒரு தலித் தொழிலாளர்தான் கழிப்பிடத்தைத் தூய்மை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. மாணவிகளே தத்தமக்குள் குழு அமைத்துத் தூய்மை செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபோது பெற்றோரிடமிருந்து கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்ததன் விளைவு, மீண்டும் மாணவிகள் பள்ளிச் சுவரோரங்களைத் தேடிச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. ஆனால் பள்ளியில் உள்ள பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் படை, தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றை இன்னும் செம்மையாக இது விஷயத்தில் பயன்படுத்த முடியுமா என்பதும் ஆராயத்தக்கதாகும். ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் தூய்மைப் பொறுப்பை எடுத்துக் கொள்வதும் கூடச் சிறப்பானதாகும். தேசத்தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார்? அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவருடன் அவரது தொண்டர்களும் மாணவர்களும் கூட இறங்கியிருப்பர். ஆனால் இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம் இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம் என்னும் தினமணி 05-07-2011 நாளிட்ட தலையங்கக் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.
 
பெரும்பாலான பள்ளிக் கழிப்பிடங்கள் ஒரு நீண்ட மேடை போன்று பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது போன்றே அமைக்கப்படுகிறது. ஓரிரு அறைகள், அதுவும் மின் இணைப்பு இன்றியே கட்டப்படுகின்றன. 1000 முதல் 4000 மாணவ - மாணவிகள் வரை படிக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த ஓரிரு கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. நீரற்ற இத்தகைய கழிப்பிடங்கள் பன்றிகளின் தங்குமிடமாக மாறி மேலும் நோய்களையே பரப்புவதாக அமைகிறது. மாணவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் குழாய்களையும் கதவுகளையும் உடைத்தல், வழியெல்லாம் அசுத்தம் செய்தல் என மேலும் சீரழிவுகளை நிகழ்த்துகின்றனர். தாம் செய்வது இன்னதென்றும் அதன் விளைவுகளை அறியாமலும் செய்கின்ற இத்தகைய காரியங்களால் நிலைமை மேலும் இறுக்கமடைகிறது.
 
மற்றொரு பள்ளியில் நேர்ந்த அனுபவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய கழிப்பிடங்கள் திறந்தவெளியாக, மேற்கூரை இன்றியே அமைக்கப்படுகின்றன. இங்கு மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்களின் மீது மாணவர்கள் ஏறி நின்று பார்ப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டியபோதுதான் இதற்குள் இருக்கும் மேலும் பல சிக்கல்களை உணர முடிந்தது. பதின் பருவப் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மேற்கூரை மூடப்பட்ட நிலையில், கதவுகளுடனும் நீர் வசதி, மின் இணைப்பு, மற்றும் காற்றோட்டத்துடனும் நல்ல கால்வாய் வசதியுடனும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். திருப்பூர் ஜெய்வாபாய் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கின்களை எரிப்பதற்கென்றே இயந்திரம் ஒன்றை நிறுவியிருப்பதாக ஒரு நாளிதழ்ச் செய்தி படித்த நினைவு. இதைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடு நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த வசதியைச் செய்து விட்டால் முன்னர் சொன்ன அடைப்புகள் ஏற்படுத்தல் போன்ற சிக்கல்களைத் தீர்த்து விடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று அரசு கழிவறை கட்ட நிதி உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை இன்னும் வேகமாகவும் சீரிய முறையில் ஊழலுக்கு இடமளிக்காத வகையில் செய்து முடிக்கும்போது மாணவ மாணவியர் பள்ளியிலும் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வர். வளரும் இளம் குழந்தைகளுக்குக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கற்பித்தல் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மூன்று வயதிலேயே குழந்தை தனித்துத் தன்னைச் சுத்தம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்ததாகும். விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளும்.  இந்தத் தொட்டில் பழக்கமே சுத்தமான வழக்கமாகக் கடைசி வரையிலும் அவர்களைப் பின்பற்றி நிற்கும். இல்லாவிட்டால் ஐந்திலும் வளையாது; பின்பு ஐம்பதிலும் வளைக்க முடியாது.
 
நம் நாட்டின் குழந்தைகளே நாளைய வலிமையான இந்தியாவின் தூண்கள். அந்தத் தூண்கள் உடல்நலம் கெட்டு உளுத்துப் போகாமல் உண்மையான வலிமையோடு திகழ தூய்மையான கழிப்பிடங்களும், சுற்றுச் சூழலும் நல்லறிவும் அவர்களுக்குத் தேவை. அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது மாநில, நடுவணரசுகளின் கடமையுமாகும். அடிப்படையான உரிமைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுள் அடங்கும் கழிப்பிடம் ஆகிய வசதிகளைச் செய்து தராத கீழ்மையானதொரு அரசாங்கத்தை வருங்காலத் தலைமுறை மன்னிக்காது. உழைத்துப் பெற வேண்டிய பொருட்களையெல்லாம் இலவசமாகக் கொடுக்கும் அரசு, இலவசமாகக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளை வசதி படைத்தோருக்கு மட்டுமானதாக வைத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள சுகாதாரத் துறை, உயர் மற்றும் தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் வீட்டில் கழிவறை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் கிடையாது என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளல்லாம். நவம்பர் 19 உலகக் கழிவறைத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இதற்கென ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுவதே இதன் முதன்மைத்துவத்தை நமக்கு விளக்கும். எனவே நமது அரசும் உண்மையான கவனத்தைச் செலுத்தி, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கிக் கொடுத்தால், கல்வி கற்றலை இனிமையாக்கும். மன வளம் பெருகும்; ஆளுமை ஏற்றம் பெறும். புதிய, ஆரோக்கியமான உலகம் உருவாகும்.

4 comments:

  1. அருமையான பதிவு... மிகவும் சுகமான விஷயம் என்று பீர்பாளுக்கும் அகபருக்கும் நடந்த விஷயத்தை பதிவுக்கு ஏற்றது போல் அருமையாக மாற்றியுள்ளது அருமை..

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எல்லா திட்டங்களுக்கும் மக்களின் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். நாம் தண்டனைக்கு பயபபடுகிறோமே ஒழிய, சமூக நலன் பற்றி கவலைப்படுவதே இல்லை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  3. அறிவு ஜீவிகளும், கோடீஸ்வரர்களும் நிறைந்த தமிழகத்தில் எல்லா நலத்திட்டங்களையும் அரசே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது மடத் தனம். ரஜினி காந்த், குஸ்பு, சூர்யா போன்ற கோடீஸ்வர திரை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் உள்ள அத்தனை பஞ்சாயத்துக்கள் - நகாராட்சி - அரசு துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில், சுகாதாரமான கழிப்பிடம் கட்டிக்கொடுக்கலாம்.

    தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு, காலைக் கடன் கழிக்க இடம் தேடுவதே பெரிய சிரமம்.அடித்தட்டு மக்களுக்கு எத்தனையோ அடிப்படை பிரச்னைகள். இந்த திரைப்பட நட்சத்திரங்கள், இவர்களைப் போன்ற பல பணக்காரர்கள் இதயத்தில் தர்ம சிந்தனையை வளர்த்து அடித்தட்டு மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். பரமேஸ்வரி போன்ற பொது நல விரும்பிகள், மேற்படி திரைத்துறை மற்றும் கார்பொரேட் நிறுவனர்களைச் சந்தித்து, ஒருங்கிணைந்து மேற்படி திட்டங்களுக்கு உயிர் கொடுக்கலாம்.
    நன்றி.

    ReplyDelete
  4. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி. ஆகியோருக்கு ஒதுக்கப்படும் நிதியைச் சுகாதாரப் பயன்பாட்டிற்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டால் இந்தத் தொல்லை பெரும்பாலும் குறைந்து விடும்.

    ReplyDelete