Thursday, March 15, 2012

நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் நலவுரிமைச் சங்கம்

நன்றி : தடாகம்.காம்

தமிழர் x தெலுங்கர் என்ற இனச்சிக்கலைப் பற்றிப் பேசிய கட்டுரையை ம.பொ.சி x திராவிடம் என்ற குறுகிய பார்வையில் சுருக்கிப் பார்த்து விட்டு, தன் உளச்சுருக்கம் அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்களின் சிறு புள்ளிகளைப் பெரிதாக்கிப் பேசுவதன் மூலம் வரலாற்றை உணர முடியாது. சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றைத் திசை திருப்புவதாயும் திரிப்பதாகவுமே அமையும்.

தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் கட்சியின் நீட்சிக் கட்சிகள் எவ்வாறு இன்றுவரை தமிழ் நாட்டை, தமிழர் நாட்டைத் தம் வேட்டைக்காடாய் மாற்றிக் கையகப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதே கட்டுரையின் நோக்கம். அதைப் பேசாமல், திசை திருப்பும் துரோகத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது.

படித்த இளைஞருக்கு வேலை தேடித் தரும் நிறுவனமாகவே இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஹ்யூம் துரையால் தோற்றுவிக்கப்பட்டது. அப்படித் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு உயர் உத்தியோகங்களைப் பெற்றுத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியாகும்.

1874 இல் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேலாளராகப் பணி புரிந்த டபிள்யூ. ஆர். கார்னிசு, இந்தியர்கள் பங்கேற்கத் திறந்து விடப்பட்டுள்ள எல்லாக் குடிமையியல் உயர்துறைகளிலும் பிராமணத்தன்மை பெரும்பான்மையாக நிறைந்தோங்கி உள்ளது என்று குறிப்பிடுகின்றார். அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வலுவாக அமர்ந்திருந்ததை, சென்னை மாகாண அரசு 1912 இல் வெளியிட்ட எண்ணிக்கையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அரசுப் பதவி ஆயினும், நிலவுடைமையாளராயினும், அக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு ரெட்டிகளும் நாயுடுக்களுமே அதிகார சாதிகளாக விளங்கினர். இவர்களுக்குப் பின்னர்தான் மற்ற சாதியாரும் இனத்தாரும் இருந்தனர். பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்கவும் சமூகத்தில் பிற்பட்ட நிலையில் இருந்த சாதியாரை மேம்படுத்தவும் 1854 இலேயே ஆங்கிலேயர் பல திட்டங்களைக் கொண்டு வந்தனர். இலவசப் பள்ளிப்படிப்பு, பள்ளிக்கட்டணத்தில் சலுகை, ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி துவங்க நிதியுதவி, சாதி அடிப்படையில் எந்தவொரு மாணவனுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என்னும் ஆணை எனப் பல வகையிலும் பின் தங்கியிருக்கும் மக்களை முன்னேற்றும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

1909 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது ஒடுக்கப்பட்ட, கீழ்சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சர். பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம். நாயரும் கருத்துச் சொன்னார்கள். ஆனால் இவர்களால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சிதான் இன்றைக்கு வகுப்புவாரி ஆணையை வெளியிட்டுச் சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனர் அல்லாதாருக்குச் சமூக நீதி கிடைக்க வழி செய்ததாகப் போற்றப்படுகின்றது?!

1915 இல் மாநகராட்சித் தேர்தலில் பிட்டி தியாகராய செட்டி ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டதும், மத்திய சட்ட மேலவைக்கான தேர்தலில் பனகல் ராஜா கே.வி. ரங்கசாமி அய்யங்காரால் தோற்கடிக்கப்பட்டதும் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் பெற்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தோல்வியுற்று அதிகாரமின்றி இருந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில், இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் எனும் மத்திய டெல்லி சட்ட மேலவைத் தொகுதித் தேர்தலில் டி. எம். நாயரும் (தரவா மாதவன் நாயர்) வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி எனும் பார்ப்பனரிடம் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனர் x தெலுங்கர் பகைதான் நீதிக் கட்சியின் தோற்றத்துக்கு அடிகோலியதேயன்றி, பிற்பட்ட அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்த அக்கறையினால் அல்ல. அக்காலகட்டத்தில் முதலியார், பிள்ளை போன்ற ஒரு சில முன்னேறிய சாதிகள் தவிர ஏனைய தமிழ்ச்சாதிகளில் பெரும்பாலோர் கல்வியற்றவர்களாய், நிலமற்றவர்களாய், தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாயும் விழிப்புணர்வு அற்றவர்களாகவும்  இருந்தனர். இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட தெலுங்கர், பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் என்னும் முரணைத் தூக்கிப் பிடித்துத் தமிழர்களைப் பிரித்தனர். ஆனால் ஆந்திர மகாசபை என்னும் பெயரால் அவர்கள் ஒன்றிணைகையில் கட்சி, சாதி என எள்ளளவும் பேதமின்றி இன அடிப்படையில் தம் உரிமைகளையும் அதற்கும் மேலான பதவிகளையும் பெற்று அனுபவித்தனர்.

ஆந்திர மகாசபையின் கீழ் தெலுங்கர் பார்ப்பனர்/பார்ப்பணரல்லாதார் என்ற வேறுபாடின்றி இணைந்திருந்தனர். சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகளை மொழியும் இனமும் வென்றெடுத்தன. ஆந்திரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டுமென தேசாபிமானி பத்திரிகை வலியுறுத்தியது. தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி 1908 இலிருந்து ஆந்திரா என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது.

1913 ஆம் ஆண்டு பார்டிலா என்ற இடத்தில் முதல் ஆந்திர மாநாடு நடைபெற்றது. பட்டாபி சீதாராமையா, வல்லூரி சூரிய நாராயணா, கொண்டா வெங்கடப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1914 இல் இரண்டாவது ஆந்திர மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. அய்யடேவரா, காலீஸ்வரா ராவ், அய்யங்கி வெங்கட ராமண்ணயா ஆகியோர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டனர்.

1915 ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது மாநாட்டிற்குப் பனகல் ராஜா (பனங்கன்டி ராமராய நிங்கார்) தலைமையேற்றுத் தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.

1916 இல் காக்கிநாடாவில் நடந்த நான்காவது ஆந்திர மகாசபைக் கூட்டத்திற்கு மச்சேர்ல ராமச்சந்திர ராவ் தலைமையேற்றார். ஏ.பி. பாத்ரோ (அனெப்பு பரசுராம் தாஸ் பாத்ரோ), கே. வெங்கிட ரெட்டி நாயுடு ஆகியோர் தனித் தெலுங்கு நாடு உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பங்கு பெற்ற தெலுங்கர், தாம் துவக்கிய தனி ஆந்திர இயக்கத்தில் அப்பாகுபாடு ஏதுமின்றிப் பங்கு கொண்டதையும் தனித் தெலுங்கு நாட்டைத் தீவிரமாக வலியுறுத்திய பனகல் அரசர், ஏ.பி. பாத்ரோ, கே.வி. ரெட்டி நாயுடு ஆகியோர் நீதிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கு பெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நான்கு மொழியினர் கலந்து வாழ்ந்த சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரையுள்ள 17 ஆண்டுகள் ஆட்சி செய்தது நீதிக் கட்சி. அதன் ஆட்சியில் பதவி வகித்த ஐந்து முதல்வர்களும் தெலுங்கர்கள்.

1919 ஜனவரியிலேயே எழுத்தர்கள், துணை தாசில்தார், சார்பு நீதிபதிகள் நியமனத்தின்போது தமிழ், தெலுங்கு மொழியினருக்கும் அவரவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டுமென ஆணை 128 (2) பிறப்பித்திருந்தது. மேலும் மொத்தப் பதவிகளில் பார்ப்பனர்கள் 50% மேற்படாமலும் பார்ப்பனரல்லாதார் / முஸ்லீம்கள் 50%  குறையாமலும் நிரப்பப்பட வேண்டுமெனவும் அதே அரசு ஆணை தெரிவித்திருந்தது. இது சாதி மற்றும் இன ரீதியாக உரிமை பேசிய அரசாணை.

1921இல் நீதிக்கட்சி கொணர்ந்த அரசாணை 613 இல் சாதி, மத ரீதியாகத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அனுப்ப வேண்டுமென்று மாற்றம் செய்தது. தமிழ்/தெலுங்கர் என்ற விகிதாச்சாரம் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. இன அடிப்படை தகர்க்கப்பட்டு தெலுங்கர் பெரும்பான்மை எண்ணிக்கையில் நுழைய வழி வகை செய்யப்பட்டது. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தராத, தெலுங்கர்களை மட்டுமே கொண்ட நீதிக்கட்சியிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

1922 ஆகஸ்ட் 15இல் இரண்டாவது இடஒதுக்கீட்டு அரசாணை 658 ஐ பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி வெளியிட்டது. தெலுங்கு மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தெலுங்கர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதுடன் முன்னரே அங்கு பணியிலிருக்கும் பிறமொழியாளர் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்பது இதன் சாராம்சம். இந்த ஆணையுடன் தெலுங்கு, ஒரியப் பகுதிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

1919 இல் ஆங்கில அரசு வெளியிட்டதும் 1922இல் பனகல் ராஜா வெளியிட்ட சிறப்பாணையுமே இன அடிப்படையிலானவை. இவை தெலுங்கு, ஒரிய மொழிப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1929இல் சுப்பராயன் தலைமையிலான அரசு, இன அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றிப் பேசாத 1921 அரசாணையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது. இன்று வரையிலும் மாநில அரசு அளவில் உள்ள உயர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் பிற மொழியாளர் அமர்வதும் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதும் தொடர்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழி பேசும் இனத்தார்க்கே முதன்மை என்னும் சமூக நீதி சாத்தியப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மண்ணின் மைந்தர்களே வேலை வாய்ப்புகளில் முதன்மைப்படுத்தப்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் அறியாத பிற மொழியாளர் புற்றீசலென நுழைவதும் அடிப்படை மொழியறிவுக்கான தேர்வினைக் கூட இரண்டு வருடத்திற்குள் எழுதினால் போதுமென்னும் விதிக்குள் புகுந்து கொண்டு மொழியறியாமலே இங்கு சுகமாய்க் காலம் தள்ளுவதும் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே புறக்கணிக்கப்படும் அவலமும் தொடர்கிறது.

தன் சிந்தனையில், செயலில் தெலுங்கு மக்களின் நலனையே எண்ணியிருந்த நீதிக்கட்சியினர் தங்களை ஏமாற்றிய வரலாற்றையறியாமல் இன்றைக்கும் அவர்களைச் சமூக நீதி காத்தவர்களெனப் பாராட்டி, நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தத் தயாராகி விட்டார்கள் மரத் தமிழர்கள். உண்மையில் நாம் ஏமாந்ததற்குத்தான் நூற்றாண்டு விழா என்பது எத்தனை கேலிக்கூத்து.

புதிதாய் உருவாக இருந்த ஆந்திர மாநிலத்தின் தலைநகராய்ச் சென்னை இருக்க வேண்டும் என்று மாநகராட்சியில் பேசியவர் பிட்டி தியாகராய செட்டி. நீதிக்கட்சி தொடங்கியபோது அதன் கொள்கைப் பரப்புக்காக மூன்று மொழிகளில் நாளிதழ்களைத் தொடங்கினர்.

தமிழ் - திராவிடன்
தெலுங்கு - ஆந்திரப் பிரகாசிகா
ஆங்கிலம் - ஜஸ்டிஸ்

இந்த மூன்று நாளிதழ்களில் தெலுங்கு மொழியில் நடத்தப்பட்ட நாளேடு ஆந்திர என்னும் இனப்பெயர் கொண்டிருக்க, தமிழ் மொழியில் நடத்தப்பட்ட ஏடு மட்டும் திராவிட என்னும் மாயச் சொல்லைப் பெற்றிருக்கிறது. இதுதான் தெலுங்கர்களின் சமூக நீதி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பேசும் மாகாணத்தில் தோன்றிய நீதிக் கட்சி (ஜஸ்டிஸ் கட்சி?!) தன் கொள்கைப் பிரகடனத்தில் பிரதேச மொழிகளின் - அம்மொழி பேசும் இனங்களின் உரிமைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். மொழி வேறுபாடுடைய மக்களை இணைக்கும் எந்தக் கட்சியும் இது பற்றித் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சிறு குறிப்பு கூட அக்கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் இல்லை. தெலுங்கு மொழி தவிர்த்த பிற மொழி பேசுவோரின் உரிமை குறித்து அக்கட்சி மௌனம் சாதித்தது என்பதே கசப்பான உண்மை.

பார்ப்பனருக்கு எதிரான கட்சி என்ற பொய்க்குள் மறைந்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா சட்டமானது. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழ் நாட்டுக் கோயில்களை விடுவிக்கவே இச்சட்டமென்று சொல்லி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அறநிலையக் குழுவின் முதல் தலைவராக சர். டி. சதாசிவ அய்யரும் சிறப்பு உறுப்பினராக என். கோபால்சாமி அய்யங்காரும் நியமிக்கப்பட்டனர்.

1920 முதல் 1937 வரை நீதிக்கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு வந்த ஐவர் தெலுங்கர். இடையில் தமிழரான டாக்டர் சுப்பராயன் நீதிக்கட்சியைச் சேர்ந்தவராயினும் அக்கட்சி ஆதரிக்காத அக்கட்சியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் அரசின் அரசியல் பிரிவான சுயராஜ்யக் கட்சியின் ஆதரவோடுதான் முதல்வரானார்.

அன்று நீதிக்கட்சியின் ஆட்சியில் வலிமைப்பட்ட தெலுங்கர் ஆதிக்கம் இன்று வரை தமிழ் நாட்டின் வணிகம்/ஊடகம்/அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியே வருகிறது. 2010-இல் தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் என்ற அமைப்பின் கீழ் நடந்த மாநாட்டில் அப்போதைய தி.மு.க அமைச்சர்களான நெப்போலியன், கே.என். நேரு, ஆற்காடு வீராசாமி, அன்றைக்குக் காங்கிரஸ் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டனர். இன்றைக்கும் ஆந்திர, தமிழக எல்லையில் சிக்கல்கள் தீர்க்கப்படாமலும் ஆந்திரத்துடனான நீர்ச்சிக்கல் பேசப்படாமலும் சிக்கல்கள் சிக்கல்களாகவே நீடிப்பதில் மேற்சொன்ன அரசியலுக்குப் பெரும்பங்கு உண்டு.

ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகலென்ன நீதி

என்ற பாரதி பாடல் இங்கும் பொருத்தமாய் அமைவது விசித்திரம்தான். இன்றும் மற்ற மாநிலத்தவர் தம் சிக்கல்களைப் பேசக் கட்சி வேறுபாடின்றி இணைவதும் தமிழகத்தில் அது சாத்தியப்படாமலே இருப்பதும் கவனிக்க வேண்டியவை. தமிழகம் அனைவருக்குமான பொதுச்சத்திரமா? அல்லது தமிழருக்கான வாழ்விடமா? இனியாகிலும் சிந்திப்போம்.

-    தி.பரமேசுவரி

3 comments:

  1. Vaealaaru than nam mugavari. , athai arumaiyaaga intha katturaiyin moolam koduthu ullirkal.Paaraattukkal

    ReplyDelete
  2. நன்றிகள். சிறப்பானதும், என்னைப் பொறுத்தவரைப் புதியதுமான பல செய்திகள் கொடுத்தீர்கள். வரலாறு சார்ந்து மேலும் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

    அன்புடன்,
    முனைவர். வேல். பாண்டியன்.

    ReplyDelete
  3. கட்டுரை மிகவும் சிந்திக்கத் தூண்டியது. உண்மையில் இதை வெளிப்படையாக பேசுவதைவிட கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் விசம்போல நாமும் அப்படியே ஒவ்வொரு துறையில்ம் களையெடுத்துவிட்டால் நல்லது. ஆனால் அதற்கான ஆதாயம் தேடாத , இனர்வுணர்வுமிக்க அரசியல் தலைவர்களை எங்கு தேடுவது?

    ReplyDelete