Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Tuesday, May 8, 2012

பள்ளியெனும் பெருஞ்சிறை

நன்றி: பாவையர் மலர்

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்று சொன்னார் அபுல் கலாம் ஆசாத். மாணவர்களே நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதையே இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஆனால் நாளைய தலைமுறை இன்று பள்ளிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் மற்றும் இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றிய உமா மகேசுவரி, அவரிடம் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனாலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர் பணி மீதிருந்த காதலால் தனக்குக் கிடைத்த வங்கிப் பணியையும் மறுத்து விட்டு, ஏழு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியைக்கு கிடைத்த இந்த முடிவு அதிர்ச்சியானதுதான். ஆனால் கொலை செய்ய நீண்ட அந்தக் கைகள் மாணவனுடையது மட்டும் தானா என்று நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. அவருடைய உடலில் சரமாரியாக விழுந்த அந்தக் குத்துகள், நம் கல்வி முறையின் மீது, ஏனைய ஆசிரியர்கள் மீது, சமூகத்தின் மீது, மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத அரசின் மீது என்று நம் அத்தனை பேருக்கும் அந்தக் குத்து விழுந்திருக்கிறது. இந்தக் கொலையில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை நாம் கவனப்படுத்த வேண்டும்.

தவறு செய்த (கொலை செய்த என்று எழுதவும் கரம் நடுங்குகிறது) அந்த மாணவனின் வீட்டுச் சூழலைக் கவனித்தால் மகிழுந்திலேயே பள்ளி வந்து செல்லுமளவுக்கு வசதியானவன். மூன்று பெண் குழந்தைகளுக்கு இடையில் ஒரே ஆண் பிள்ளை எனும் செல்லம். ஒவ்வொரு நாளும் 100 ரூபாயைச் செலவுக்குக் கொடுக்கும் பெற்றோர். வீட்டில் தனி அறை, கணிணி வசதி. மிக அமைதியானவன். யாருடனும் கலந்து பழகாத தன்மை. ஆசிரியருக்குப் பயந்து அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பவன். அந்த மாணவன் குறித்து ஊடகங்கள் நமக்கு வழங்கிய சித்திரம் இது.

இன்றைய மாணவன் கடும் உளவியல் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கிறான். பெரும்பாலான பள்ளிகளில் இது கவனிக்கப்படுவதேயில்லை. மேற்கத்திய மனோபாவத்துடன் வாழத் துடிக்கும் பெற்றோர், மகனு/ளுக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறார்களே தவிர, தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிப் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது பற்றிச் சிந்திப்பதில்லை. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 100% தேர்ச்சியை நோக்கிச் சவுக்கை சுழற்றும் ரிங் மாஸ்டர்களாக இருந்து கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களை வியாபாரப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், தம் பொறுப்பை மறந்து, துறந்து இழிதொழில் செய்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் இருக்கும் பெற்றோரே ஆசிரியர் என்பதை மறந்தே போன ஆசிரியர், மாணவனது உள நலம் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் மதிப்பெண் அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, உரையாடலேதுமின்றியே அவனைக் குற்றம் சாட்டி விட்டு நகர்கிறார். அவனைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகம் அவனை மேலும் பல தூண்டில்களோடு வீழ்த்தக் காத்திருக்கிறது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகத் தொகை ஒதுக்கு அக்கறையோடு கவனிக்க வேண்டிய அரசாங்கம், மாணவர் நலன் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளைத் திசை திருப்பிச் செல்கிறது. மாணவனின் உடல், உள நலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சற்றும் பிரக்ஞையற்ற மண் போன்ற கல்வித்திட்டம் அவன் காலைப் பிடித்திழுக்கிறது. அதன் பின்னொட்டாய்த் தேர்வுகள்.

இதனால்தான் ஆசிரியை உமா மகேசுவரி கொல்லப்பட்டபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையிலிருந்து வெளி வருவதற்குள் விருது நகரில் ஆசிரியரை மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. காலை வழிபாட்டிற்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த இரண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டித்தபோது, எங்களைக் கண்டித்தால் சென்னையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று அவர்கள் ஆசிரியரை மிரட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்திருந்த கொலையால் மிரண்டிருந்த ஆசிரியர் சமூகம், வெகுண்டெழுந்து, அந்த மாணவர்கள் மீது புகார் கொடுத்ததால் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களாய்த் தேர்வு எழுத வேண்டியவர்கள் இப்போது தனித் தேர்வர்களாய்த் தேர்வு எழுதிக் கொண்டிருப்பர். அரசை எதிர்த்து ஊதிய உயர்வுக்காகவும் வேறு பயன்களுக்காகவும் போராட்டம் நடத்திய ஆசிரியர் சமூகம் அங்கு, மாணவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. தான் செய்வது இன்னதென்பதை உணராது மாணவன் செய்யும் தவறுக்கு இத்தனை கடுமையான தண்டனை தேவையா என்று அந்த ஆசிரியர் ஏதேனும் ஒரு கணத்தில் இதைச் சிந்தித்திருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.

ஆசிரியரும் மாணவரும் பள்ளியில் எட்டு, ஒன்பது மணி நேரத்தை ஒன்றாகவே கழிக்கின்றனர். ஒரு நாளின் மிக முக்கியமான, மனிதன் மிகச் செயலூக்கத்துடன் இருக்கும் பொழுதுகளை அவர்கள் ஒன்றாகக் கழிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நேர்க் கோட்டில் சற்றே பெற்றோர் மனோபாவத்துடனும், ஆசிரியராயும் கொஞ்சம் நட்பாயும் இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவர் உறவு இன்று ஆசிரியர் X மாணவர் என்று விரோத பாவத்துடன் எதிர் எதிர் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருப்பது யாருடைய பிழை என்பதை மாணவனை விடவும் ஆசிரியரே மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் கையில் அலை பேசியும், அறையில் கணிணியும் அமர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் கரம் பற்றிப் பேசவும் உணர்வுகளால் அவர்களின் உள்ளம் தொடவுமான உறவுகள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்கள் விளையாடும் கணிணி விளையாட்டுகளில் கூட கொலையும் வன்முறையும் புகுந்திருப்பதை, வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் வன்முறையைப் போதிப்பதை எவரேனும் கவலையுடன் யோசிக்கிறார்களா?
ஒற்றைக் குழந்தையாய், அணுக்குடும்பங்கள் பெருகி வரும் இவ்வேளையில் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், சொல்வதையெல்லாம் அப்படியே நம்புதல், பெற்றோரின் நேரமின்மை ஆகியவை ஏமாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்குவதில்லை. உலகச் சுகாதார அமைப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத் தன்மை, ஒழுக்கம் போன்ற பத்து விஷங்களில் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.

கசடு அறக் கற்ற கல்வி இன்று பணத்தைத் துரத்திச் செல்லும் கல்வியாய் மாறி விட்டது. பெற்றோர், தன் மகன் முதல் மாணவனாய் வர வேண்டும்; பணம் கொழிக்கும் படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். மாணவர்களும் தொழில்சார் படிப்புகளே உயர்ந்தது என்ற மனோபாவத்துடன் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை நோக்கி நகர்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் அதற்கான கல்விக் கட்டணமாகப் பெரும் தொகையைக் கறந்து விடுகிறது. உண்மையான கல்வி இவர்கள் கையில் சிக்காமல் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கையில் ஒரு இதழ்க்கடை முறுவலுடன் நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இரண்டு நாட்களாகத் திட்டமிட்டு, கத்தி வாங்கி, அவர் தனியாக இருப்பார் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவரைக் கத்தியால் குத்திய அந்த மாணவனின் மனத்தில் வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன எல்லோரையும்தான் சுட்டிக் காட்ட வேண்டும். பதினான்கு முறை அந்தச் சிறுவனுக்குப் படிப்பு வரவில்லை என்பதை, சரியாகப் பள்ளிக்கு வரவில்லை என்பதை, தேர்ச்சி பெற முடியாது என்பதை அந்த ஆசிரியர் சுட்டிக் காண்பித்திருக்கிறார். தேர்ச்சி அட்டையிலும் பள்ளி நாட்குறிப்பிலும் திரும்பத் திரும்பப் பதியப்பட்ட இந்தக் கருத்து அந்த மாணவனின் உள்ளத்தைப் பாதித்திருப்பதும் அதை எடுத்துச் சென்று பெற்றோரிடம் கையெழுத்துப் பெற்று வர வேண்டுமென்ற உத்தரவில் அவன் அவர்களிடம் வாங்கி இருக்கக் கூடிய திட்டு, அடி ஆகியவையும் அவன் அதற்கு முதல் நாள் பார்த்த திரைப்படமும் தன்னால் படிக்க முடியாது என்று கேலி செய்த அவனுடைய இந்தி புத்தகமும், இவை எல்லாமும்தான் ஆசிரியர் மீதான கத்திக்குத்துக்குக் காரணம்.

கற்பதும் கற்பிப்பதும் மட்டுமே நடக்கும் பயிலரங்கமல்ல பள்ளிக் கூடம். அனைவருடனும் கூடி மகிழ்ந்து, விட்டுக் கொடுத்து, விளையாடி உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைப் பயிலும் இடமும்தான். கல்வியை மட்டிலும் கற்பிக்க இன்று பல தனிப் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. விளையாட்டு, ஓவியம், பாட்டு, நடனம், நன்னெறிக் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகள் என இன்னோரன்ன கல்விகளும் மாணவனுக்குத் தேவையாய் இருப்பதை யார் யாருக்கு உணர்த்துவது? இவை தானே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மனத்தை விசாலமாக்கும் வாயில்கள். இந்த வாசல்களை அடைத்த ஒரு பெருஞ்சிறையாகக் கல்வி வளாகத்தை மாற்றியது யாருடைய குற்றம்? படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; அது வாழ்வின் ஒரு பகுதிதான் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். கோடை விடுமுறையை கூட விடாமல் வீட்டுப் பாடங்களைப் பெரும் சுமையாய்க் கொடுப்பதும் 10, 12 வகுப்பு மாணவர்களின் மொத்த நாட்களையும் களவாடி அவர்கள் கையில் புத்தகத்தைத் திணிப்பதும் உண்மையான கல்வியைக் கொடுக்குமா? இப்படிப் பயிலும் மாணவர்களின் மனத்தில் கல்வி சார்ந்து என்ன மாதிரியான பிம்பம் உருவாகும்?

மாணவனைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கும் ஆசிரியர், அவனிடம் இருக்கும் சிறு வன்முறையையும் கவனித்து அக்கறையாய்ப் பேசி, பெற்றோரிடம் அறிவித்து, அவன் வாழ்வை மடைமாற்றம் செய்வதாலேயே மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்த நிலையில், தெய்வத்துக்கும் முன்னர் வைக்கப்பட்டனர் ஆசிரியர் பெருமக்கள். ஆசிரியப் பணி அறப்பணியாகக் கருதப்பட்ட கால்மொன்று இருந்தது. இன்றைக்கு இப்பணியில் புகுந்துள்ள சில காளான்களால் ஆசிரியர் சமூகமே குற்றவாளிக் கூண்டில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலை.

ஒரு பள்ளிக் கூடம் கட்டப்படுகிறதென்றால் பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று கூறுவார்கள். அதனால்தான் நம் பாரதியும்,
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"

என்று எழுத்தறிவித்தலை ஏற்றிப் போற்றிப் பாடுகின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது. அந்த மிருகத்தை அடியோடு ஒழித்து, நல்ல பண்புகளைப் புகட்டுமிடமாகப் பள்ளிகள் இருக்க வேண்டுமேயன்றி அந்த மிருகத்தைத் தூண்டி விட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பும் பணியைச் செய்தல் தகாது. பள்ளிக் கூடத்தின் நீண்ட, நெடிய, பிரம்மாண்டமான சுவர்களுக்கு நடுவில் எந்த நுண்கலைகளுக்கும் விளையாட்டுக்கும் இடமில்லாமல் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் அட்டை கொடுப்பவராக மட்டும் ஆசிரியர் இருத்தலும் அந்த மதிப்பெண் அட்டையில் கையெழுத்திடுபவராக மட்டுமே பெற்றோர் இருப்பதுமே இத்தகைய கேடுகளுக்கு முதன்மைக் காரணம்.

பல ஆண்டுகளாக மாணவர் தற்கொலைகள் நடந்து, நடந்து அது நம் மனத்துக்குப் பழக்கப்பட்ட செய்தியாகி விட்டது. அவை இன்றைக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. இப்போது கத்தி நம் பக்கம் திருப்பப் பட்டிருக்கிறது. அதன் முதல் குறி ஆசிரியர். இன்றைக்கு உமா மகேசுவரி. இன்னும் இருக்கும் வரிசையில் ஒவ்வொருவராய்க் குறி பார்க்கப்படுவர். இனியும் தாமதித்தால் நாம் நம் பிள்ளைகளை இழப்போம்; பிள்ளைகள் தம் குழந்தைமையை இழப்பார்கள்; நாடு ஒரு தலைமுறையையே இழக்கும். இனியாகிலும் சிந்திப்போமா நாம்?      
    


-    தி. பரமேசுவரி

Sunday, April 3, 2011

அன்புள்ள மாணவிக்கு ..

- தி. பரமேசுவரி

நன்றி: பூவரசி.காம்

அன்புள்ள ஹெலன்,

நலமே. நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். அதிசயமாக நம் ஆசிரியர் நமக்குக் கடிதம் எழுதுகிறாரே என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பலநாள் ஆதங்கமே இன்று கடித வடிகால் தேடிக் கொள்கிறது என்பதுதான் உண்மை. வேறு யாரிடமோ சென்று புலம்புவதை விடவும் என் மாணவர்களிடமே நான் என் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீ உன்னுடைய மேல்நிலைத் தேர்வுகளை முடித்து விட்ட களைப்பில் அயர்ந்திருப்பாய். கடைசித் தேர்வினை எழுதி முடிக்கையில் உன் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மகளே. நான் தேர்வுப்பணியில் இருக்கையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் எழுந்து ஓடும் யத்தனிப்பிலேயே இருந்தார்கள். தேர்வின் இறுதி மணி அடிக்கப்பட்ட உடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பெனத் தம் இருக்கையிலிருந்து எழுந்து ஓடிய பெண்கள், சற்று நேரத்துக்கும் பின் தங்கள் சக தோழிகளைப் பார்த்த பிறகுதான் வேகம் மட்டுப்பட்டு நின்றனர். ஒரு சிலர் பேனாவில் மிச்சமிருக்கும் நீல மையினை மற்றவர்கள் மீது தெளித்துத் தங்கள் விடுமுறை தொடங்கிய ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். ஓ... வென்ற காதைப் பிளக்கும் ஆரவாரம் எனக்குள்ளும் மகிழ்ச்சியின் சாறைக் கொஞ்சம் ஊற்றியது பெண்ணே.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ஹெலன்? பதினொன்றாம் வகுப்பின் முதல் நாளில் நம் வகுப்பில் ஆசிரியராய் நானும் மாணவர்களாகிய நீங்களும் கலந்து பேசிய அந்தத் தருணம்? நான் எப்போதும் என்னை ஆசிரியராக மட்டும் உணர்ந்ததில்லை மா. உங்கள் எல்லோருக்கும் நல்ல தோழியாகவும் இருக்க விரும்புவேன். அப்படி இருப்பதால் தானே என்னிடம் உங்கள் துயரங்களை, மகிழ்ச்சிகளை, வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் நீங்கள் எனக்கு குருவாகவும் ஆகிறீர்கள்.

ஒவ்வொரு நாளும் பாடம் பற்றிப் பேசியதோடு அன்றாட நிகழ்வுகளையும் பாடத்தோடு தொடர்புடைய பிற செய்திகளையும் நாம் கலந்து பேசியிருக்கிறோம் தானே. இது மொழி ஆசிரியருக்கே கிடைக்கக் கூடிய பெரும் பேறன்றோ! எத்தனை கதைகள்? எத்தனை நகைச்சுவை? நீங்கள் கவிதை என்று கொண்டு வரும் உங்கள் கிறுக்கல்கள்? ஆனால் போட்டி என்று வந்தால் தலை தெறிக்க ஓடுவீர்களே.. அப்போது பார்க்க வேண்டும் உங்கள் ஓட்டத்தை. சிரிப்பாணிதான். சரி, இப்படிக் கலந்து பேசும்போதெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களுக்கு. ஆனால் உங்களில் எவரையேனும் எழுப்பிப் படிக்கச் சொன்னால், கேள்வி கேட்டால் திரு திருவென்று விழிப்பீர்களே பார்க்கணும். அதிலும் படிக்கச் சொன்னால் வேண்டாம் மிஸ். கேர்ள்ஸ் இருக்காங்க என்று மாணவர்கள் வழிவதைப் பார்க்கணுமே.

உன் அப்பா அடிப்பதை, திட்டுவதை நீ தயங்கிக் கொண்டே ஒரு நாள் சொன்னாயே, நினைவிருக்கிறதாடா? அருணாவின் தந்தை இறந்து போனவுடன் எனக்குத் தொலைபேசி அழுதாயே. ரசாக்கும் வெற்றிவேலும் அடிக்கடி சண்டையிடுவதைக் கவலையுடன் என்னிடம் முறையிட்டாயே. உன்னைத் தொடர்ந்து உன் தோழமைகளும் என்னுடன் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் ஒரு சிலவற்றிற்கேனும் என்னால் சில தீர்வுகளை, ஆறுதல்களை அளிக்க முடிந்ததே அம்மா. ஒரு ஆசிரியராய் நான் பெருமை கொள்ளும் தருணங்கள் அவைதான்.

என்னைப் பொறுத்த வரையில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவரை மேலும் படிக்கச் செய்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை. படிப்பில் சிக்கல் இருக்கக் கூடிய மாணவர்களைப் படிக்கத் தூண்டுவது, அதன் உளவியல் காரணங்களைச் சந்திப்பது இவையே என் முன்னால் இருக்கக் கூடிய சவால்கள். அப்படித் தேடியபோது தானே நன்றாகப் படித்தும் சட்டெனப் பரபரப்பாகி, படித்ததையெல்லாம் மறந்து விடக் கூடிய, எந்நேரமும் பதட்டமான கிரிதரனைக் கண்டேன். அதைப் பற்றிக் கேட்டபோது சிறுபிள்ளை போல் அவன் அழுதது இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. பதறிப்போன என்னிடம் வீட்டு சூழலைச் சொல்லியபோது அதைக் கடக்கச் சில உத்திகளையாவது என்னால் கற்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சிதான்.

என் மாணவர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் எவ்வளவு நாட்களானாலும் தீராது. தேர்வுகளை நீ நல்ல முறையில் எழுதியிருப்பாய் என்பதில் எனக்கு ஐயம் எதுவுமில்லை. நீ எது குறித்தும் பதட்டமடையும் பெண்ணல்ல. உன் சிரித்த முகமும், டீச்சர் என்னும் உன் அழைப்பும் இன்னும் என் காதில் ஒலித்தபடி. சில சமயங்களில் எம் எதிர்பார்ப்புகளை உங்கள் மீது திணித்தபோதும் எங்கள் மீதுள்ள் அன்பின் காரணமாகப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்குத்தானே செய்கிறோம் என்ற முழக்கத்துடனே எங்கள் குற்ற உணர்வை ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கிறோம்.

இலக்கணப் பாடத்தை நான் ரசித்து, ருசித்துக் கற்பிக்க, மதிய உணவின் முட்டத்தில் நீங்கள் கண்கள் கிறங்க அரை மயக்கத்தில் இருக்க, கோபமும் சிரிப்புமாக வரும் எனக்கு. என் செய்வேன் பராபரமே! உங்கள் குழந்தைத்தனம் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போலவே உங்கள் வேகம் எனக்குச் சில சமயம் பயத்தைக் கொடுக்கும் மகளே. உடற்கவர்ச்சியில் காதலுறுவது, படிப்பை இழப்பது, வீட்டின் வசவுகளில் சட்டென்று அதிர்ச்சிகரமாக முடிவெடுப்பது என எத்தனை சம்பவங்கள்?

இங்கு தேர்வெழுதும் மாணவர்கள் கூட, வினாத்தாள் மிகச் சுலபமாகவே இருந்தும் சரியாக எழுதாமல் அடுத்தவர் விடைத்தாட்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. வருடம் முழுதும் உயிரைக் கொடுத்துக் கற்பித்தும் கூட இன்றைய மாணவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் என்னைக் குத்திக் கிளறியது. ஹெலன், மாணவர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறேனென்று நினைக்காதே. எங்கள் பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றாலும் இன்று பொதுவாகவே பார்த்தால், ஊடகங்களின் தாக்கத்தால் மாணவர் கல்வியின்பால் கவனம் செலுத்துவது குறைந்தது போலவே எனக்குத் தோன்றுகிறது. சமூகம், அரசு, கல்வி நிறுவனங்கள் என எல்லோருக்கும் இதில் பங்குண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு பக்கம் மாணவர்கள் மதிப்பெண்ணைத் துரத்திக் கொண்டு இயந்திரங்களைப் போல ஓடுவதைப் பரிதாபத்துடன் பார்ப்பது போலவே, படிப்பை அலட்சியத்துடன் அணுகும் மக்களையும் கவனிக்கிறேன்.

அறிவுரைகள் கசக்கும் பருவமிது. நாவைத் திறந்தால் பொய் தாராளமாகப் புழங்கும். சில நேரம் எங்களுக்காகக் கேட்டுக் கொள்வதே உங்கள் மனதில் ஏதோ ரசவாதம் செய்து உள்நுழைந்து வேலையும் செய்யத் தொடங்கும். போனாப் போகுதுன்னு உங்களுக்காகப் படிக்கிறேன் டீச்சர் என்று சொன்ன தியாகராஜனை, அவன் சொன்ன தோரணையை அவ்வப்போது நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அக்கறை, முயற்சி இதெல்லாம் குறைந்துகொண்டு வருகிறதோ எனத் தோன்றும். தேவையற்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறீர்களோ என்ற பயம் வரும். அதிகம் யோசித்தால் எனக்குத் தான் வயதாகிக் கொண்டிருக்கிறதென்றும் நினைத்துக் கொள்வேன்.

என்ன செய்வேன் மா? தம்பி நான் ஏது செய்வேனடா என்று பாரதி கையறு நிலையில் புலம்பியதைப் போலவே எங்களில் பலரும் உங்களை நினைத்துப் புலம்புகின்றனர். உங்கள் மன நிலையில், சூழலில் நின்று பார்க்கையில் உங்களில் பலரை நினைத்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. என் செய்ய.

சரிம்மா. இன்றைய சூழலில் ஆண், பெண் இருவருக்குமே கல்வி அவசியம்தான். இவையெல்லாம் நாம் வகுப்பில் பேசியவைதான். கோபிதான் டீச்சர் நீங்க எப்பவுமே கேர்ள்ஸுக்குத் தான் சப்போர்ட் பண்றீங்க ன்னு சண்டைக்கு வருவான் இல்லையா? அதனால், மேலே உயர்கல்வி வாய்ப்பு பற்றி யோசித்து வைத்துக் கொள். உன் வகுப்புப் பெண்களிடமும் அது பற்றிப் பேசு. தெளிவாக முடிவெடுங்கள். அதில் உங்களுக்கு என்ன சந்தேகமென்றாலும் எப்போதும் நான் காத்திருக்கிறேன். எனக்குத் தொலைபேசுங்கள். நன்றாகப் படியுங்கள்.

என்றும் உங்கள் நலம் நாடும்

உங்கள் ஆசிரியை.

Saturday, January 8, 2011

ஊழலும் கல்வியும்

சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்றைக்கு ஊழலும் லஞ்சமும் வேரூன்றியிருக்கிறது. மக்களால் அது சகஜமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரிய அளவில் செய்யப்பட்டால் ஊழல் என்றும் சிறியதாய் இருந்தால் அது லஞ்சமாகவும் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற தன்மையைக் காண முடிகிறது. பெரிய அளவில் செய்யப்படுகின்ற ஊழல்களை பெரும்பான்மை மக்கள் தட்டிக் கேட்க முடியாத மனநிலையில், இலவசங்களுக்கு ஆட்பட்டு, தங்களுக்கு எவ்வளவு கிடைக்குமென்ற எண்ணவோட்டத்தில் சிக்கியிருக்கின்றனர். சிறிய அளவில் பேசுபவர்களும் கூட ஒரு விதமான உயிர் பயத்துடன் செயல்படக் கூடிய கொடுமையான காலத்தில் நாம் வாழ்கிறோம். மனசாட்சியற்றவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரச் சாட்டையின் வீறல்கள் நம் எல்லோருடைய முதுகிலும் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.

ஊழல் வெளிப்பட்டுப் பேச்சரவம் கேட்கத் தொடங்கிப் பின் மெல்ல மெல்ல மக்களின் நினைவடுக்குகளில் இருந்து அது விலகிப் பின் வேறொரு ஊழல் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சென்ற ஆண்டு அந்த அளவுக்குக் கூட நேரமின்றிப் புற்றீசல் போல மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஊழல் நாகங்கள் கிளம்பிக் கொண்டேயிருந்ததில் எதைப் பற்றிப் பேசுவது, கவனிப்பது என்ற அளவில் மக்கள் குழம்பியே போயினர். ஊழல் செய்பவர்களும் கூட, இது வரையில் இந்தியாவில் ஊழலுக்காக யாரும் தண்டனை பெற்றதில்லை என்ற தைரியத்துடனும் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அதற்கு நிச்சயமாக ஒரு விலை உண்டு என்ற துணிச்சலுடனுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சீரழிவின் அடுத்த நிலை ஊழியர்கள் இதையே சிறிய அளவில் லஞ்சமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேல்நிலையில் இருப்பவர்களே இவர்களை ஊக்குவிப்பவர்களாகவும், ஆதரிப்பவர்களாகவும் அதே சமயத்தில் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டனை கொடுப்பவர்களாகவும் மண்ணுள்ளிபாம்பெனத் திரிந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம் இவர்களால் தொழிற்பட்டு, சமூகமயமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் காவல் துறைக்கு ஆளெடுப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் புழங்குவதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு நீதிபதி, இது இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் குழப்பங்களும் வன்முறையும் நிகழ்வதற்குக் காரணமாக அமையலாம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இது ஒன்றும் புதியதல்ல. இந்தியாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலுமே பணம் வாங்கிக் கொண்டு பதவிகளில் ஆட்களை நியமனம் செய்யும் வழக்கம் இருந்துதான் வருகிறது. அண்மைக்காலத்தில் அதன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே நீதிபதி அவர்கள் கூறிய சொற்களை நாம் சமூகத்தின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்திப் பார்த்தோமானால் எள் முனையளவு கூட மனசாட்சியற்ற ஒரு கூட்டத்தால் நாம் மேய்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறோமென்பது விளங்கும்.

நாட்டின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்ற காவல், சட்டம் ஆகிய துறைகள் இன்று முற்றிலும் சீரழிந்து விட்டன. ஆதாரத்துறைகளான மருத்துவம், கல்வி ஆகியவை வேரின்றி நிற்கின்றன. லஞ்சம் வாங்கியே போடப்பட்ட இந்தத் துறை சார்ந்த பதவிகள் இன்று லஞ்சம் கோரி நிற்கின்றன. அடிப்படை ஒழுக்கம், மனித நேயம், தகுதிகள் என் ஏதுமற்ற கூட்டமொன்று மேலே உட்கார்ந்து கொண்டு இன்னும் இன்னும் தனக்கேற்றபடி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் கிராமங்களில், அந்தந்த ஊரில் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஊரின் முக்கியப் பிரமுகர்களாக இருப்பர். அவர்களைக் கலந்துகொண்டே ஊரின் எல்லா விஷயங்களும் முடிவெடுக்கப்படும் காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்குக் காலம் மாறி விட்டது. ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்தே விலகி இருக்கின்றனர். மருத்துவர்கள் புரியாத மருந்துகளும் பரிசோதனைகளும் எழுதித் தந்துவிட்டு அதன் மூலமான வருமானத்தில் அயல்நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். காவல் நிலையங்களே எல்லாக் குற்றங்களின் கூடாரமாகத் திகழ்கிறது. நீதிமன்ற வளாகங்களே குற்றவாளிகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணமென்ன?

ஆசிரியப் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல் ஆர்வத்துடன் அறப் பணியாகக் கருதும் போக்கு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டனர். பாடம் கற்பிப்பதோடு அவர்கள் பணி நின்று விடாமல், மக்களோடு கலந்து புழங்கும் தன்மை அவர்களிடையே இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் கூட மாணவனின் வீடு சென்று அவனுடைய எதிர்காலம் பற்றிப் பெற்றோருடன் விவாதிக்கும், வழிகாட்டும் தன்மையை நாம் அவர்களிடம் பார்க்கலாம். படித்து முடித்த மாணவர்கள் கூட அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றனர். தங்கள் தங்கள் துறையில் வல்லவர்களாகவும், அறிவுத் தளத்தை விரிவுபடுத்தியபடியே அக்கால ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், ஆசிரியர்கள் மக்கள் விரோதப் போக்கின் பாதையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். எதற்கும் சிணுங்காத, கோபமற்றதோர் தலைமுறையை உருவாக்கியதில் இவர்களுக்கும் பெரும்பங்குண்டு. தொழிலாகப் பார்க்கும் பார்வையும் லாப நோக்கத்தோடு செயல்படும் தன்மையும் விலக்கத்தன்மையை ஏற்படுத்தி விட்டது. வகுப்பறையில் கற்பிக்காமல் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் வட்டித் தொழில் செய்வதும் இவர்களை அசுர வியாபாரிகளாகக் காட்டி நிற்கிறது.

தங்கள் துறை சார்ந்த அறிவையும் இழந்து, பணத்தை மட்டுமே கணக்கிட்டு எண்ணிக் கொண்டிருப்பதால் இவர்கள் மாணவர்களின் மரியாதையை இழந்து நிற்கின்றனர். இதைச் சற்றும் பொருட்படுத்தாத ஒரு வியாபாரக் கூட்டம் வேகமாக உருவாகிப் பெருகிக் கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்து வந்த ஆசிரியர்கள் இன்று மாணவர்களின் ரத்தத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகளாகி விட்டனர். அதனால்தான் நாளிதழ்களைத் திறந்தால், ஆசிரியர்களைப் பற்றிய மிக மோசமான செய்திகளை நாம் காண முடிகிறது. பள்ளியிலிருக்கும் பெற்றோர் என்று மிக உன்னதமாகக் குறிக்கப் பட்ட ஆசிரியர் இன்று பள்ளிக்குக் குடித்து விட்டு வருவதும், மாணவிகளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும், அருவருக்கத்தக்க மொழியைப் பயன்படுத்துவதும் என எந்தவித நெறிமுறையுமற்ற, மனசாட்சியற்ற ஒருவருமாக மாற்றம் பெற்று விட்டார் என்பது சமூகத்தின் மிக இழிந்த நிலையைச் சித்திரப் படுத்துவதாக உள்ளது.

இறைவனுக்குச் சமமாக வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சமூகம் இன்றைக்குத் தகுதியான ஆளுமை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழும்புமானால் அதன் பதில் நாம் அனைவரும் அறிந்ததே. இம்மாற்றத்திற்குக் காரணம், ஈசலெனக் கிளம்பியிருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதன் வழி அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியப் பயிற்சி மாணவர்களும் பெருகியிருப்பதே. மிகுதியான மாணவர்கள் வெளிவருகையில் அவர்களுக்கான வேலை இல்லாதபோது, அதனைப் பெற எவ்வளவும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதியும் இத்தகைய வழியில் பெறப்பட்டதே. லஞ்சம் கொடுத்துப் படித்து, லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் இந்தக் கூட்டம் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியிலேயும் சிந்தனையிலுமே திளைத்திருக்கின்றனர். எனவே அறிவை விரிவாக்குவதற்கான நேரமோ, ஆர்வமோ அவர்களிடம் இருப்பதில்லை. குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத இந்த மனிதர்களால் ஆசிரியப் பணி தன் மாண்பினை இழந்து நிற்கிறது. இன்றைக்கும் எஞ்சியிருக்கும் நிஜமான நல்லாசிரியர்கள் இவர்களுக்கிடையில் சிக்கித் தவித்து எள்ளி நகையாடப்பட்டு நிற்கின்றனர். இத்தகையோரால் உருவாக்கப்படும் மற்ற எல்லாத் துறை மக்களும் பெரும்பான்மையாக சீரழிக்கப்பட்ட சிந்தனைகளுடனே உலா வருகின்றனர்.

இப்படி, சமுதாயத்தின் அடிப்படையான துறைகள் பலவற்றிற்கும் இக்கருத்தை விரிவுபடுத்திப் பார்த்தால் இன்றைய படு மோசமான நிலையின் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான தீர்வு, நம் எல்லோரின் கையிலும் தான் உள்ளது. இனி விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கூட குற்றத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் நாளைய மன்னர்களை, வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றி விடலாம்.

- தி.பரமேசுவரி