
மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது. ஆனால் எதுவுமே தோன்றும்போது எந்த நோக்கத்தோடு தோன்றியதோ அந்த நோக்கத்திலிருந்து விலகியும் பிறழ்ந்தும் முரண்பட்டும் போவது காலப்போக்கில் நிகழ்கிற மாற்றமாக இருக்கிறது. மதம், சமயம், சாதி, கடவுள், நாம் போற்றிய - போற்றும் இயக்கங்கள் என நிறுவனமயமாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் என்ன நேர்ந்ததோ அதுவே பெண்கள் தினத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது.
இன்றைக்கு, மேலைநாட்டினர் தாக்கத்தாலும் உலகமயமாதலின் சந்தைப் பொருளாதாரத்தாலும் கொண்டாடப்படும் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் போன்றதல்ல பெண்கள் தினம். உழைப்பாளிகள் தினம் போன்று உயர்ந்த நோக்கத்தோடு வெகு நாட்கள் போராடிப் பெற்ற தினமது.
ஆனால் மார்ச் 8 என்றால் ஒரு பக்கம் அழகுக் கொண்டாட்டங்கள் (Fashion Parade, etc.,), சமையல், கோலப் போட்டிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான குறைந்தபட்சத் தள்ளுபடிகள், ஆண்களா? - பெண்களா? விதத்திலான பட்டிமன்றங்கள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கேளிக்கைகள். மற்றொரு புறம், பெண் படைப்பாளிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகைகள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள், கூட்டங்கள். இந்த இரு மலைகளுக்கும் இடையில் இருக்கும் மடுவை எவரும் பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.
ஆனால் மார்ச் 8 என்றால் ஒரு பக்கம் அழகுக் கொண்டாட்டங்கள் (Fashion Parade, etc.,), சமையல், கோலப் போட்டிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான குறைந்தபட்சத் தள்ளுபடிகள், ஆண்களா? - பெண்களா? விதத்திலான பட்டிமன்றங்கள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கேளிக்கைகள். மற்றொரு புறம், பெண் படைப்பாளிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகைகள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள், கூட்டங்கள். இந்த இரு மலைகளுக்கும் இடையில் இருக்கும் மடுவை எவரும் பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.
அன்றைக்கு ஒரு நாளில் இதைப் பற்றிப் பேசக் கூடிய பெண்களில் பெரும்பாலானோர் வணிகவயப்பட்டவர்களாயும் பெண்கள் தினம் பற்றிய ஓர்மையின்றியும் செயல்படுபவர்களே! அது ஒரு கொண்டாட்ட நாள் அன்று. அது ஒரு அடையாள நாள். நாம் செய்ய வேண்டிய, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள். நம்மைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கிய, கேள்விகள் எழுப்பிய, களத்தில் இறங்கிப் போராடிய பெண்களை நினைவூட்டும் அடையாள நாள்.
முதன் முதலில் 1909ல் பெண்களுக்கான ஒரு நாளை வரையறை செய்ய வேண்டுமென்ற தீர்மானம், அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியால் கொண்டுவரப்பட்டு, தேசியப் பெண்கள் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
பிறகு, 1910ல் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாட வேண்டுமென்று பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பல நாடுகளும் முதன்முறையாக
1911 -ல் இது பற்றிக் கூடி விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913ல் மீண்டும் கூடி, மார்ச் 8ம் தேதியைப் பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இத்தகைய உன்னதமானதொரு நாளில் உளப்பூர்வமாக வரும் இளைய தலைமுறையினரின் மனத்தில் பெண்ணின் ஆற்றலை உணர்த்துவதான, தன்னில் சரிபாதியான பெண்ணை உணரச் செய்வதற்கான சிந்தனைகளைக் கிளர்த்த வேண்டும். பெண்கள் பெரும்பான்மையும் ஈடுபடாத (அறிவியல், கனரக வாகனங்கள் ஓட்டுதல், நடத்துநர், ஓதுவார், வரலாற்று ஆய்வாளர்), அல்லது அத்தி பூத்தாற்போல ஈடுபடுகின்ற பெண்களைக் கொண்டு அதில் அவர்கள் சந்தித்த சங்கடங்கள், பெற்ற வெற்றி, தீர்வு ஆகியவற்றை விவாதிப்பதுடன் நில்லாமல் பரவலாக அதனை எடுத்துச் சென்றால் இளந்தலைமுறைப் பெண்கள் அந்தப் புதிய பாதையில் நடை போடும் வாய்ப்பிருக்கிறது.
சமூகத்தில் வீட்டிலும் பயணத்திலும் அலுவலகத்திலும் பெண்கள் சந்திக்கக் கூடிய சிக்கல்களை, அரசு இயந்திரங்கள்வழி எதிர்கொள்ளக்கூடிய வன்முறைகளை நேர் நின்று சந்திக்கக் கூடிய ஆற்றல் பெறுவதற்கான வழிமுறைகளைப் பேசலாம்.
இது பற்றியெல்லாம் எந்த வகையிலும் சிந்திக்க வாய்ப்பில்லாத நாம் அன்றாடம் சந்திக்கின்ற, ஆனால் சிந்திக்காத நம் விளிம்புநிலைப் பெண் தோழியர்களிடம் பெண்கள் தினம் பற்றிய உணர்வுகளைக் கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான கருத்து / பொருளாதார / கல்விச் சுதந்திரம் இன்று வரையிலும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று பெண்கள் பல துறைகளில் நுழைந்துள்ள போதும் அவர்களின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றாலும் அவற்றை இழித்துப் பேசுவதற்கான வாய்கள் எப்போதும் மூடுவதேயில்லை.
இவற்றுக்கான தீர்வாக எழுத்தறிவு, பொருளாதாரத் தற்சார்பு, எதிர்கொள்ளல், செயல்படுதல், சிறுமைகளை எதிர்த்தல் ஆகிய பண்புகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை ஊடக வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் இளந்தலைமுறைப் பெண்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்தல் போன்றவையே நம் தேவை.
![]() |
| ஐரோம் ஷர்மிளா சானு |
![]() |
| ப்ரீஜா |
வறுமையின் காரணமாகப் படிக்க வசதியின்றி, இலவசமாக அரசு இசைப் பள்ளியில் இசை பயின்று, விடா முயற்சியுடன் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஓதுவார் பணியில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த அங்கயற்கண்ணி.
இவர்களே இன்று நம் முன்னால் கவனப்படுத்தப்பட வேண்டியவர்கள்; ஆனால், நீரா ராடியாக்களும் ஊழலில் திளைக்கும் பெண் அரசியல்வாதிகளும் உடலை மூலதனமாக்கும் நடிகைகளுமே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு மக்களின் குறிப்பாக, பெண்களின் கவனத்தைக் கவருகிறார்கள். சிறுமைப்படுத்தப்பட்ட வடிவமான ஊடக விளையாட்டுகளும் தொடர்களும் வெற்று நிகழ்ச்சிகளும் பெண்களை மையப்படுத்தியே நிகழ்த்தப்படுகின்றன.
இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொண்டு நம் பெண்கள் தின நிகழ்ச்சிகளை வடிவமைக்கவில்லையென்றால் மேலே சொன்ன வெற்று ஆரவாரங்களுடன் தோன்றிய காரணமே அழுந்தப் புதைக்கப்பட்டு எல்லா நாட்களையும் போன்ற ஒரு நாளாக மாறிவிடும் அபாயமிருப்பதை நாம் நூற்றாண்டுப் பெண்கள் நாளிலாவது சிந்தித்து, ஒவ்வொரு பெண்ணும் இதை மாற்றுவதற்கான எள்ளத்தனை முயற்சியையாவது இந்த நாளில் செய்ய வேண்டும்.
நான் ஒரு பெண்;
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்ந்து நிற்கும்
என்னைப் பாருங்கள்.
நிலப்பரப்பை
என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன்.
ஆயினும் இன்னும் நான் ஒரு கருவே (சிறுமுளையே)
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில்
நான் விதை
நான் செய்ய வேண்டுமென்றால்
எதையும் என்னால் செய்ய முடியும்
நான் வலுவானவள்!
நான் வெல்லப்பட முடியாதவள்!
நான் ஒரு பெண்!
(பெண்கள் தினத்தின் வெற்று ஆரவாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எண்ணியே ஒரு நாள் பிந்தி இந்தக் கட்டுரையை இன்று பதிவிடுகிறேன்)
- தி. பரமேசுவரி


