Wednesday, March 9, 2011

மார்ச் 8 - பெண்கள் தினம்?!


மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது. ஆனால் எதுவுமே தோன்றும்போது எந்த நோக்கத்தோடு தோன்றியதோ அந்த நோக்கத்திலிருந்து விலகியும் பிறழ்ந்தும் முரண்பட்டும் போவது காலப்போக்கில் நிகழ்கிற மாற்றமாக இருக்கிறது. மதம், சமயம், சாதி, கடவுள், நாம் போற்றிய - போற்றும் இயக்கங்கள் என நிறுவனமயமாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் என்ன நேர்ந்ததோ அதுவே பெண்கள் தினத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது.
இன்றைக்கு, மேலைநாட்டினர் தாக்கத்தாலும் உலகமயமாதலின் சந்தைப் பொருளாதாரத்தாலும் கொண்டாடப்படும் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் போன்றதல்ல பெண்கள் தினம். உழைப்பாளிகள் தினம் போன்று உயர்ந்த நோக்கத்தோடு வெகு நாட்கள் போராடிப் பெற்ற தினமது.

ஆனால் மார்ச் 8 என்றால் ஒரு பக்கம் அழகுக் கொண்டாட்டங்கள் (Fashion Parade, etc.,), சமையல், கோலப் போட்டிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான குறைந்தபட்சத் தள்ளுபடிகள், ஆண்களா? - பெண்களா? விதத்திலான பட்டிமன்றங்கள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கேளிக்கைகள். மற்றொரு புறம், பெண் படைப்பாளிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகைகள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள், கூட்டங்கள். இந்த இரு மலைகளுக்கும் இடையில் இருக்கும் மடுவை எவரும் பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

அன்றைக்கு ஒரு நாளில் இதைப் பற்றிப் பேசக் கூடிய பெண்களில் பெரும்பாலானோர் வணிகவயப்பட்டவர்களாயும் பெண்கள் தினம் பற்றிய ஓர்மையின்றியும் செயல்படுபவர்களே! அது ஒரு கொண்டாட்ட நாள் அன்று. அது ஒரு அடையாள நாள். நாம் செய்ய வேண்டிய, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள். நம்மைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கிய, கேள்விகள் எழுப்பிய, களத்தில் இறங்கிப் போராடிய பெண்களை நினைவூட்டும் அடையாள நாள்.

முதன் முதலில் 1909ல் பெண்களுக்கான ஒரு நாளை வரையறை செய்ய வேண்டுமென்ற தீர்மானம், அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியால் கொண்டுவரப்பட்டு, தேசியப் பெண்கள் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, 1910ல் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாட வேண்டுமென்று பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பல நாடுகளும் முதன்முறையாக
1911 -ல் இது பற்றிக் கூடி விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913ல் மீண்டும் கூடி, மார்ச் 8ம் தேதியைப் பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இத்தகைய உன்னதமானதொரு நாளில் உளப்பூர்வமாக வரும் இளைய தலைமுறையினரின் மனத்தில் பெண்ணின் ஆற்றலை உணர்த்துவதான, தன்னில் சரிபாதியான பெண்ணை உணரச் செய்வதற்கான சிந்தனைகளைக் கிளர்த்த வேண்டும். பெண்கள் பெரும்பான்மையும் ஈடுபடாத (அறிவியல், கனரக வாகனங்கள் ஓட்டுதல், நடத்துநர், ஓதுவார், வரலாற்று ஆய்வாளர்), அல்லது அத்தி பூத்தாற்போல ஈடுபடுகின்ற பெண்களைக் கொண்டு அதில் அவர்கள் சந்தித்த சங்கடங்கள், பெற்ற வெற்றி, தீர்வு ஆகியவற்றை விவாதிப்பதுடன் நில்லாமல் பரவலாக அதனை எடுத்துச் சென்றால் இளந்தலைமுறைப் பெண்கள் அந்தப் புதிய பாதையில் நடை போடும் வாய்ப்பிருக்கிறது.

சமூகத்தில் வீட்டிலும் பயணத்திலும் அலுவலகத்திலும் பெண்கள் சந்திக்கக் கூடிய சிக்கல்களை, அரசு இயந்திரங்கள்வழி எதிர்கொள்ளக்கூடிய வன்முறைகளை நேர் நின்று சந்திக்கக் கூடிய ஆற்றல் பெறுவதற்கான வழிமுறைகளைப் பேசலாம்.

இது பற்றியெல்லாம் எந்த வகையிலும் சிந்திக்க வாய்ப்பில்லாத நாம் அன்றாடம் சந்திக்கின்ற, ஆனால் சிந்திக்காத நம் விளிம்புநிலைப் பெண் தோழியர்களிடம் பெண்கள் தினம் பற்றிய உணர்வுகளைக் கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான கருத்து / பொருளாதார / கல்விச் சுதந்திரம் இன்று வரையிலும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று  பெண்கள் பல துறைகளில் நுழைந்துள்ள போதும் அவர்களின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றாலும் அவற்றை இழித்துப் பேசுவதற்கான வாய்கள் எப்போதும் மூடுவதேயில்லை.

இவற்றுக்கான தீர்வாக எழுத்தறிவு, பொருளாதாரத் தற்சார்பு, எதிர்கொள்ளல், செயல்படுதல், சிறுமைகளை எதிர்த்தல் ஆகிய பண்புகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை ஊடக வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் இளந்தலைமுறைப் பெண்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்தல் போன்றவையே நம் தேவை.

ஐரோம் ஷர்மிளா சானு
தான் நம்பும் கொள்கைக்காக, சிறப்பு அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி மத்திய அரசை வேண்டி உறுதி தளராமல் பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து உண்ணாநிலை இருந்து வருகிறார் வடகிழக்கு மாநிலத்து ஷர்மிளா சானு.


ப்ரீஜா
13 ரூபாய் தினக்கூலி மட்டுமே சம்பாதிக்கும் தாய்க்குப் பிறந்த, பாதி நாட்கள் இரவு உணவு உண்ண முடியாத அளவுக்கு வறுமையில் வாடும் கேரளச் சிறுமி ப்ரீஜா சீனாவில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் தங்கமும் வெள்ளியும் வென்று திரும்பியிருக்கிறார். யானைகள் நிற்கும் காட்டுப்பாதை வழியே பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த ப்ரீஜா பயத்தில் ஓடிய ஓட்டமே இதற்குப் பயிற்சியாயிற்று. வெறும் கால்களில் ஓடிய சிறுமி பெற்ற பரிசுகளைக் கண்ட அவருடைய ஆசிரியர் காலணி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

வறுமையின் காரணமாகப் படிக்க வசதியின்றி, இலவசமாக அரசு இசைப் பள்ளியில் இசை பயின்று, விடா முயற்சியுடன் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஓதுவார் பணியில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த அங்கயற்கண்ணி.

இவர்களே இன்று நம் முன்னால் கவனப்படுத்தப்பட வேண்டியவர்கள்; ஆனால், நீரா ராடியாக்களும் ஊழலில் திளைக்கும் பெண் அரசியல்வாதிகளும் உடலை மூலதனமாக்கும் நடிகைகளுமே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு மக்களின் குறிப்பாக, பெண்களின் கவனத்தைக் கவருகிறார்கள். சிறுமைப்படுத்தப்பட்ட வடிவமான ஊடக விளையாட்டுகளும் தொடர்களும் வெற்று நிகழ்ச்சிகளும் பெண்களை மையப்படுத்தியே நிகழ்த்தப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொண்டு நம் பெண்கள் தின நிகழ்ச்சிகளை வடிவமைக்கவில்லையென்றால் மேலே சொன்ன வெற்று ஆரவாரங்களுடன் தோன்றிய காரணமே அழுந்தப் புதைக்கப்பட்டு எல்லா நாட்களையும் போன்ற ஒரு நாளாக மாறிவிடும் அபாயமிருப்பதை நாம் நூற்றாண்டுப் பெண்கள் நாளிலாவது சிந்தித்து, ஒவ்வொரு பெண்ணும் இதை மாற்றுவதற்கான எள்ளத்தனை முயற்சியையாவது இந்த நாளில் செய்ய வேண்டும்.

நான் ஒரு பெண்;
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்ந்து நிற்கும்
என்னைப் பாருங்கள்.
நிலப்பரப்பை
என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன்.
ஆயினும் இன்னும் நான் ஒரு கருவே (சிறுமுளையே)
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில்
நான் விதை
நான் செய்ய வேண்டுமென்றால்
எதையும் என்னால் செய்ய முடியும்
நான் வலுவானவள்!
நான் வெல்லப்பட முடியாதவள்!
நான் ஒரு பெண்!

-    (ஹெலன் ரெட்டியின் கவிதை)  
  
 (பெண்கள் தினத்தின் வெற்று ஆரவாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எண்ணியே ஒரு நாள் பிந்தி இந்தக் கட்டுரையை இன்று பதிவிடுகிறேன்) 

- தி. பரமேசுவரி

14 comments:

  1. ஒரு நாள் தாமதமாக பதிவு வந்தாலும் மிகவும் விரிவாகவும், ஆழ்ந்து சிந்திக்கும் வகையிலும் கட்டுரையை தொகுத்து இருக்கீங்க..!!! தங்களுக்கும் எமது மனமார்ந்த மங்கையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேடம்.

    ReplyDelete
  2. ஹெலன் ரெட்டியின் கவிதை பகிர்வு இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது இக்கட்டுரைக்கு..

    ReplyDelete
  3. ஷர்மிளா சானு, ப்ரீஜா, அங்கயற்கண்ணி, சாதிக்க துடிக்கும் ஒவ்வொருத்தருக்கும் இவர்கள் ஒரு முன்னுதாரணம். இத்தருணத்தில் இவர்களைப்பற்றிய தகவல் பகிர்வு. முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் எனலாம்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மிகச்சிறந்த பதிவு. ”நாட்டுக்கு ராணியாவதற்கு தடையேதுமில்லை வீட்டுக்குள் மனைவியாயிருப்பின் குறையொன்றுமில்லை” ரகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் உலவும் நாடு இது. முண்டாசுக்கவிஞர் கனவு கண்ட புதுமைப்பெண்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத்துவங்கியுள்ளனர். கனவு மெய்ப்படும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல பதிவு : ஒரு சில ஒத்த கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.பெண்கள் தினம் என்றதும் நீங்கள் குறிபிட்டது போல போட்டிகள் விளையாட்டுக்கள் நிகழ்சிகள் என் பரவசம் அடையும் சமுகத்தின் ஒரு பகுதி (கண்டிப்பாக பொருளாதரத்தில் சற்றேனும் உயர்ந்த மக்களே) இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று பெருமை கொள்கின்றனர். இன்னும் நம் நகர்புறம் தவிர்த்த பிற கிராம பகுதிகள் மற்றும் முன்னேற்றமடையாத பகுதிகளில் இன்னும் எத்தனை பெண்கள் இந்த பெண்கள் தினத்தில் அன்றாட சில ரூபாய் கூலிக்காக அன்றைய பொழுதை ஒரு வார நாளாக வரவு வைத்தனர் என்பதும ,ஏன் எத்தனை தாய்கள் அன்றும் வழமை போல தங்கள் பொழுதை சமையல் கூடத்தில் கழித்தனர்?என்றும் கனககிடவே முடியாது .அன்றய தினத்தில் எத்தனை வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடந்தது என்று பதியப்பட்டது என்று பார்த்தால் இது போன்ற கொண்டாட்டங்கள் கேலிக்கூத்தாகவும் கண்டிப்பாக பொருளாதாரம் சார்ந்த ஒன்றே என்பதையும் உணர முடியும். எனினும் என்றோ இசைக்க போகும் இசைக்காக இன்று வளர்ந்து வரும் வருங்கால புல்லாங்குழல் மூங்கில்களே இந்த பெண்கள் தினம் என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  7. மிகச் சிறப்பான கட்டுரை. மிகச் சரியான உண்மையை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி

    இப்படிக்கு

    வேலு.வெற்றிவேல்

    ReplyDelete
  8. உலகின் உன்னத சக்தி பெண்ணென்று கொட்டு முரசே..!

    வேறென்ன சொல்ல... விளையாட்டு மங்கையைத் தெரியும்.. மீதமிரு பெண் சிங்கங்களை தாங்கள் சொல்லித்தான் அறிகிறேன்... இதுவரை அறிந்து கொள்ளாமல் போனதற்கு வெட்கப் படுகிறேன்...

    நன்றி..!

    மோகனன்
    http://tamilkkavithai.blogspot.com

    ReplyDelete
  9. அடடா.. 8 ந்தேதி போட்டிருந்தா டைமிங்கா இருந்திருக்குமே..

    ReplyDelete
  10. >>>
    (பெண்கள் தினத்தின் வெற்று ஆரவாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எண்ணியே ஒரு நாள் பிந்தி இந்தக் கட்டுரையை இன்று பதிவிடுகிறேன்)

    குட்.. இதை நான் முதல்ல பார்க்கல.. சாரி

    ReplyDelete
  11. >>>நீரா ராடியாக்களும் ஊழலில் திளைக்கும் பெண் அரசியல்வாதிகளும் உடலை மூலதனமாக்கும் நடிகைகளுமே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு மக்களின் குறிப்பாக, பெண்களின் கவனத்தைக் கவருகிறார்கள்.

    மேடம்.. இந்த லைனில் உடல் கவர்ச்சியை மூல தனமாக்கும்.. என எழுதுவதே சரி..

    ReplyDelete
  12. பிரவீன் குமார், பதிவுக்கு நன்றி.

    காளீஸ்வரன், உங்கள் பின்னூட்டத்தை நான் எடுக்கவில்லை. இது எப்படி நிகழ்ந்ததென்று புரியவில்லை. அதையும் போடுவதற்கு முயற்சிக்கிறேன். நன்றி நண்பரே.

    நந்தா, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    வெற்றிவேல் தோழர், வணக்கம். எப்படி இருக்கீங்க? வருகைக்கு நன்றி.

    கணேசன், உங்கள் மனத்தில் பட்டதை அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

    செந்தில்குமார், வணக்கம், வாங்க. நீங்க சொன்னது ரொம்ப சரி. மாற்றி விடுகிறேன். திருத்தம் சொன்னதற்கு நன்றி.

    அடிக்கடி வாங்க நண்பர்களே.

    ReplyDelete
  13. இறைவன் படைப்புகளில் 'பெண்மை' என்பது மிக உன்னதமானது. அதனால்தான் நம் முன்னோர்கள் 'சக்தி' வழிபாடு மிக வலிமை வாய்ந்தது என்று கூறினார்கள். பாரதி ஒரு சக்திதாசன். பெண்மையைப் போற்றும் புனிதம் இந்த மண்ணுக்கு உண்டு. அதனை நினைவூட்டி நீங்கள் எழுதியுள்ள கட்டுரையை காலதாமதமாகத்தான் படித்தேன். வாழ்த்துக்கள். பாரதியின் புதுமைப் பெண்ணாக வாழும் தங்களுக்கு எல்லா நலனும் உண்டாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  14. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete