
- தி. பரமேசுவரி
நன்றி: அம்ருதா
மீன்களை மட்டுமே ஓவியம் தீட்டுவதென்று
உறுதி செய்துகொண்ட ஒருத்தி
வண்ணங்களைக் குழைத்துத் தூரிகையால் தீட்டுகிறாள்
வெவ்வேறு வடிவங்களில்
வேறுவேறு வண்ணங்களில்
மென்மையாய் நடக்கும் அவள் பாதங்கள் கூட
மணல்துகள்களில் வரையத் தொடங்குகின்றன மீன்களை
கண்களுக்குத் தீட்டும் மையாலும்
மீனாகவே உருமாற்றுகிறாள் கண்களை
ஆகாயத்தில் மிதக்கும் மேகங்களையெல்லாம்
மீனாகவே காணும் அவள் கண்கள்
காற்றிலும் கூட மீன் வரையத் துவங்கும் நாளில்
அவள் மாறத் தொடங்கியிருந்தாள்
ஒரு கடற்கன்னியென.