Showing posts with label பெண் கல்வி. Show all posts
Showing posts with label பெண் கல்வி. Show all posts

Tuesday, October 7, 2014

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்க..

நன்றி: பாவையர் மலர்


“காடா கொன்றோ நாடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லைவாழிய நிலனே” 

என்னும் புறநானூற்றுப் பாடல் மக்களின் தன்மையை, உணர்வை முதன்மைப்படுத்திப் பேசும் ஒரு பாடல். ஆணோ, பெண்ணோ மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வகையில் அமைந்திருக்கும் சமூகமே நல்ல நிலமாகக் கருதப்படும். பெண்கள் வாழப் பாதுகாப்பான நாடுகள் என்று அண்மையில் எடுத்த கணக்கீடு ஒன்றில் இந்தியா 161 ஆவது இடத்தில் இருப்பதே அந்நிலத்தின் பாதுகாப்பின்மையைச் சொல்லும்.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் வதைபடும், மரணிக்கும் பெண்கள், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை நாம் அறியக்கூடுவதில்லை. அது கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. சமூகத்தின் சிறிய அலகான குடும்பத்தில் பெண் எப்படிப் பொருட்படுத்தத்தக்கவளாக இல்லையோ, அதையே பெருஞ்சமூகமும் நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், தடைகளைத் தாண்டி, அவள் முன்னேறும் இவ்வேளையில் தன் உடல், அதன் சுதந்திரம், தடைகள், சமூகம் பெண்ணுடலின்மீது விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவும் ஆணுக்குக் கிடைக்கும் தடையற்ற சுதந்திரம், அவனுக்குப் புகட்டப்படும் பெண்ணுடல் பற்றிய பார்வை பற்றியும் ஆண், பெண் இருபாலருமே அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுவே ஒரு பாதுகாப்பான, ஆணும் பெண்ணும் நிகரென வாழும் நிலத்தை அமைக்க முடியும்.

பெண் மீதான வன்முறை குடும்பம், வெளி என இரண்டு இடங்களிலிருந்தும் நிகழ்கிறது. அது பெரும்பாலும் வெளிப்படுவதேயில்லை; வெளிப்படினும், அப்பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களும் கேள்விகளும் முற்றுமாக அவளை முடக்கிப் போடுவதாகவே உள்ளது. டிசம்பர் 2012 இல் தில்லியில் ஒரு 23 வயதுள்ள மருத்துவம் படிக்கும் மாணவியொருத்தி ஒரு தனியார் வாடகைப் பேருந்தில் ஆறு ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டாள். அந்த ஆண்கள் ஓர் இரும்புக் கம்பியால் அவளது பிறப்புறுப்பிலும் குடலிலும் ஏற்படுத்திய காயங்களால் பத்து நாட்கள் மருத்துவமனையில் நரகவேதனைப்பட்டுப் பின் உயிரிழந்தாள். அடுத்த சில நாட்களில் எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாணவி, பள்ளிக்குச் செல்லும் வழியில் குடிபோதையில் இருந்த ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டு, புதர்மறைவில் அவளுடைய உடலிருந்த செய்தி நாளிதழில் படிக்கக் கிடைத்தது. ஐந்து வயதுச் சிறுமி அவரது வீட்டருகில் வசித்த 23 வயதுடைய ஒருவனால் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டது ஏப்ரல் 2013 இல் நடந்தது. மருத்துவமனைத் தகவலின்படி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலும் மெழுகுவத்தியும் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் திணித்து நுழைக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும்போது, அரசு மேலும் சில சட்டங்களை இயற்றும்; அல்லது செயல்படுத்தப்படாமலிருக்கும் சட்டங்கள் மூலம் சிலருக்குத் தண்டனை வழங்கி, சட்டம் - ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு பாவனை காட்டும். சட்டம்போட்டு யாரையும் திருத்திட முடியாதென்பதை நாமறிவோம். பதிவாகும் குற்றங்களே மிகக் குறைவு; நம் மனஅமைப்பு அப்படி. பதிவாகும் குற்றங்களிலும் கூட, அந்தப் பெண்ணே குற்றம் சாட்டப்படுவாள்; இழிவாகப் பார்க்கப்படுவாள்; வாழ்வை இழந்து பலியாவாளேயன்றி வேறெதுவும் ஆகப்போவதில்லை. உதாரணமாக, சென்ற வருடம் 21,093 குற்றங்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எண்ணிக்கையில் பார்த்தால் நடப்பை விடவும் பதிவு மிகக் குறைவு. அதிலும் கூட 4072 குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. 11351 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மற்றவை இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாம்  பாலியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயாமல், தொடர்ணந்து அதனை மூடி மறைப்பதையோ, நடக்கும்போது உடன் எதிர்வினையாற்றுவதையோ மட்டுமே செய்து வருகிறோம். அரசும்கூட அப்போதைக்குக் கிடைக்கும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த முனைகிறதேயன்றி, மாற்றத்துக்கான எந்த முன்முயற்சியையும் எடுப்பதில்லை. கல்வியில் பின் தங்கியிருக்கும் பெண்களும் அவர்களின் சார்ந்திருக்கும் கீழ்நிலையும் ஆண்மையச் சமுதாயத்தின் ஆணாதிக்கப் பண்புமே முதன்மைக் காரணம். வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் பெண்களுக்குச் சம அதிகாரம் தரும் வகையிலுமான செயல்பாடுகளை அரசும் பெண் சார்ந்த இயக்கங்களும் ஆணையங்களும் முன்னெடுக்க வேண்டும். இளம்பருவத்திலேயே கல்வியிலேயே அந்த அறிவைப் புகட்டுவதே எளிதாகவும் காத்திரமானதாகவும் அமையும். பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போதே, அதற்குள் இருந்து வினையாற்றும் சாதி, பொருளாதாரம், மதம் ஆகியவற்றைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகம் பெண்ணுக்கு அவள் எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதைப் புகட்டியபடியே இருக்கிறது, மரணத்தருவாய் வ்ரையிலும். பெண், தன் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்; இரவு வேளைக்கு முன்னால் வீடு திரும்ப வேண்டும்; அவள் எப்போதும் தன் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் போன்று பல எல்லைக்கோடுகள் அவள் உடலைக் குறுக்கும்நெடுக்குமாய்க் கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருக்கின்றன. அவள் அதை மீறும்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறாள்; காரணமாக்கப்படுகின்றாள்.
அதே சமூகம், ஆண் குழந்தைகளையும் சிறு வயது முதலே, நீ ஆண்; கண்கலங்கக் கூடாது; பெண் உன் சொத்து, அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை; பெண்ணுடல் கவர்ச்சியானது, காமத்தைத் தூண்டக்கூடியது; அவள் உனக்கு அடங்கி இருக்க வேண்டியவள் என்பதையும் கற்பித்து மனத்தின் அடியாழத்தில் பதித்துவிடுகிறது. பெண்ணுடலை மையப்படுத்திய இத்தகைய ஆணாதிக்கக் கருத்தியல்களைப் பல பெண்களே நம்பும், பேசும் சூழலுமே இருக்கிறது. பெண்ணுக்கு, ஒரு புறம் கடவுள் தன்மையும் மற்றொரு புறம் அவளைக் காமப் பண்டமாகப் பார்ப்பதும் அதை வணிகமாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர், பெண் பிக்குணிகள் தனியாய் வழிகளில் செல்வதும் உறங்குவதும் கூடாது என்று விதிமுறைப்படுத்தினார் (Old Path White Clouds, Thich Nhat Hanh (2011) என்று கட்டுரையொன்றில் கு. அழகர்சாமி என்பவர் குறிப்பிடுகின்றார். 

பெண் குழந்தைகள் வளர வளர அவர்கள் அணியும் உடைகள் கட்டுப்படுத்தப்படுவதும் அவளுடைய செயல்பாடுகள் வரையறுக்கப்படுவதுமே இன்று வரையிலும் தொடர்வதும் அப்படியான சூழலிலும் கூட அவள் பாதுகாப்பற்றே ஒவ்வொரு நாளும் வன்முறையைச் சந்தித்து வருகிறாள் என்பதுமே பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்துகிறது. பாலியல் கல்வியில் இருக்க வேண்டிய கருத்தியல்களை நாம் இப்படிப் பார்க்கலாம் பெண், ஆணுடல்களை அறிதல், உடலின் செயல்பாடுகள், உணர்வுரீதியான வேறுபாடுகள், தன் உடல் மீதான உரிமை, சமூகம் அவ்வுடல் மேல் திணிக்கும் கருத்துகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இப்படி அமைத்துக்கொண்டோமானால் சமத்துவமான சமுதாயத்தைப் பற்றி நாம் கனவு காணலாம்.

குடும்பம், சாதி, மதம், ஊடகம் வாயிலாக பெண்ணுடல் வரையறுக்கப்படுகிறது; இழிவாகவும் அருவருப்பாகவும் காட்டப்படுகிறது; வணிகப் பொருளாக, போக நுகர்வாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தான் கவர்ச்சிகரமானவள் என்று நம்பும் பெண் குழந்தை தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்தி, அறிவுப் பாதையை விட்டு விலகி விடுகிறது. பெண் கவர்ச்சியானவள் என்று அறிவுறுத்தப்படும் ஆண் குழந்தை அவளை போகமாகவும் காமமாகவும் அடிமையாகவும் பார்க்கத் தொடங்குகிறது. பெண் சார்ந்த வன்முறைகளுக்கு ஊற்றுக்கண் இதுவே. இதனை மாற்றாமல் இந்தச் சிக்கல் தீரவே தீராது. இதைத்தான் இன்றைய பள்ளிக் குழந்தைகளிடம் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பெண் குழந்தைகள் கல்வி பயில வரும் இடத்தின் அடிப்படைக்கு மாறாகத் தன்னை அதீதமாக அலங்கரித்து வருவதும் அப்படி வருபவளை மாணவர்கள் இச்சைக்குரியவளாகக் கவனிப்பதும் அவளைக் கவர முயற்சிப்பதுமான இந்த நிகழ்வுகளில் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகின்றாள்; கண்டிக்கப்படுகின்றாள்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்விலும் வினோதினி விஷயத்திலும் இப்படி நடக்கும் பல சம்பவங்களில் குற்றம் கண்டிக்கப்பட்டாலும் கூட அந்தப் பெண்ணுக்கு இரவு 9 மணிக்குமேல் வெளியில் என்ன வேலை? ஆண் நண்பருடன் அவள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்? அவள் ஏன் ஆபாசமாக உடை அணிகிறாள்? ஆண்களைத் தூண்டுகிறாள்? வினோதினி அந்த ஆணை ஏமாற்றினார் தானே போன்ற பதிவுகளே மிக அதிகமாக ஊடகங்கள்வழி கிடைக்கின்றன. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தி. ஒரு பெண் தன் உடல்முழுவதும் நகை அணிந்து நள்ளிரவில் தெருவில் தனியாக நடக்கும்போதே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நம்புவேன் என்று காந்தியடிகள் சொன்னது இன்னமும் சாத்தியப்படாத சூழலில், அவளுடலில் நகைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை; சாதாரணமாகக்கூட அவள் நடக்க முடியாத காலத்தில்தான் இன்றும் நாம் வாழ்கிறோம். அதனை மாற்றவே பாலியல் கல்வி குறித்தும் வலியுறுத்துகிறோம். ஏமாற்றும் ஆண், பெண்ணுக்கெல்லாம் ஆசிட் வீச்சு தண்டனைதான் என்று நாம் நியாயப்படுத்தினால், இன்று பலருக்கும் வெந்தமுகம்தான் அடையாளமாக இருக்கும். பெண்ணின் உடல் கவர்ச்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அடிப்படைவாதிகள், சீருடையில் செல்லும் சிறு குழந்தைகளும் ஓரிரு வயதுக் குழந்தைகளும் கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளைத் தங்களுக்குள்ளாவது கேட்டுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தையின் பாலியல் உறுப்பு ஒருவனுடைய காமத்தைத் தூண்டுகிறது என்றால், நாம் கற்றதும் பெற்றதும் என்ன?

2011இல் புகார் செய்யப்பட்ட 24,206 பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6% 10 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 7% என்று தேசீயக் குற்றப் பதிவு பீரோவின் அறிக்கையொன்று கூறுகிறது. பெண்ணுடல் என்பதே ஆளப்படவேண்டியவொன்று என்று ஆணாதிக்கச்சமூகம் கட்டமைத்திருக்கும் பிரக்ஞையே இதன் அடிச்சரடு. இதற்குப் பெண்களைக் காரணமாக்குவதும் பெண் பொதுவெளிக்கு வருவதைக் குற்றம் சாட்டுவதும் உண்மையை மூடி மறைக்கும் உத்தி. தன் உடல் பற்றிய அறிவற்ற பெண்களும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி விடுகின்றனர்.  ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்தது பெண்ணுடலைப் பண்டப்படுததுவதை உணராமல், அதன் பாதையிலேயே பயணிக்கின்றனர். தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாமல் கதாநாயகனின் உதவியை நாடும், குளிர்ப்பிரதேசத்தில் கூடக் குறைவான உடையணிவிக்கப்படும் கதாநாயகியை எந்தக் கேள்வியுமின்றி வெகு இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் பலர் தானும் அதுவாகப் பாவித்து, அப்பண்புகளையே தங்கள் பண்பாய் ஏற்றுக்கொண்டு ஆணின் கடைப்பார்வைக்குக் காத்திருந்து இரையாகிறார்கள். 

பெண்ணுக்கு இத்தகைய வன்முறைகள், பொதுவெளியில் மட்டும்தான் நிகழ்கிறது என்று நாம் நினைத்தோமானால், அது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் கதையே. எத்தனை வன்மத்தைப் பெண் வெளியில் சந்திக்கிறாளோ, அதற்குச் சற்றும் குறையாமல் பாதுகாப்பான இடமென்று சொல்லப்படும் வீட்டில் உறவுகளிடமிருந்தும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்தும் கூடச் சந்திக்க நேர்கிறது. படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறக் கூடாது என்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் இச்சாதனங்களை மிகுதியாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதில் சில சிக்கல்கள் இருப்பதும் உண்மை. ஆனால், அவர்களைப் பயன்படுத்தாமல் தடுக்க முடியாது மாறாக பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் நாம் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். 
பாலியல் கல்வி என்பது உடல் சார்ந்தது; அதைப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மாணவர்கள் கெட்டுப் போவார்கள் என்னும் மக்களின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தை மாற்ற அரசு தன்னாலான முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். அதற்குப் பிற இயக்கங்களின் உதவிகளையும் கூட நாடலாம். உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உணர்வு, உரிமை சார்ந்த விஷயங்களும் பேசப்பட வேண்டும். மேலும் இக்கல்விக்குத் தொடர்புடைய பயிற்சிகளைப் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அளிக்க வேண்டும். உண்மையில், அவர்களுக்குத்தான் இது அதிகமும் தேவை. அரைகுறை அறிவுடனும் தெளிவற்ற சிந்தனையோடும் அவர்கள் மாணவர்களை அணுகினால் எதிர்மறையான விளைவுகளே மிகும். அதிகமான அலங்காரத்துடனும் தலையலங்காரத்துடனும் பள்ளிக்கு வந்த ஒரு மாணவியை ஆசிரியர், “இப்படியே நீ இருந்தா, சீக்கிரம் எவன் கூடயாவது ஓடித்தான் போவே. ஒழுங்காப் படிச்சு முன்னேர்ற வழியப் பாரு” என்று திட்டிக்கொண்டிருந்ததைக் கேட்டு வருத்தப்பட்ட சம்பவமும் உண்டு. உண்மையில், அந்த மாணவி நன்றாகப் படித்து முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறாரெனில், இப்படிப்பட்ட மாணவிகளை மென்மையாகவும் கவனமாகவுமே கையாளவேண்டும். அன்றி நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது. பெற்றோரும் ஆசிரியர்களும் இப்படி வசைபாடும்போது இத்தகைய எளிய மனம் படைத்த, புரிதல் இல்லாத மாணவிகள் தவறான திசையில் வழிதவறிச் சென்று ஏமாந்து போகிறார்கள். நம் அன்பு, காப்புணர்ச்சி ஆகியவற்றின் மூலமே அவர்களைக் காக்க முடியும்.

வீட்டிலும் பெற்றோர் நல்ல நண்பர்களாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் மனம் விட்டுப் பேச முடியும். தனக்கு நேர்வதை வெளிப்படையாகப் பேசும் குழந்தைகளை நம்மால் காப்பாற்ற முடியும். சமூகத்தின் வக்கிரத்துக்கும் பலியாகி, அதைத்தன் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் சுருங்கும் குழந்தைகள் பின் எப்படி மலர முடியும்? குழந்தைகளுடன் புழங்கும் ஒவ்வொருவரும் தாமும் இவ்வயதைக் கடந்தவர் என்பதை நினைவில் கொண்டு, அவ்வயதில் ஏற்படும் சலனத்தை அறிவின் துணை கொண்டு கடக்க வேண்டும். மனத்தில் ஏற்படும் பதின்பருவக் கிளர்ச்சிகளை நேர்மறையாய் மடை மாற்ற வேண்டும். ஆண்குழந்தைகளுக்குத் தான் ஆண் என்ற பிம்பத்தைச் செதுக்காமலும் ஆண்வேலை பெண்வேலை என்னும் பிரிவினையை உணர்த்தாமலும் வளர்த்தல் நலம். 

ஆண், பெண்களுக்கான தனித்தனிப் பள்ளிகளை மெல்ல மெல்ல அகற்றி, இரு பாலரும் கலந்து படிக்கும் பள்ளிகளைக் கொணரும்போது, பாலியல் கவர்ச்சி இன்றி நல்ல நண்பர்களாய்ப் பழகும் தன்மை மேலோங்கும். பெண்களை மதிக்கின்ற, பாலியல் பண்டமாகப் பார்க்காத, வன்முறையைப் பிரயோகிக்காத ஆணாய்த் தன் பிள்ளை வளர வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் உறுதி பூண வேண்டும்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று பாரதி பாடி நெடுநாட்கள் கடந்து விட்டன. அதை நனவாக்க நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

- தி.பரமேசுவரி

Sunday, June 16, 2013

வெட்டப்படும் சிறகுகள்

நன்றி பாவையர் மலர்


ஐம்பூதங்களால் ஆன இந்த உலகத்தின் இயக்கத்தைச் சாத்தியப்படுத்தியது ஆணும் பெண்ணுமான உயிரிகள். ஆனால் இந்த உயிரிகளிடமும் பேதத்தைக் கற்பிக்கிறது மனிதச் சமூகம். ஒருவரை உயர்த்தியும் ஒருவரைத் தாழ்த்தியும் காலங்காலமாய்ச் சொல்லி வருகிறது. அதுவே மனித மனத்தில் விதைத்து முளைக்கிறது. 

சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படும் இவ்வேற்றத்தாழ்வுகள் இரு உயிரிகளிடமும் வெவ்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. ஆணின் மனத்தில் தான் உயர்ந்தவன், கண் கலங்காதவன், பெண்ணைக் கட்டிக் காப்பாற்றப் புறப்பட்டவன் என்ற பிம்பத்தையும் பெண் மனத்தில், தான் தாழ்ந்தவள், ஆணால் காப்பாற்றப்பட வேண்டியவள், சட்டென்று உடைந்து விடக்கூடியவள் என்ற பிம்பத்தையும் வளர்த்தெடுக்கின்றது. சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்படும் இப்பிம்பங்ளே ஆணாய்ப் பெண்ணாய் மாற்றம் பெறுகிறார்கள்; அதிலிருந்து வெளிவர முடியதபடி உருவேற்றப்படுகிறார்கள். உயர்ந்த ஞானத்தையும் அறிதலையும் கொண்ட மானிடர் கூட இதிலிருந்து விலக முடியாமல் சிக்குண்டு தடுமாறுவதையும் நாம் அறிவோம்.

பெண் அடிமைப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரையுமான நீண்ட நெடிய போராட்டத்தையோ, ஏற்பட்டுள்ள மாறுதல்களையோ, இன்றைக்கும் மாறாமலே இருக்கின்ற பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளையோ பற்றி இங்கு பேசப் போவதில்லை. ஆனால் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்னும் பாரதியின் வரிகள் இன்று பெரும்பான்மையும் நனவாகி, பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் காட்சி ஒவ்வொரு நாளும் நமக்குக் காணக் கிடைக்கிறது.

பெண்கள் வீட்டுப் படியிறங்குவதே பாவமென்று பேசிய வேடிக்கை மனிதர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆனாலும் பெண்கல்வியில் சில அளவீடுகளும் கற்பிதங்களும் இன்றைக்கும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இங்கு சில அவதானிப்புகளையும் நோக்கலாம். சங்க இலக்கிய காலத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு காப்பியம் கூடப் பெண்ணால் எழுதப்பட்டதில்லை. நீதி இலக்கியக் காலத்திலும் சிற்றிலக்கிய, பக்தி கால கட்டத்திலும் எழுதிய பெண்களின் பட்டியலை இரு கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம். எனில், இடைக்காலத்தில் இவ்வளவு குறைவாகவேவா பெண்கள் எழுதியிருப்பார்கள்? அல்லது அவை அழிக்கப்பட்டனவா? எழுதாமல் இருந்தார்களா? கல்வி மறுக்கப்பட்டதன் விளைவா? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை.  கலை, அரசியல், அறிவியல், தத்துவம், அறவியல் என அனைத்துத் துறைகளிலுமான பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதை நாம் கவலையுடனே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏன் ஏற்பட்டது?

இன்றைய நவீன காலத்திலும் கூட, ஒரு பெண் எவ்வளவு படிப்பது என்பது அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அவள் படிப்பதற்குரிய செலவுக்கும் திருமணத்துக்கான செலவுக்கும் இடையிலான பண மதிப்பீடுகள் அவளுடைய கல்வியில் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கிறது. இசுலாமியச் சமூகத்தில் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பினும் கூட மொத்தப் பெண் சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையில் இன்னும் ஓர் இடைவெளி இருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளியில் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கும் மேல் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இசுலாமிய சமூகத்தில் பெண் பத்தாம் வகுப்பைக் கடப்பதே பெரிதெனக் கருதப்படுகிறது. கிராமத்தில் இன்றைக்கும் மொத்தப் பள்ளியில் 5 அல்லது 10 மாணவிகளே தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பு வரையிலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இடைநின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அண்மையில் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதையும் அவர்களே முன்னணியில் இருப்பதையும் முதல் மதிப்பெண்களை அடைவதையும் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்திருப்பர். உண்மை, ஆனால் இந்த எண்ணிக்கை, கல்லூரி செல்லும், மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என்ற தொடர்ச்சியில் பார்க்கும்போது குறைந்துகொண்டே வந்து மிகக் குறைவான பெண்களே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர்.

பொருளாதாரத்தால் படிக்க முடியாமல் போகும் சூழலோடு பெண் என்பதாலேயே அதிகம் படிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியமும் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஒரு மாணவி தனித்துப் பள்ளிக்கு வரக் கூடியசூழல் சரிவர இல்லாத நிலையில் அரசு சார்பாக மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டுதோறும் வழங்கி வருவது மிகச் சிறப்பானதொன்று. கிராமத்தில் அது எத்துணைப் பயனுடையதென்பதைச் சொல்லில் விளக்க முடியாது. அதே போல நகரத்தில் படிக்கும் மாணவியரை விடவும் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்குச் சிக்கல்கள் அதிகம். ஏழைப் பெற்றோருக்குப் பிறக்கும் பெண்கள் படிக்கும் ஆர்வமிருப்பினும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் குடும்பத்துக்கான பலியீடுகளாகவே ஆகி விடுகின்றனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க 12 ஆம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். வீட்டுக்கு வந்து, வேலைக்குப் போன அம்மா வருவதற்குள் சமையலை முடிக்கப் பரபரக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தும் ஏதும் பெரிதாகச் செய்ய முடியாத நிலையில் மனம் வெம்புகிறது. வீட்டில் ஆண் குழந்தையும் இருந்து பெண் குழந்தையும் இருந்து ஒருவர் மட்டுமே படிக்கும் சூழலிருப்பின் யாருக்குப் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. உடனடியாக, அந்தப் பெண் குழந்தைக்கே கல்வி மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றைக்கும் இந்த நிலைதான்.

நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பெண் திடீரென்று சில நாட்கள் பள்ளிக்கு வர மாட்டாள். திடீரென்று மாறுதல் சான்றிதழ் கேட்டு அவளுடைய பெற்றோர் வருவர். அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக படிப்பு நிறுத்தப்படும். இப்படியான பல குழந்தைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன்.

பூங்குழலி, நான் பணியாற்றிய பள்ளியில் மேல்நிலையில் படித்த ஒரு மாணவி; இன்றைக்கு அவள் சென்னைப் பல்கலையில் கணிதத்தில் மேல்பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். தமிழ் வழியில் படித்த அந்தப் பெண், ஆங்கில வழியில் கல்லூரியில் கணிதம் படித்து முதலிடம் பெற்று, சென்னைப் பல்கலையில் நடந்த மேல்பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தாள். பள்ளியிலேயே பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் முன்னணியில் நிற்பாள். இனிமையான குரல் வளம் கொண்டவள். கல்லூரியிலும் தேசிய மாணவர் நலத் திட்டத்தில் கல்லூரி அளவில் தலைவியாக இருந்து செயல்பட்டவள். இன்றைக்கு, கணித முதுகலையில் 90% தேர்ச்சியுடன் இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிறாள். இந்தக் கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. எல்லாப் பெற்றோரையும் போலவே அவளுடைய பெற்றோரும் நகரத்துக்குக் கல்விக்காக அனுப்ப அஞ்சியபோது சில நாட்கள் பட்டினி கிடந்து, ஆசிரியர்கள் பலர் சென்று பேசிய பின்னரே அவள் பெருநகரத்தின் ஒரு கல்லூரி விடுதியில் அடைக்கலமானாள். அப்போதும் அஞ்சியபடியே இருந்த அவளுடைய பெற்றோருக்கு இன்றைக்கு அவளுடைய மதிப்பெண்கள் பெரும் இளைப்பாறுதல். அவளுடைய படிப்புச் செலவு முழுவதையும் அவள் தன் மதிப்பெண்களின் உயர்வில் அடைந்தாள். சிறபபான மாணவியாக, இவள்தந்தையும் தாயும் என்னோற்றான்கொல் என்னும் வாழ்த்துகளுடன் ஆசிரியர் மெச்சும் மாணவியாக இன்னும் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். தன் நிலையைத் தக்க வைக்க அவள் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் படிக்கிறாள்.

இங்கே, மற்றொரு பெண்ணைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அவள் அபிராமி. பூங்குழலியைப் போலவே சிறப்பாகப் படிக்கக் கூடிய அறிவான பெண். ஆனால் அவளுடைய பெற்றோர் அவளுடைய அழகைக் கண்டு அஞ்சினர். பத்தாம் வகுப்பிலேயே நிறுத்த முயன்றபோது ஆசிரியர்களின் உதவியால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். இப்போது தேர்வெழுதியிருக்கிறாள். நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள். ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தன் தந்தையை காப்பாற்ற நினைக்கும் அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். ஆசிரியர், அவளிடம் அரசே இலவசமாகக் கொடுக்கும் கல்லூரிக் கல்வி பற்றியும் இலவச விடுதி போன்ற வசதிகளைப் பற்றியும் பல நாட்கள் எடுத்துச் சொல்லியும் அவள் தன் தந்தைக்காகத் தன் படிக்கும் ஆர்வத்தைக் கருக்கிக் கொண்டாள்.

இங்கே பூங்குழலிகளை விடவும் அபிராமிகளே அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மிகச் சுமாராக, அல்லது படிக்காமலே அலப்பறை செய்தாலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், உத்தியோகம் புருஷ லட்சணம். அதற்காகவாவது படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டாவது படிக்க வைக்கப்படுகிறார்கள்.